திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
"எபேசில் குடியிருந்த யூதர், கிரேக்கர் அனைவருக்கும் இது தெரியவந்தது. யாவரையும் அச்சம் ஆட்கொண்டது. அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பெயரைப் போற்றிப் பெருமைப்படுத்தினார்கள். நம்பிக்கை கொண்டோர் பலரும் தாங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு அறிக்கையிட்டனர். மாயவித்தைகளைச் செய்துவந்த பலரும் தங்கள் நூல்களைக் கொண்டு வந்து அனைவர் முன்பாகவும் அவற்றைச் சுட்டெரித்தனர்; அவற்றின் விலை ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு என்று கணக்கிட்டனர். இவ்வாறு ஆண்டவரின் வார்த்தை ஆற்றல் பொருந்தியதாய்ப் பரவி வல்லமையுடன் செயல்பட்டது." - திருத்தூதர் பணிகள் 19:17-20

திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19[தொகு]

எபேசில் பவுல்[தொகு]


1 அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது
பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார்.
அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு,
2 அவர்களை நோக்கி,
"நீங்கள் நம்பிக்கை கொண்டபோது
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட
நாங்கள் கேள்விப்பட்டதில்லையே" என்றார்கள்.
3 "அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?" எனப் பவுல் கேட்க,
அவர்கள், "நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்" என்றார்கள்.
4 அப்பொழுது பவுல், "யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து,
தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்" என்றார். [1]
5 இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர்.
6 பவுல் அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள் மேல் இறங்கியது.
அப்பொழுது அவர்கள் பரவசப்பேச்சு பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர்.
7 அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர்.
8 பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார்.
அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சிபற்றித்
துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து
அவர்களை நம்பச் செய்தார்.
9 சிலர் கடின உள்ளத்தோராய் நம்ப மறுத்து,
திரண்டிருந்த மக்கள்முன்னால் இந்நெறியை இகழ்ந்து பேசினர்.
அவர் அவர்களைவிட்டு விலகித் தம் சீடரைத் தனியே அழைத்துக்கொண்டு
'திரன்னு' மன்றத்தில் நாள்தோறும் விவாதித்து வந்தார்.
10 இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு நிகழ்ந்தது.
ஆசியாவில் வாழ்ந்த யூதர், கிரேக்கர் அனைவரும்
ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டனர்.

ஸ்கேவாவின் மக்கள்[தொகு]


11 பவுல் வழியாய்க் கடவுள் அரும் பெரும் வல்ல செயல்களைச் செய்து வந்தார்.
12 அவரது உடலில் பட்ட கைக்குட்டைகளையும் துண்டுகளையும் கொண்டு வந்து
நோயுற்றோர் மீது வைத்ததும் பிணிகள் அவர்களை விட்டு நீங்கும்;
பொல்லாத ஆவிகளும் வெளியேறும். [2]
13 சுற்றித் திரிந்து பேயோட்டும் யூதர் சிலர்
பொல்லாத ஆவி பிடித்திருந்தவர்கள்மீது
ஆண்டவராகிய இயேசுவின் பெயரைப் பயன்படுத்த முயன்றனர்.
"பவுல் அறிவிக்கின்ற இயேசுவின் பெயரால் நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன்"
என்று அவர்கள் கூறிவந்தார்கள்.
14 ஸ்கேவா என்னும் யூதத் தலைமைக் குருவுக்கு ஏழு மைந்தர்கள் இருந்தார்கள்.
அவர்கள் இவ்வாறு கூறியபோது
15 பொல்லாத ஆவி அவர்களிடம் மறுமொழியாக,
"இயேசுவை எனக்குத் தெரியும்; ஆனால் நீங்கள் யார்?" என்று கேட்டது.
16 பொல்லாத ஆவி பிடித்தவர் அவர்கள்மீது துள்ளிப் பாய்ந்து
அவர்களைத் தாக்கி அனைவரையும் திணறடிக்கவே,
அவர்கள் அந்த வீட்டைவிட்டுக் காயமுற்றவராய் ஆடையின்றித் தப்பியோடினர்.
17 எபேசில் குடியிருந்த யூதர், கிரேக்கர் அனைவருக்கும் இது தெரியவந்தது.
யாவரையும் அச்சம் ஆட்கொண்டது.
அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பெயரைப் போற்றிப் பெருமைப்படுத்தினார்கள்.
18 நம்பிக்கை கொண்டோர் பலரும்
தாங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு அறிக்கையிட்டனர்.
19 மாயவித்தைகளைச் செய்துவந்த பலரும்
தங்கள் நூல்களைக் கொண்டு வந்து
அனைவர் முன்பாகவும் அவற்றைச் சுட்டெரித்தனர்;
அவற்றின் விலை ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு என்று கணக்கிட்டனர்.
20 இவ்வாறு ஆண்டவரின் வார்த்தை ஆற்றல் பொருந்தியதாய்ப் பரவி
வல்லமையுடன் செயல்பட்டது.

எபேசில் கலகம்[தொகு]


21 இவை நடந்தபின்பு பவுல் மாசிதோனியா, அக்காயா வழியாக
எருசலேமுக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்தார்;
அதன்பின் உரோமையையும் பார்க்கவேண்டும் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
22 எனவே தம் தொண்டர்களுள் திமொத்தேயு, எரஸ்து
என்னும் இருவரையும் மாசிதோனியாவுக்கு அனுப்பிவிட்டு
அவர் ஆசியாவில் சிறிது காலம் தங்கினார்.


23 அக்காலத்தில் கிறிஸ்தவ நெறியைக் குறித்து எபேசில் பெருங்கலகம் ஏற்பட்டது.
24 தெமேத்திரியு என்னும் பெயருடைய தட்டான் ஒருவர் அங்கே இருந்தார்.
அவர் அர்த்தமி கோவிலின் வடிவத்தை வெள்ளியில் செய்வித்து
அதனால் கைவினைஞர்களுக்கு மிகுந்த வருவாய் கிடைக்கச் செய்தார்.
25 இதே தொழில் செய்யும் அனைவரையும் அவர் ஒருங்கிணைத்து,
"தோழர்களே, இந்தத் தொழில் நமக்கு
நல்ல வருவாயைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
26 எபேசில் மட்டுமின்றி ஏறக்குறைய ஆசியா முழுவதிலுமே,
'மனித கையால் செய்யப்பட்டவை தெய்வங்களல்ல' என்று தவறாகக் கூறித்
திரளான மக்களை இந்தப் பவுல் நம்பச் செய்து வருகிறார் என்பதை
நீங்கள் கேட்கவில்லையா? பார்க்கவில்லையா?
27 இது நமக்கு ஆபத்து விளைவிக்கும்; நம் தொழிலும் மதிப்பற்றுப்போகும்.
அதோடு பெருந்தேவதையான அர்த்தமியின் கோவில் கூடத் தன் பெயரை இழந்துவிடும்.
அதுமட்டுமின்றி, ஆசியா முழுவதும், ஏன் உலகமுழுவதுமே,
வழிபடுகின்ற நம் தேவதையின் மாண்பும் மங்கிப் போகுமே!" என்றார்.
28 இதைக் கேட்டவர்கள் சீற்றம் நிறைந்தவர்களாய்,
"எபேசின் அர்த்தமி வாழ்க!" என்று குரலெழுப்பினார்கள்.
29 நகர் முழுவதும் குழப்பம் ஏற்பட்டது.
மக்கள் அனைவரும் பவுலின் வழித்துணைவர்களாகிய காயு,
அரிஸ்தர்க்கு என்னும் மாசிதோனியரைப் பிடித்திழுத்துக்கொண்டு
ஒருமிக்க அரங்கத்தை நோக்கிப் பாய்ந்தோடிச் சென்றனர்.
30 பவுல் மக்கள் கூட்டத்துக்கள் செல்ல விரும்பியும்,
சீடர்கள் அவரைப் போகவிடவில்லை.
31 அவருக்கு நண்பராயிருந்த ஆசிய ஆட்சியாளருள் சிலர் அவரிடம் ஆள் அனுப்பி
அரங்கத்திற்குள் செல்லத் துணிய வேண்டாமெனக் கேட்டுக் கொண்டனர்.
32 சபையில் குழப்பம் ஏற்பட்டிருந்ததால்
சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகக் கத்திக் கொண்டிருந்தனர்.
எதற்காகக் கூடி வந்திருக்கிறோம் என்றே பலருக்குத் தெரியவில்லை.
33 கூடியிருந்தவர்கள் அலக்சாந்தரிடம் இது பற்றிப் பேசினர்.
யூதர்கள் அவரை முன்னுக்குத் தள்ள,
அலக்சாந்தர் கையால் சைகை காட்டி மக்களிடம் நிலைமையை விளக்க விரும்பினார்.
34 அவர் ஒரு யூதர் என்பதை அறிந்து மக்கள் அனைவரும் ஒரே குரலில்
இரண்டு மணி நேரம் "எபேசின் அர்த்தமி வாழ்க" எனக் கத்தினர்.
35 நகர ஆணையர் மக்கள் கூட்டத்தினரை அமைதிப்படுத்தி,
"எபேசியரே! பெருந்தேவதையான அர்த்தமியின் கோவிலும்
வானிலிருந்து விழுந்த அதன் சிலையும்
எபேசு நகரில்தான் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அறியாதோர் யார்?
36 இதை எவரும் மறுக்க முடியாது.
எனவே நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும்,
கண்மூடித்தனமாக எதையும் செய்து விடாதீர்கள்.
37 ஏனென்றால் நீங்கள் இழுத்து வந்திருக்கும் இவர்கள்
கோவில் கொள்ளைக்காரர்களோ நம்முடைய தேவதையைப் பழித்துரைப்பவர்களோ அல்ல.
38 எனவே தெமேத்திரியுக்கும் அவரோடுள்ள கைவினைஞர்களுக்கும்
யார் மீதாவது வழக்கு உண்டானால்
அவர்கள் நீதிமன்றம் கூடும் நாள்களில்
ஆட்சியாளரிடம் அவர்களை அழைத்துச்சென்று, அவர்களைப்பற்றி முறையிடட்டும்.
39 இதற்கு மேல் எதாவது நீங்கள் விரும்பினால்
சட்டத்தின் அடிபடையில் கூடுகின்ற சபையில் அதற்கான விளக்கம் பெறலாம்.
40 இன்று நடந்ததைப் பார்த்தால் இக்கலகத்தை நாம் செய்ததாக
நம்மீது குற்றம் சுமத்தப்படும் ஆபத்து உள்ளது.
மேலும் இந்த கலகத்துக்குக் காரணம் எதுவுமில்லை;
காரணம் காட்டவும் நம்மால் முடியாது" என்று கூறி சபையைக் கலைத்து விட்டார்.


குறிப்புகள்

[1] 19:4 = மத் 3:11; மாற் 1:4,7,8; லூக் 3:4,16; யோவா 1:26,27.
[2] 19:12 = லூக் 8:44-47; திப 5:15.


அதிகாரம் 20[தொகு]

பவுல் மாசிதோனியா, கிரேக்க நாடு செல்லுதல்[தொகு]


1 கலகம் ஓய்ந்தபின் பவுல் சீடர்களை வரவழைத்து
அவர்களுக்கு விளக்கமளித்து அவர்களை வாழ்த்தி விட்டு
மாசிதோனியா புறப்பட்டுச் சென்றார்.
2 அந்தப் பகுதி வழியாகச் சென்று
அங்குள்ளோர்க்கு அறிவுரைகள் பல கூறியபின் கிரேக்க நாடு போய்ச் சேர்ந்தார்;
3 அங்கே அவர் மூன்று மாதங்கள் செலவிட்டார்.
பின் சிரியாவுக்குக் கப்பலேறப் போகும்போது
யூதர்கள் அவருக்கு எதிராகச் சதித்திட்டமிட்டதால்
அவர் மாசிதோனியா வழியாகத் திரும்பத் தீர்மானித்தார்.
4 பெரோயா நகர் பீருவின் மகன் சோப்பத்தர்,
தெசரோனிக்காவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு, செக்குந்து,
தெருபையைச் சேர்ந்த காயு, திமொத்தேயு,
ஆசியாவைச் சேர்ந்த திக்கிக்கு, துரொப்பிம் ஆகியோரும் அவரோடு சென்றனர்.
5 அவர்கள் முன்னே சென்று துரோவாவில் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
6 நாங்கள் புளிப்பற்ற அப்பவிழா நாள்களுக்குப் பின்பு
பிலிப்பியிலிருந்து கப்பலேறினோம்.
ஐந்து நாளில் துரோவாவில் இருந்த அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம்.
அங்கு ஏழு நாள் தங்கினோம்.

பவுல் துரோவாவுக்கு இறுதியாகச் செல்லுதல்[தொகு]


7 வாரத்தின் முதல் நாள் அப்பம் பிடுவதற்காக நாங்கள் கூடியிருந்தோம்.
மறுநாள் பவுல் புறப்பட வேண்டியிருந்ததால்
நள்ளிரவு வரை அவர் அவர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார்.
8 நாங்கள் கூடியிருந்த மேல் மாடியில் விளக்குகள் பல இருந்தன.
9 யூத்திகு என்னும் இளைஞர் ஒருவர் பலகணியில் உட்கார்ந்திருந்தார்.
பவுல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது
அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்;
தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தார்;
அவரை அவர்கள் பிணமாகத்தான் தூக்கி எடுத்தார்கள்.
10 பவுல் கீழே இறங்கி வந்து அவர் மீது படுத்து அணைத்துக்கொண்டு,
"அமளியை நிறுத்துங்கள்; இவர் உயிரோடுதானிருக்கிறார்" என்று கூறினார்.
11 பின் மாடிக்குச் சென்று அப்பம் பிட்டு உண்டார்.
பொழுது புலரும் வரை நீண்ட நேரம்
அவர்களோடு உரையாடியபின் புறப்பட்டுச்சென்றார்.
12 உயிர்பெற்ற இளைஞரை அவர்கள் அழைத்துச்சென்று
மிகவும் ஆறுதல் அடைந்தார்கள்.

துரோவாவிலிருந்து மிலேத்துவுக்குச் செல்லுதல்[தொகு]


13 நாங்கள் கப்பலேறிப் பவுலுக்கு முன்பாக ஆசோ நகர்வரை சென்றோம்.
அங்கிருந்து அவரைக் கப்பலில் ஏற்றிச் செல்லவிருந்தோம்.
ஏனெனில் அந்நகர்வரை தரைவழியாகச் செல்ல அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
14 ஆசோவில் அவர் எங்களைச் சந்தித்தார்;
அவரை ஏற்றிக்கொண்டு மித்திலேன் நகருக்குச் சென்றோம்.
15 அங்கிருந்து கப்பலேறி மறுநாள் கீயு தீவின் எதிர்ப்புறம் சென்றடைந்தோம்.
அதற்கு அடுத்த நாள் சாமு தீவுக்கும் அதற்கு அடுத்த நாள் மிலேத்து நகருக்கும் சென்றோம்.
16 பவுல் ஆசியாவில் காலம் தாழ்த்த விரும்பாததால்
எபேசுக்குப் போகாமலே எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்திருந்தார்;
முடியுமானால் பெந்தக்கோஸ்து நாளில் அங்கிருக்க வேண்டும் என்று விரைவாய்ச் சென்றார்.

பவுல் எபேசு மூப்பர்களிடமிருந்து விடை பெறுதல்[தொகு]


17 பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆளனுப்பி,
திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார்.
18 அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது:
"நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை
எவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். [1]
19 யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது
மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன்.
20 நன்மை பயக்குமொன்றையும் உங்களுக்கு
நான் அறிவிக்காமல் விட்டு விடவில்லை;
பொது இடங்களிலும் வீடுவீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக் கொடுத்தேன்.
21 நம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறும்,
மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும்
நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன்.
22 இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்லுகிறேன்.
அங்கு எனக்கு என்ன நேரிடுமென்பது தெரியாது.
23 சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று
தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார்.
24 என்னைப் பொறுத்த வரையில்
எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை.
இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு
ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி
என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்.
25 இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பற்றி பறைசாற்றினேன்.
ஆனால் இனிமேல் உங்களுள் எவரும்
என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை என்று நான் அறிவேன்.
26 உங்களுள் எவரது அழிவுக்கும் நான் பொறுப்பாளியல்ல என்று
இன்று நான் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
27 கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை.
28 தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட
கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு
தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால்
உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.
29 உங்களை விட்டு நான் சென்ற பின்பு
கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம்.
அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும்.
30 உங்களிடமிருந்து சிலர் தோன்றி
சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.
31 எனவே விழிப்பாயிருங்கள்;
மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது
கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை
நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள்.
32 இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்;
அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக!
அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய
உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது.
33 எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை.
34 என்னுடைய தேவைகளுக்காகவும்
என்னோடிருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும்
இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
35 இவ்வாறு பாடுபட்டு உழைத்து
நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று
அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன்.
அதோடு, பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று
ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்." [2]
36 இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு
அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார்.
37 பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர்.
38 'இனி மேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை' என்று
அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது.
பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பி வைத்தனர்.


குறிப்புகள்

[1] 20:18 = 2 கொரி 1:8,9.
[2] 20:35 = எபே 4:28.


(தொடர்ச்சி):திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை