திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
யோபின் மனைவி அவரைக் கழுவுகிறார். ஓவியர்: ஆல்ப்ரெக்ட் ட்யூரெர் (1471-1528). காப்பகம்:ஃப்ராங்க்ஃபுர்ட், செருமனி. ஆண்டு: 1500-1503.

யோபு (The Book of Job)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]


1 மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே?
அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே?


2 நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும்,
கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும்,


3 வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன;
இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.


4 படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்!
இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன்,


5 புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின என் உடலை;
வெடித்தது என் தோல்; வடிந்தது சீழ்.


6 என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன;
அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.


7 என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்;
என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.


8 என்னைக் காணும் கண் இனி என்னைப் பார்க்காது.
என் மேல் உம் கண்கள் இருக்கும்; நானோ இரேன்.


9 கார்முகில் கலைந்து மறைவதுபோல்
பாதாளம் செல்வோர் ஏறி வாரார்.


10 இனி அவர்கள் தம் இல்லம் திரும்பார்;
அவர்களது இருப்பிடம் அவர்களை அறியாது.


11 ஆகையால், நான் என் வாயை அடக்கமாட்டேன்;
என் மனத்தின் வேதனையை எடுத்துரைப்பேன்;
உள்ளக் கசப்பில் முறையிடுவேன்.


12 கடலா நான்? அல்லது கடலின் பெருநாகமா?
காவல் என்மீது வைக்கலானீர்!


13 "என் படுக்கை ஆறுதல் அளிக்கும்;
என் மெத்தை முறையீட்டைத் தணிக்கும்" என்பேனாகில்,


14 கனவுகளால் என்னைக் கலங்க வைக்கின்றீர்;
காட்சிகளால் என்னைத் திகிலடையச் செய்கின்றீர்.


15 ஆதலால் நான் குரல்வளை நெரிக்கப்படுவதையும்,
வேதனையைவிடச் சாவதையும் விரும்புகின்றேன்.


16 வெறுத்துப்போயிற்று;
என்றென்றும் நான் வாழப்போவதில்லை;
என்னைவிட்டுவிடும்.
ஏனெனில் என் வாழ்நாள்கள் காற்றுப்போன்றனவே.


17 மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை ஒரு பொருட்டாய் எண்ண?
உமது இதயத்தை அவர்கள்மேல் வைக்க? [*]


18 காலைதோறும் நீர் அவர்களை ஆய்ந்தறிய?
மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க?


19 எவ்வளவு காலம் என்மேல் வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்?
என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட என்னை விடமாட்டீரா?


20 மானிடரின் காவலரே! நான் பாவம் இழைத்துவிட்டேனா?
உமக்கு நான் செய்ததென்னவோ?
என்னை உம் இலக்காக ஆக்கியதேன்?
உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்?


21 ஏன் மீறலை மன்னியாதது ஏன்?
என் அக்கிரமங்களை அகற்றாதது ஏன்?
இப்பொழுதோ நான் மண்ணுக்குள் உறங்கப் போகின்றேன்;
நீர் என்னைத் தேடுவீர்; நான் இல்லாதுபோவேன்.


குறிப்பு

[*] 4:17 = திபா 8:4; 144:3.

அதிகாரம் 8[தொகு]

கடவுளின் மாறாத நீதி[தொகு]


1 அதற்குச் சூகாயனான பில்தாது கூறிய பதில்:


2 எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்?
உம் வாய்ச்சொற்கள் புயல்காற்றைப் போல் இருக்கின்றன.


3 இறைவனே நீதியைப் புரட்டுவாரா? எல்லாம் வல்லவரே நேர்மை பிறழ்வாரா?


4 உம் புதல்வர்கள் அவருக்கெதிராய்ப் பாவம் செய்ததால்,
குற்றப்பழியின் ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்.


5 ஆனால், நீர் இறைவனை ஆர்வத்துடன் நாடினால்,
எல்லாம் வல்லவரிடம் இறைஞ்சினால்,


6 நீர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தால்
இப்பொழுது கூட அவர் உம்பொருட்டு எழுந்திடுவார்,
உமக்குரிய உறையுளை மீண்டும் ஈந்திடுவார்.


7 உம்முடைய தொடக்கம் எளிமையாக இருப்பினும்,
உம் வருங்காலம் வளமைமிகக் கொழிக்கும்.


8 முன்னோரின் தலைமுறையைக் கேட்டுப்பாரும்;
அன்னாரின் தந்தையர் ஆய்ந்ததை அறியும்.


9 நேற்றுத் தோன்றிய நாம் ஒன்றும் அறியோம்;
நிலமிசை நம் வாழ்நாள் நிழலைப் போன்றது,


10 அவர்களன்றோ உமக்கு அறிவித்து உணர்த்துவர்!
புரிந்த வார்த்தைகளை உமக்குப் புகட்டுவர்!


11 சேறின்றி நாணல் தழைக்குமா?
நீரின்றிக் கோரை வளருமா?


12 இன்னும் பசுமையாக வெட்டாது இருக்கையிலே
எல்லாப் புற்களுக்கு முன்னே அவை வாடிடும்.


13 இறைவனை மறப்போரின் கதி இதுவே;
இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்;


14 அவர்களின் நம்பிக்கை முறிந்துபோம்;
அவர்கள் சார்ந்திருப்பது சிலந்திக் கூட்டையே.


15 யாராவது அவ்வீட்டின்மீது சாய்ந்தால், அது நில்லாதுபோம்;
யாராவது அதை பற்றிப் பிடித்தால், அது நிலைத்திராது.


16 பகலவன்முன் பசுஞ்செடி போன்றோர் அவர்கள்;
படரும் தோட்டமெங்கும் அவர்களின் கிளைகள்.
17 கற்குவியலில் பின்னிடும் அவர்களின் வேர்கள்
கற்களிடையே இடம் தேடும்.


18 அவர்கள் தம் இடத்திலிருந்து எடுபட்டால்,
'உங்களை நான் கண்டதேயில்லை' என உதறிவிடும் அவ்விடம்.


19 பார்! அவர்கள் தம் வாழ்வில் கண்ட இன்பம் இதுவே;
மண்ணினின்று மற்றவர் முளைத்தெழுவர்.


20 இதோ! கறையிலாதவரை இறைவன் கைவிடுவதில்லை;
காதகர்க்கு அவர் கைகொடுப்பதுமில்லை.


21 இருப்பினும், உம் வாயைச் சிரிப்பாலும்,
இதழ்களை மகிழ்வொலியாலும் நிரப்புவார்.


22 உம்மைப் பகைப்பவர் வெட்கத்தால் உடுத்தப்படுவர்;
தீயோர் கூடாரம் இல்லாது போகும்.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை