திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து
யோபின் மனைவி அவரைக் கடிந்துகொள்கிறார். ஓவியர்: ஜோர்ஜ் தெ லா தூர் (1593-1652). ஓவியம் வரைந்த காலம்: 1625-1650. காப்பகம்: பிரான்சு.

யோபு (The Book of Job)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

கடவுளது நீதியின் மேன்மை[தொகு]


1 யோபு அதற்கு உரைத்த பதில்:


2 உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்;
ஆனால், மனிதர் இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி? [1]


3 ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால்,
ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா?


4 இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்;
ஆற்றலில் வல்லவர்;
அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி,
வளமுடன் வாழ்ந்தவர் யார்?


5 அவர் மலைகளை அகற்றுவார்;
அவை அதை அறியா;
அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார்.


6 அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று;
அதிரும் அதனுடைய தூண்கள்.


7 அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்;
அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.


8 தாமே தனியாய் வானை விரித்தவர்,
ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.


9 வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும்,
கார்த்திகை விண்மீன்களையும்,
தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே. [2]


10 உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும்,
கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே.


11 இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில்
நான் பார்க்க முடியவில்லை;
நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை.



12 இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்?
யாது செய்கின்றீர் என அவரைத் கேட்பார் யார்?


13 கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்;
அவரடி பணிந்தனர் இராகாபின் [3] துணைவர்கள்.


14 இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்?
எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்?


15 நான் நேர்மையாக இருந்தாலும் அவருக்குப் பதிலுரைக்க இயலேன்;
என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன்.


16 நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும்,
என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.


17 புயலினால் என்னை நொறுக்குவார்;
காரணமின்றி என் காயங்களைப் பெருக்குவார்.


18 அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது,
கசப்பினால் என்னை நிரப்புகின்றார்.


19 வலிமையில் அவருக்கு நிகர் அவரே!
அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்?


20 நான் நேர்மையாக இருந்தாலும், என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்;
நான் குற்றமற்றவனாக இருந்தாலும், மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும்.


21 குற்றமற்றவன் நான்; என்னைப்பற்றிக் கவலையில்லை;
என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன்.


22 எல்லாம் ஒன்றுதான்; எனவேதான் சொல்கின்றேன்:
'அவர் நல்லாரையும் பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்'.


23 பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது,
அவர் மாசற்றவரின் நெருக்கடி கண்டு நகைப்பார்.


24 வையகம் கொடியோர் கையில் கொடுக்கப்படுகின்றது;
அதன் நீதிபதிகளின் கண்களை அவர் கட்டுகின்றார்.
அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்?


25 ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன என் வாழ்நாள்கள்;
அவை பறந்து செல்கின்றன;
நன்மையொன்றும் அவை காண்பதில்லை.


26 நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்;
இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும்.


27 'நான் துயர் மறப்பேன்; முகமலர்ச்சி கொள்வேன்;
புன்முறுவல் பூப்பேன்' எனப் புகல்வேனாயினும்,


28 என் இடுக்கண் கண்டு நடுக்கமுறுகின்றேன்,
ஏனெனில், அவர் என்னைக்
குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன்.


29 நான்தான் குற்றவாளி எனில்,
வீணே ஏன் நான் போராடவேண்டும்?


30 பனிநீரில் நான் என்னைக் கழுவினும்,
சவர்க்காரத்தினால் என் கைகளைத் தூய்மையாக்கினும்,


31 குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்;
என் உடையே என்னை வெறுத்திடுமே!


32 ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும்,
வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும்
என்னைப்போல் அவர் மனிதர் இல்லை.


33 இருவர்மீதும் தம் கையை வைக்க,
ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே.


34 அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து!
அப்போது மிரட்டாது என்னை அவரைப்பற்றிய அச்சம்!


35 அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது;
அப்படிப் பேசும் நிலையில் நான் இல்லையே இப்போது.


குறிப்புகள்

[1] 9:2 = யோபு 4:17.
[2] 9:9 = யோபு 38:31; ஆமோ 5:8.
[3] 9:13 இராகாபு = தீங்கை விளைவிக்கும் ஒரு நீர்வாழ் விலங்கு.


அதிகாரம் 10[தொகு]


1 என் உள்ளம் என் வாழ்வை அருவருக்கின்றது;
என் ஆற்றாமையைத் தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்;
உள்ளத்தில் கசப்பினை நான் உரைத்திடுவேன்.


2 நான் கடவுளிடம் சொல்வேன்: என்னைக் கண்டனம் செய்யாதீர்;
என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம் என்னவெனச் சாற்றுவீர்.


3 என்னை ஒடுக்குவதும் உமது கையின் படைப்பை இகழ்வதும்
உலுத்தர் சூழ்ச்சியில் உளம் மகிழ்வதும் உமக்கு அழகாமோ?


4 ஊனக் கண்களா உமக்கு உள்ளன?
உண்மையில், மானிடப்பார்வையா உமது பார்வை?


5 மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்?
மனிதரின் வாழ்நாள் அனையவோ உம் ஆண்டுகள்?


6 பின், ஏன் என் குற்றங்களைத் துருவிப் பார்க்கிறீர்?
ஏன் என் பாவங்களைக் கிளறுகின்றீர்?


7 நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும்,
உம் கையினின்று என்னைத் தப்புவிப்பவர் ஒருவருமில்லை.


8 என்னை வனைந்து வடிவமைத்து உண்டாக்கின உம் கைகள்;
இருப்பினும், நீரே என்னை அழிக்கின்றீர்.


9 தயைகூர்ந்து நினைத்துப் பாரும்!
களிமண்போல் என்னை வனைந்தீர்;
அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ?


10 பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா?
தயிர்போல் என்னை நீர் உறைவிக்கவில்லையா? [*]


11 எலும்பும் தசைநாரும் கொண்டு என்னைப் பின்னினீர்;
தோலும் சதையும் கொண்டு என்னை உடுத்தினீர்.


12 வாழ்வையும் இரக்கத்தையும் எனக்கு வழங்கினீர்;
என் உயிர் மூச்சை உம் கரிசனை காத்தது.


13 எனினும், இவற்றை உம் உள்ளத்தில் ஒளித்திருந்தீர்;
இதுவே உம் மனத்துள் இருந்ததென நான் அறிவேன்.


14 நான் பாவம் செய்தால், என்னைக் கவனிக்கிறீர்;
என் குற்றத்தை எனக்குச் சுட்டிக்காட்டாது விடமாட்டீர்;
நான் குற்றம் புரிந்தால் அதை என்மீது சுமத்தாது விடீர்.


15 நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்!
நான் நேர்மையாக இருந்தாலும் தலைதூக்க முடியவில்லை;
ஏனெனில், வெட்கம் நிறைந்தாலும் வேதனையில் உள்ளேன்.


16 தலைநிமிர்ந்தால் அரிமாபோல் என்னை வேட்டையாடுவீர்;
உம் வியத்தகு செயல்களை எனக்கெதிராய்க் காட்டுவீர்;


17 எனக்கெதிராய்ச் சான்றுகளைப் புதுப்பிக்கிறீர்;
என்மீது உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்;
எனக்கெதிராய்ப் போராட்டத்தைப் புதிதாக எழுப்புகிறீர்.


18 கருப்பையிலிருந்து என்னை ஏன் வெளிக் கொணர்ந்தீர்?
கண் ஏதும் என்னைக் காணுமுன்பே நான் இறந்திருக்கலாகாதா?


19 உருவாகாதவன் போலவே இருந்திருக்கக்கூடாதா?
கருவறையிலிருந்தே கல்லறைக்குப் போயிருப்பேனே;


20 என்னுடைய நாள்கள் சிலமட்டுமே;
என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால்,
மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்;


21 பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்த
திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.


22 அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த இருண்ட நாடு;
அங்கு ஒழுங்கில்லை; ஒளியும் இருள்போல் இருக்கும்.


குறிப்பு

[*] 10:10 மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.

(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை