திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
துன்புறும் யோபு. ஓவியர்: பெர்ல் பெர்ல்மூட்டர். காப்பிடம்: நெதர்லாந்து.

யோபு (The Book of Job)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]


1 இப்போது கூப்பிட்டுப்பாரும்!
யார் உமக்குப் பதிலுரைப்பார்?
எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?


2 உண்மையில், அறிவிலியைத்தான் எரிச்சல் கொல்லும்;
பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்.


3 அறிவிலி வேரூன்றுவதை நானே கண்டேன்;
ஆனால் உடனே அவன் உறைவிடத்தில் வெம்பழி விழுந்தது,


4 அவனுடைய மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை;
ஊர்மன்றத்தில் அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்;
மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.


5 அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்;
முள்ளுக்கு நடுவிலுள்ளதையும் அவர்கள் பறிப்பர்;
பேராசைக்காரர் அவன் சொத்துக்காகத் துடிப்பர்.


6 ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது;
மண்ணினின்று இன்னல் விளையாது.


7 நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல,
துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.


8 ஆனால், நான் கடவுளையே நாடுவேன்;
அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.


9 ஆராய முடியாப் பெரியனவற்றையும்
எண்ணிலடங்கா வியக்கத்தக்கனவற்றையும் செய்பவர் அவரே.


10 மண் முகத்தே மழையைப் பொழிபவரும்
வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.


11 அவர் தாழ்ந்தோரை மேலிடத்தில் அமர்த்துகின்றார்;
அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.


12 வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்;
அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.


13 ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில் சிக்க வைக்கின்றார்;
வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன; [1]


14 அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்;
நண்பகலிலும் இரவில்போல் தடுமாறுகின்றனர்.


15 அவர் வறியவரை அவர்களின் வாயெனும் வாளினின்று காக்கின்றார்;
எளியவரை வலியவரின் கையினின்று மீட்கின்றார்.


16 எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு;
அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.


17 இதோ! கடவுள் திருத்தும் மனிதர் பேறு பெற்றோர்;
ஆகவே, வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர். [2]


18 காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே;
அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே. [3]


19 ஆறு வகை அல்லல்களினின்றும் அவர் உம்மை மீட்பார்;
ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.


20 பஞ்சத்தில் சாவினின்றும்
சண்டையில் வாள் முனையினின்றும் உம்மை விடுவிப்பார்.


21 நாவின் சொல்லடியினின்றும் நீர் மறைக்கப்படுவீர்;
நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.


22 அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்;
மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.


23 வயல்வெளிக் கற்களோடு உம் உடன்படிக்கை இருக்கும்;
காட்டு விலங்குகளோடும் நீர் அமைதியில் வாழ்வீர்.


24 உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்;
உம் மந்தையைச் சென்று காண்கையில் ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.


25 உமது வித்து பெருகுவதையும்,
உமது வழிமரபினர் நிலத்துப்
புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.


26 பழுத்த வயதில் தளர்வின்றிக் கல்லறை செல்வீர்,
பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.


27 இதுவே யாம் கண்டறிந்த உண்மை!
செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுணர்வீர்.


குறிப்புகள்

[1] 5:13 = 1 கொரி 3:19.
[2] 5:17 = நீமொ 3:11; எபி 12:5-6.
[3] 5:18 = ஓசே 6:1.


அதிகாரம் 6[தொகு]

துன்புறுவோரே தம் துயர் அறிவார்[தொகு]


1 யோபு கூறிய பதிலுரையாவது:


2 ஓ! என் வேதனைகள் உண்மையாகவே நிறுக்கப்பட்டு,
என் இன்னல்கள் அனைத்தும் சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!


3 கடற்கரை மணலிலும் இப்போது அவை கனமானவை;
பதற்றமான என் சொற்களுக்குக் காரணமும் அதுவே;


4 எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் தைத்துள்ளன;
அவற்றின் நஞ்சு என் உயிரைக் குடிக்கின்றது;
கடவுளின் அச்சுறுத்தல்கள் எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.


5 காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க, அது கனைக்குமா?
காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?


6 சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா?
துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?


7 அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது;
அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!


8 ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்?
நான் ஏங்குவதை இறைவன் ஈந்திடமாட்டாரா?


9 அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா?
தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?


10 அதுவே எனக்கு ஆறுதலாகும்;
அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்;
தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்;
ஏனெனில் தூயவரின் சொற்களை மறுத்தேனில்லை.


11 நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது?
என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?


12 என் வலிமை கல்லின் வலிமையோ?
என் சதை வெண்கலத்தாலானதோ?


13 இதோ! என்னில் உதவி ஏதுமில்லை;
என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.


14 அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர்
எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.


15 காய்ந்துவிடும் காட்டாற்றுக் கண்ணிகள் போலும்
சிற்றாறுகள் போலும் வஞ்சித்தனர் என் உறவின் முறையார்.


16 அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்;
அவற்றின் மேற்பகுதியை உறைபனி மூடி நிற்கும்.


17 வெப்பக் காலத்திலோ அவை உருகி மறைந்துபோம்;
வெயில் காலத்திலோ அவை இடந்தெரியாது ஒழியும்.


18 வணிகர் கூட்டம் தன் வழியை மாற்றுகின்றது;
பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.


19 தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்;
நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.


20 அவர்கள் நம்பியிருந்தனர்; ஆனால், ஏமாற்றமடைகின்றனர்;
அங்கு வந்தடைந்தனர்; ஆனால் திகைத்துப் போகின்றனர்.


21 இப்போது நீங்களும் எனக்கு அவ்வாறே ஆனீர்கள்;
என் அவலம் கண்டீர்கள்; அஞ்சி நடுங்குகின்றீர்கள்.


22 எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ,
உம் செல்வத்திலிருந்து என் பொருட்டுக்
கையூட்டுக் கொடும் என்றோ சொன்னதுண்டா?


23 எதிரியின் கையினின்று என்னைக் காப்பாற்றும் என்றோ,
கொடியவர் பிடியினின்று என்னை மீட்டருளும் என்றோ
நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?


24 அறிவு புகட்டுக! அமைதியடைவேன்;
என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!


25 நேர்மையான சொற்கள் எத்துணை ஆற்றலுள்ளவை?
ஆனால், நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?


26 என் வார்த்தைகளைக் கண்டிக்க எண்ணலாமா?
புலம்புவோரின் சொற்கள் காற்றுக்கு நிகராமா?


27 திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்;
நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.


28 பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்;
உங்கள் முகத்திற்கெதிரே உண்மையில் பொய் சொல்லேன்,


29 போதும் நிறுத்துங்கள்; அநீதி செய்ய வேண்டாம்!
பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே;


30 என் நாவில் அநீதி உள்ளதா?
என் அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா?


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை