திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய 2ஆம் திருமுகம்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா! இக்கூடாரத்தில் குடியிருக்கும் நாம் விண்ணுலகு சார்ந்த நம் வீட்டைப் பெற்றுக் கொள்ள ஏங்கிப் பெருமூச்சு விடுகிறோம். அதைப் பெற்றுக்கொண்டால் நாம் உறைவிடமற்றவர்களாய் இருக்கமாட்டோம்; இவ்வுலகக் கூடாரத்தில் குடியிருக்கும் நாம் இந்நிலையைத் தாங்க இயலாமல் பெருமூச்சு விடுகிறோம். இக்கூடாரத்தை விட்டு விலக வேண்டும் என்பதல்ல; மாறாக விண்ணக வீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம். வாழ்வுக்குரியது சாவுக்குரியதைத் தனக்குட்படுத்தும். இந்நிலையடைவதற்கென்றே கடவுள் நம்மைத் தயாரித்து மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாக அவருடைய தூய ஆவியை நமக்கு வழங்கினார்." (2 கொரிந்தியர் 5:1-5)


1 கொரிந்தியர் (2 Corinthians)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]


1 நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும்
கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு.
அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!
2 இக்கூடாரத்தில் குடியிருக்கும் நாம்
விண்ணுலகு சார்ந்த நம் வீட்டைப் பெற்றுக் கொள்ள ஏங்கிப் பெருமூச்சு விடுகிறோம். [1]
3 அதைப் பெற்றுக்கொண்டால் நாம் உறைவிடமற்றவர்களாய் இருக்கமாட்டோம்;
4 இவ்வுலகக் கூடாரத்தில் குடியிருக்கும் நாம்
இந்நிலையைத் தாங்க இயலாமல் பெருமூச்சு விடுகிறோம்.
இக்கூடாரத்தை விட்டு விலக வேண்டும் என்பதல்ல;
மாறாக விண்ணக வீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்.
வாழ்வுக்குரியது சாவுக்குரியதைத் தனக்குட்படுத்தும்.
5 இந்நிலையடைவதற்கென்றே கடவுள் நம்மைத் தயாரித்து
மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாக அவருடைய தூய ஆவியை நமக்கு வழங்கினார்.


6 ஆகவே நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம்.
இவ்வுடலில் குடியிருக்கும் வரையில்
நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.
7 நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல,
நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்.
8 நாம் துணிவுடன் இருக்கிறோம்.
இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.
9 எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும்
அதிலிருந்து குடிபெயர்ந்தாலும்
அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்.
10 ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின்
நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும்.
அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக்
கைம்மாறு பெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும். [2]

ஒப்புரவுத் திருப்பணி[தொகு]


11 ஆண்டவருக்கு அஞ்சி உழைக்கும் நாங்கள் மக்களை ஈர்க்கப் பார்க்கிறோம்.
எங்கள் செயல்கள் கடவுளுக்கு வெளிப்படை.
அவை உங்கள் மனச்சான்றுக்கும் வெளிப்படையாயிருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
12 மீண்டும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று கூறவில்லை;
மாறாக எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம்.
அப்போது உள்ளத்தைப் பாராமல் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துப்
பெருமை பாராட்டுவோருக்கு நீங்கள் மறுப்புக் கூற இயலும்.
13 நாங்கள் மதிமயங்கியவர்கள்போல் இருக்கிறோம் என்றால் அது கடவுளுக்காகவே;
அறிவுத் தெளிவோடு இருக்கிறோம் என்றால் அது உங்களுக்காகவே.
14 கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது.
ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார்.
அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும்.
15 வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல்
தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே
அவர் அனைவருக்காகவும் இறந்தார்.


16 ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை;
முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம்.
ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை.
17 எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது
அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்.
பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!
18 இவை யாவும் கடவுளின் செயலே.
அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்;
ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்.
19 உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல்
கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.


20 எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம்.
கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார்.
ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று
கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.
21 நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு
கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார். [3]


குறிப்புகள்

[1] 5:2 = பிலி 3:20.
[2] 5:10 = மத் 16:27; யோவா 5:27; உரோ 14:10.
[3] 5:21 = எசா 53:5-8; உரோ 8:3; கலா 3:13; 1 பேது 2:24.


அதிகாரம் 6[தொகு]


1 நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என
அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.


2 "தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்;
விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்"


எனக் கடவுள் கூறுகிறார்.
இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்! [1]
3 எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம்.
எனவே நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை.
4 மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும்
நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்;
வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை
மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம்.
5 நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்;
குழப்பங்களில் சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்;
கண்விழித்திருந்தோம்; பட்டினி கிடந்தோம்; [2]
6 தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை,
தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு
ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்; [3]
7 உண்மையையே பேசி வருகிறோம்;
கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம்.
நேர்மையே எங்கள் படைக்கலம்.
அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். [4]
8 போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல;
புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை.
ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும்
நாங்கள் உண்மையான பணியாளர்கள்.
9 அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும்
எல்லாரும் எங்களை அறிவர்.
செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும்
நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும்
நாங்கள் கொல்லப்படவில்லை.
10 துயருற்றோர் எனத் தோன்றினாலும்
நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
ஏழையர் எனத் தோன்றினாலும்
நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம்.
எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும்
நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம். [5]


11 கொரிந்தியரே, நாங்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுகிறோம்.
எங்கள் இதயத்தில் ஒளிவு மறைவு என்பதே இல்லை.
12 நீங்கள் உங்கள் இதயக் கதவை அடைத்து வைத்திருக்கிறீர்கள்;
எங்கள் இதயக் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது.
13 பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் சொல்லுகிறேன்:
எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்.

4. தூய வாழ்விற்கான அழைப்பு[தொகு]


14 நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம்.
இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு?
ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? [6]
15 கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு?
நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு? [7]
16 கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்?
வாழும் கடவுளின் கோவில் நாமே.


"என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன்.


அவர்கள் நடுவே நான் உலவுவேன்.
நானே அவர்கள் கடவுள்!


அவர்கள் என் மக்கள்!"


என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ!
17 எனவே,


"அவர்கள் நடுவிலிருந்து வெளியேறுங்கள்;
அவர்களை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்"


என்கிறார் ஆண்டவர்.


"தீட்டானதைத் தொடாதீர்கள்.


அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்.
18 மேலும் நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்;


நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்"


என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 6:2 = எசா 49:8.
[2] 6:5 = 16:23.
[3] 6:6 = கலா 5:22.
[4] 6:7 = எபே 6:11.
[5] 6:10 = 2 கொரி 4:11.
[6] 6:14 = இச 22:10.
[7] 6:15 - மூலபாடத்தில் "பேலியார்" என்றுள்ளது.
பேலியார் என்பது யூதமக்கள் சாத்தானுக்கு கொடுத்த பெயர்களுள் ஒன்று.


(தொடர்ச்சி): கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை