திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பின்பு அவர்கள் பவுலை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், 'நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா? நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே! அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்' என்றார்கள். ஏதென்சு நகரத்தார் அனைவரும், அங்குக் குடியேறி வாழ்ந்துவந்த அன்னியரும் இதுபோன்ற புதிய செய்திகளைக் கேட்பதிலும் சொல்லுவதிலும் மட்டுமே தங்கள் நேரத்தைப் போக்கினர். அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: 'ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன். நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப்பார்த்துக் கொண்டு வந்தபோது 'அறியாத தெய்வத்துக்கு' என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 'உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே...அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்...' என்றார்" - திருத்தூதர் பணிகள் 17:19-25,27-28

திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

அதிகாரம் 17[தொகு]

தெசலோனிக்காவில் கலகம்[தொகு]


1 அம்பிப்பொலி, அப்பொலோனியா நகர்களின் வழியாக
அவர்கள் தெசலோனிக்கா வந்து சேர்ந்தார்கள்.
அங்கே யூதருடைய தொழுகைக் கூடம் ஒன்று இருந்தது.
2 தம் வழக்கத்தின்படியே பவுல் அவர்களிடம் சென்று
தொடர்ச்சியாக மூன்று ஓய்வுநாள்கள்
மறைநூலை அடிப்படையாக வைத்து அவர்களுடன் வாதாடினார்.
3 'மெசியா துன்பப்படவும், இறந்து உயிர்த்தெழவும் வேண்டும்;
நான் உங்களுக்கு அறிவிக்கிற இயேசுவே அந்த மெசியா" என்று
அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்.
4 அவர்களுள் சிலர் அதை நம்பி பவுல், சீலா ஆகியோருடன் சேர்ந்துகொண்டனர்.
கடவுளை வழிபட்ட திரளான கிரேக்கரும்
மகளிருள் முதன்மையான பலரும் அவ்வாறு செய்தனர்.
5 ஆனால் யூதர்கள், பொறாமை கொண்டு,
சந்தை வெளியில் இருந்து சில பொல்லாத பேர்வழிகளைச் சேர்த்து,
கூட்டத்தைக் கூட்டி நகரில் அமளி உண்டாக்கினார்கள்;
பவுலையும் சீலாவையும் தேடிக் கண்டுபிடித்து
மக்களிடையே கூட்டிக் கொண்டுவருவதற்காக
யாசோனுடைய வீட்டைத் தாக்கினார்கள்.
6 அவர்களை அங்கே காணாததால் யாசோனையும்
அவரோடு சில சகோதரர்களையும் நகராட்சி மன்றத்தினரிடம் இழுத்து வந்து,
"உலகமெங்கும் கலகம் உண்டாக்குகிற இவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள்.
7 யாசோன் இவர்களைத் தன் வீட்டில் வரவேற்றிருக்கிறான்.
இவர்கள் அனைவரும் இயேசு என்னும் இன்னொரு அரசர் இருப்பதாகச் கூறிச்
சீசருடைய சட்டங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்" என்று கூச்சலிட்டார்கள்.
8 மக்கள் கூட்டத்தினரும் நகராட்சி மன்றத்தினரும் இவற்றைக் கேட்டுக் கலக்கமுற்றனர்.
9 யாசோனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிணை பெற்றுக்கொண்டு
அவர்களை விடுதலை செய்தனர்.

பெரேயாவில் திருத்தூதர்கள்[தொகு]


10 இரவோடு இரவாக சகோதரர் சகோதரிகள்
பவுலையும் சீலாவையும் பெரோயா நகருக்கு அனுப்பிவிட்டார்கள்.
அவர்கள் அங்கு வந்ததும் யூதருடைய தொழுகைக் கூடத்துக்குச் சென்றார்கள்.
11 அங்கு இருந்தவர்கள் தெசலோனிக்காவில் உள்ளவர்களைவிடப்
பரந்த மனப்பான்மை உடையவர்கள்.
அவர்கள் முழு ஆர்வத்துடன் இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டு
அவர்கள் கூறுவன மறைநூலுடன் ஒத்துள்ளதா என நாள்தோறும் ஆய்ந்து வந்தார்கள்.
12 அவர்களுள் பலரும் மதிப்புக்குரிய கிரேக்க மகளிர், ஆடவர் பலரும்
நம்பிக்கை கொண்டனர்.
13 பவுல் இறைவார்த்தையைப் பெரோயாவிலும் அறிவித்ததைத்
தெசலோனிக்க யூதர் அறிந்து, அங்கேயும் வந்து
மக்கள் கூட்டத்தினரைக் குழப்பிக் கலகம் உண்டாக்கினர்.
14 உடனே சகோதரர் சகோதரிகள் பவுலைக் கடற்கரைக்குப் போகுமாறு
அனுப்பி வைத்தார்கள்.
ஆனால் சீலாவும் திமோத்தேயுவும் அங்கேயே தங்கினர்.
15 பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச் சென்றார்கள்.
சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும் என்னும் கட்டளையைப்
பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

ஏதென்சில் பவுல்[தொகு]


16 பவுல் அவர்களுக்காக ஏதென்சில் காத்திருந்தபோது,
அந்நகரில் சிலைகள் நிறைந்திருப்பதைக் கண்டு மனம் கலங்கினார்.
17 எனவே அவர் தொழுகைக் கூடத்தில் யூதர்களோடும் கடவுளை வழிபடுவோரோடும்,
சந்தை வெளிகளில் சந்தித்த மக்களோடும் ஒவ்வொரு நாளும் விவாதித்து வந்தார்.
18 எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் ஆகிய மெய்யியல் அறிஞர்கள் சிலர்
அவருடன் கலந்து உரையாடினர்.
வேறு சிலர், "இவன் என்னதான் பிதற்றுகிறான்?" என்றனர்.
அவர் இயேசுவையும் அவரது உயிர்த்தெழுதலையும் நற்செய்தியாக அறிவித்துவந்ததால்
மற்றும் சிலர், "இவன் வேற்றுத் தெய்வங்களைப் பற்றி
அறிவிப்பவன் போலத் தெரிகிறது " என்றனர்.
19 பின்பு அவர்கள் அவரை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய்,
"நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா?
20 நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே!
அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்" என்றார்கள்.
21 ஏதென்சு நகரத்தார் அனைவரும்,
அங்குக் குடியேறி வாழ்ந்துவந்த அன்னியரும்
இதுபோன்ற புதிய செய்திகளைக் கேட்பதிலும்
சொல்லுவதிலும் மட்டுமே தங்கள் நேரத்தைப் போக்கினர்.
22 அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது:
"ஏதென்சு நகர மக்களே,
நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன்.
23 நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப்பார்த்துக் கொண்டு வந்தபோது
'அறியாத தெய்வத்துக்கு' என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன்.
நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே
நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
24 'உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள்
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர்.
மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை.
25 அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே.
எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை. [1]
26 ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து
அவர்களை மண்ணுலகின் மீது குடியிருக்கச் செய்தார்;
அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும்
வரையறுத்துக் கொடுத்தார்.
27 கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்;
தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும்
என்பதற்காகவே இவ்வாறு செய்தார்.
ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்.
28 அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்.
உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல,
'நாம் அவருடைய பிள்ளைகளே.'
29 நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால்,
மனித கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட
பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக்
கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது. [2]
30 ஏனெனில் மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில்
கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை.
ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும்
மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். [3]
31 ஏனென்றால் ஒரு நாள் வரும்.
அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு
அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார்.
இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக
இந்நம்பிக்கை உறுதியானதென எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்."
32 'இறந்தவர் உயிர்த்தெழுதல்' என்பது பற்றிக் கேட்டதும்
சிலர் அவரைக் கிண்டல் செய்தனர்.
மற்றவர்கள், "இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்" என்றார்கள்.
33 அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார்.
34 சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான
தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர்.


குறிப்புகள்

[1] 17:24,25 = 1 அர 8:27; எசா 42:5.
[2] 17:29 = எசா 40:18; உரோ 1:22,23.
[3] 17:30 = உரோ 3:25.

அதிகாரம் 18[தொகு]

கொரிந்து நகரில் பவுல்[தொகு]


1 இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
2 அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும்
அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார்.
அவர்கள், "யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்" என்ற
கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி
இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள்.
3 கூடாரம் செய்வது அவர்களது தொழில்.
தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால்
பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார். [1]
4 ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில்
யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
5 சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது
பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்;
'இயேசுவே மெசியா' என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார்.
6 அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்த
போது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி,
"உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல.
இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்" என்று கூறினார்;
7 அவ்விடத்தை விட்டு விட்டுக் கடவுளை வழிபடும் தீத்து யுஸ்து
என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப் போனார்.
அவரது வீடு தொழுகைக் கூடத்தை அடுத்து இருந்தது.
8 தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர்
தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார்.
கொரிந்தியருள் பலரும் பவுல் கூறியவற்றைக் கேட்டு
நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர். [2]
9 இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி,
"அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே.
10 ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன்.
எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை.
இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்" என்று சொன்னார். [3]
11 அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து
அங்கேயே தங்கியிருந்தார்.


12 கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளாராக இருந்தபோது
யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி,
அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக் கொண்டு வந்து,
13 "இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு
மக்களைத் தூண்டிவிடுகிறான்" என்றார்கள்.
14 பவுல் பேச வாயெடுத்த போது கல்லியோ அவர்களை நோக்கி,
"யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின்
நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன்.
15 ஆனால் இது சொற்களையும் பெயர்களையும்
உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால்
நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்;
இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை" என்று கூறி,
16 அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார்.
17 உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக் கூடத் தலைவரான
சொஸ்தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர்.
ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை.

பவுல் அந்தியோக்கியா திரும்புதல்[தொகு]


18 பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள
சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார்.
அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுத்
தம் நேர்த்திக் கடனை நிறைவேற்றக்
கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக்கொண்டு,
அக்கில்லா பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார். [4]
19 அவர்கள் எபேசு வந்தடைந்தபோது
அவர் அவர்களை விட்டுப் பிரிந்து
தொழுகைக் கூடம் சென்று யூதரோடு விவாதித்தார்.
20 அவர்கள் அவரை இன்னும் நீண்ட காலம் தங்களோடு இருக்குமாறு
வேண்டிக் கொண்டார்கள். ஆனால் அவர் அதற்கு இணங்கவில்லை.
21 அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு,
"கடவுள் விரும்பினால் நான் மீண்டும் உங்களிடம் திரும்பி வருவேன்"
என்று கூறி எபேசிலிருந்து கப்பலேறினார்;
22 பின்னர் அவர் செசரியா வந்து அங்கிருந்து எருசலேம் போய்த்
திருச்சபையாரை வாழ்த்திய பின் அந்தியோக்கியா சென்றார்.

- மூன்றாம் தூதுரைப் பயணம் -[தொகு]


23 சிறிது காலம் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு
ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியா, பகுதிகள் வழியாகச் சென்று
சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.

எபேசில் அப்பொல்லோ கற்பித்தல்[தொகு]


24 அலக்சாந்திரியாவில் பிறந்த
அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார்.
அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். [5]
25 ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்;
ஆர்வம் மிக்க உள்ளத்தோடு இயேசுவைப்பற்றிய செய்தியைப்
பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார்.
ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார்.
26 அவர் தொழுகைக் கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார்.
அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும்
அவரை அழைத்துக் கொண்டுபோய்,
கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினார்.
27 அவர் அக்காயாவுக்குப் போக விரும்பிய போது
சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி,
அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள்.
அவர் அங்கே சென்றபோது
இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப்
பெரிதும் துணையாய் இருந்தார்.
28 ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி,
'இயேசுவே மெசியா' என மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.


குறிப்புகள்

[1] 18:3 = 1 கொரி 4:11.
[2] 18:8 = 1 கொரி 1:14.
[3] 18:10 = 1 கொரி 2:3.
[4] 18:18 = எண் 6:18; திப 21:27,28.
[5] 18:24 = 1 கொரி 1:12.


(தொடர்ச்சி):திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 19 முதல் 20 வரை