திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
படிமம்:Map13.jpg
"பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. எனவே அவாகள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர். பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, 'நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்' என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம். பின்பு நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறுநாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்; அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சிலநாள்கள் தங்கியிருந்தோம்." - திருத்தூதர் பணிகள் 16:6-12
"அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக் கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக்காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார். நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினார். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்."- திருத்தூதர் பணிகள் 16:23-25

திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]

எருசலேம் சங்கம்[தொகு]


1 யூதேயாவிலிருந்து வந்த சிலர்,
"நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால்
மீட்படைய முடியாது" என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். [1]
2 அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே
பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின.
எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று,
திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக்
கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.
3 அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று
பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள்.
இது சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
4 அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும்,
மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள்.
அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள்.
5 ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து,
"அவர்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்;
மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்" என்று கூறினர்.
6 இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.
7 நெடு நேர விவாதத்துக்குப்பின்பு பேதுரு எழுந்து அவர்களை நோக்கிக் கூறியது:
"சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக்கேட்டு
அதில் நம்பிக்கைகொள்ளும்படி
கடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத்
தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
8 உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்ததுபோல்
அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டார்.
9 நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார்.
நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை.
10 ஆகவே நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை
இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்? [2]
11 ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே
அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்."


12 இதைக் கேட்டு அங்குத் திரண்டிருந்தோர் யாவரும் அமைதியாயினர்.
கடவுள் தங்கள் வழியாகப் பிற இனத்தவரிடம்
அடையாளங்களும் அருஞ்செயல்களும் செய்தார் என்பதைப்
பர்னபாவும் பவுலும் எடுத்துரைத்ததை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்னர்.
13 அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு அவர்களைப் பார்த்துக் கூறியது:
"சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள்.
14 கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள
முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியைச்
சீமோன் எடுத்துரைக்கக் கேட்டீர்கள்.
15 இறைவாக்கினர் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன.
அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்:


16 'இவற்றுக்குப்பின் நான் திரும்பி வந்து


விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் எழுப்புவேன்;
அதிலுள்ள கிழிசல்களைப் பழுது பார்த்து
அதைச் சீர்ப்படுத்துவேன்.
17 அப்பொழுது மக்களுள் எஞ்சியிருப்போரும்
என் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் வேற்று இனத்தார் அனைவரும்


ஆண்டவரைத் தேடுவர், என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.'[3]


18 தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
19 எனவே என் முடிவு இதுவே:
கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது.
20 ஆனால் சிலைகளுக்குப் படைக்கப்பட்டுத் தீட்டுப்பட்டவை,
கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை,
இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு
அவர்களுக்கு நாம் எழுதவேண்டும்.
21 மோசேயின் சட்டத்தை அறிவிப்போர்
முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்;
அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்."

சங்கத்தின் தீர்மானம்[தொகு]


22 பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும்
தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும்
அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர்.
அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த
பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.
23 பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், "திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள்
அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள
பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம்.
24 எங்களுள் சிலர் அங்கு வந்து
தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி
உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம்.
இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. [4]
25 எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து
எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம்.
26 இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத்
தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்.
27 எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம்.
அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத்
தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
28 இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும்
உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்.
29 சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை,
இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை
ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது.
வாழ்த்துகள்" என்று எழுதியிருந்தார்கள்.


30 யூதாவும் சீலாவும் விடைபெற்று அந்தியோக்கியா வந்தனர்.
அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர்.
31 அதை வாசித்ததும் அவர்கள் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றார்கள்.
32 யூதாவும் சீலாவும் இறைவாக்கினராய் இருந்ததால்
சகோதரர் சகோதரிகளோடு அதிகம் பேசி ஊக்கமூட்டி அவர்களை உறுதிப்படுத்தினர்.
33 சிறிது காலம் அங்குத் தங்கியபின்
சகோதரர் சகோதரிகளிடமிருந்து நல்வாழ்த்துகளுடன் விடைபெற்றுக் கொண்டு,
தங்களை அனுப்பியவர்களிடம் சென்றனர்.
[34] [5]
35 பவுலும் பர்னபாவும் அந்தியோக்கியாவில் தங்கி,
மற்றும் பலருடன் ஆண்டவரின் வார்த்தையைக் கற்பித்து நற்செய்தி அறிவித்து வந்தனர்.

- இரண்டாம் தூதுரைப் பயணம் -[தொகு]

பவுலும் பர்னபாவும் பிரிதல்[தொகு]


36 சில நாள்களுக்குப் பின்பு பவுல் பர்னபாவிடம்,
"நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த அனைத்து நகரங்களுக்கும் திரும்பிப் போய்
அங்குள்ள சகோதரர் சகோதரிகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று கவனிப்போம், வாரும்" என்றார்.
37 மாற்கு எனப்படும் யோவானையும் தங்களுடன் கூட்டிச் செல்லப் பர்னபா விரும்பினார்.
38 ஆனால் தங்களோடு சேர்ந்து அவர் பணி செய்ய வராது,
பம்பிலியாவில் தங்களைவிட்டு விலகிச் சென்று விட்டதால்
அவரைக் கூட்டிச் செல்ல பவுல் விரும்பவில்லை.
39 இதனால் அவர்களிடையே கடுமையான விவாதம் எழுந்தது.
எனவே இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தனர்.
பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு சைப்பிரசுக்குக் கப்பலேறினார்.
40 பவுல் சீலாவைத் தேர்ந்துகொண்டார்.
சகோதரர் சகோதரிகள்
அருள் வழங்கும் ஆண்டவரின் பணிக்கென்று அவரை அர்ப்பணித்தனர்.
அவர் புறப்பட்டு,
41 சிரியா, சிலிசியா வழியாகச் சென்று திருச்சபைகளை உறுதிப்படுத்தினார்.


குறிப்புகள்

[1] 15:1 = லேவி 12:3.
[2] 15:10 = மத் 23:4; கலா 5:1.
[3] 15:16,17 = ஆமோ 9:11,12.
[4] 15:24 = கலா 2:12.
[5] 15:34 - "அவர்களோடு தங்கியிருக்கலாம் என்று சீலா தீர்மானித்தார்" என்னும் வசனம்
சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.


அதிகாரம் 16[தொகு]

பவுல், சீலா ஆகியோருடன் திமொத்தேயு செல்லுதல்[தொகு]


1 பின்பு பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார்.
லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார்.
அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப்பெண்.
தந்தையோ கிரேக்கர்.
2 திமோத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலுமுள்ள
சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர்.
3 பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச்செல்ல விரும்பினார்.
அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார்.
ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.
4 அவர்கள் நகர் நகராகச் சென்றபோது
எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை
அவர்களிடம் கொடுத்துக் கடைப்பிடிக்குமாறு கூறினார்.
5 இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று
நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.

துரோவாவில் கண்ட காட்சி[தொகு]


6 பின்பு ஆசியாவில் [1] இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே,
அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர்.
7 அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது
இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை.
8 எனவே அவாகள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர்.
9 பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார்.
அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று,
"நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்" என்று வேண்டினார்.
10 இக்காட்சியைப் பவுல் கண்டதும்,
நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று
கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.

லீதியாவின் மனமாற்றம்[தொகு]


11 பின்பு நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும்,
மறுநாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்;
12 அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம்.
அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சிலநாள்கள் தங்கியிருந்தோம்.
13 ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம்.
அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து,
அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம்.
14 அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர்
நாங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா.
செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார்.
பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.
15 அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர்.
அதன்பின் அவர் எங்களிடம்,
"நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால்
என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்" என்று
கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்க வைத்தார்.

பிலிப்பி நகரில் சிறையிடப்படுதல்[தொகு]


16 ஒரு நாள் நாங்கள் இறைவேண்டல் செய்யும் இடத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது
குறி சொல்லும் ஆவியைத் தம்முள் கொண்ட
அடிமைப்பெண் ஒருவர் எங்களுக்கு எதிரே வந்தார்.
அவர் குறி சொல்லி அதனால் தம்மை அடிமையாக வைத்திருப்பவர்களுக்கு
மிகுதியான வருவாய் கிடைக்கச்செய்து வந்தார்.
17 அவர் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து,
"இவர்கள் உன்னத கடவுளின் பணியாளர்கள்;
மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்" என்று உரக்கக் கூறினார்.
18 பல நாள்கள் அவர் அவ்வாறு செய்து வந்தார்.
பவுல் எரிச்சல் கொண்டு அவர் பக்கம் திரும்பி,
"நீ இவரைவிட்டுப் போகுமாறு இயேசு கிறிஸ்துவின் பெயரால்
உனக்குக் கட்டளையிடுகிறேன்" என்று அந்த ஆவியிடம் கூறினார்.
அந்நேரமே அது அவரைவிட்டுச் சென்று விட்டது.
19 அவரை அடிமையாக வைத்திருந்தவர்கள் இதைக் கண்டு
தங்களுடைய வருவாய்க்கான வாய்ப்பெல்லாம் போய்விட்டதே என்று எண்ணிப்
பவுலையும் சீலாவையும் பிடித்து,
சந்தைவெளிக்குத் தம் ஆட்சியாளரிடம் இழுத்துச் சென்றார்கள்.
20 அவர்கள் தலைமை நடுவர்கள் முன் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி,
"இவர்கள் யூதர்கள்; நமது நகரில் கலகம் விளைவிக்கிறார்கள்.
21 உரோமையராகிய நாம் ஏற்றுக் கொள்ளவோ செயல்படுத்தவோ தகாத முறைமைகளை
இவர்கள் அறிவிக்கிறார்கள்" என்றனர்.
22 உடனே மக்கள் திரண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள்.
நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து
அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். [2]
23 அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக்
கருத்தாய்க் காவல் செய்யுமாறு
சிறைக்காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். [3]
24 இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி,
அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார்.
25 நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினார்.
மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். [4]
26 திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது.
உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன.
அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன.
27 சிறைக் காவலர் விழித்தெழுந்து,
சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு,
கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி,
வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
28 பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு,
"நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்;
நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்" என்றார்.
29 சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி,
விரைந்தோடி வந்து நடுங்கியவாறே
பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார்.
30 அவர்களை வெளியே அழைத்து வந்து,
"பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்.
31 அதற்கு அவர்கள்,
"ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்;
அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றார்கள்.
32 பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும்
அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள்.
33 அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று
அவர்களின் காயங்களைக் கழுவினார்.
பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
34 அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார்.
கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால்
தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.
35 பொழுது விடிந்ததும் தலைமை நடுவர்கள் காவல் அதிகாரிகளை அனுப்பி
அவர்களை விடுவிக்குமாறு கூறினார்கள்.
36 சிறைக் காவலர் பவுலிடம் இச்செய்தியை அறிவித்தார்:
"தலைமை நடுவர்கள் உங்களை விடுதலை செய்யுமாறு சொல்லியனுப்பியுள்ளார்கள்.
எனவே இப்போது நீங்கள் அமைதியுடன் புறப்பட்டுப் போங்கள்" என்றார்.
37 அதற்குப் பவுல், "நாங்கள் உரோமைக் குடிமக்கள்.
முறையான தீர்ப்பு இன்றியே அவர்கள் எங்களைப்
பொதுமக்கள் முன் நையப் புடைத்துச் சிறையில் தள்ளினார்கள்.
இப்போது எங்களை யாருக்கும் தெரியாமல் வெளியேற்றப் பார்க்கிறார்களா? அது நடக்காது.
அவர்களே வந்து எங்களை வெளியே அழைத்துச் செல்லட்டும்" என்று கூறினார்கள்.
38 காவல் அதிகாரிகளின் இச்செய்தியைத் தலைமை நடுவர்களுக்கு அறிவித்தார்கள்.
அவர்கள் உரோமைக் குடிமக்கள் என்று கேட்டதும் அந்த நடுவர்கள் அஞ்சினார்கள்.
39 உடனே அவர்கள் வந்து அவர்களிடம் மன்னிப்புக் கோரி,
தங்கள் நகரைவிட்டுப் போகுமாறு வேண்டிக்கொண்டார்கள்.
40 அவர்கள் சிறையிலிருந்து வெளியேறி, லீதியாவின் வீட்டுக்குச் சென்றார்கள்.
அங்கு சகோதரர் சகோதரிகளைக் கண்டு,
அவர்களை ஊக்கப்படுத்திய பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.


குறிப்புகள்

[1] 16:6 - ஆசியா என்பது உரோமை மாநிலங்களுள் ஒன்று.
இது இன்றையத் துருக்கி நாட்டின் ஒரு பகுதி ஆகும்.
[2] 16:22 = பிலி 1:30; 1 தெச 2:2.
[3] 16:23 = 2 கொரி 11:25.
[4] 16:25 = கொலோ 3:16.


(தொடர்ச்சி):திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை