திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!" (1 தெசலோனிக்கர் 1:1)

தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 Thessalonians) [1][தொகு]

முன்னுரை

பவுல் எழுதியவற்றுள் இதுவே முதலாவது திருமுகம். அவர் இதனை கி.பி. 51ஆம் ஆண்டில் எழுதினார். தொடக்ககால மடலாக இருப்பதால் இதில் இறையியல் வளர்ச்சி மிகுதியாக இடம் பெறவில்லை. இருப்பினும் உயிர்பெற்றெழுதல், ஆண்டவரின் இறுதி வருகை ஆகியவை பற்றிய இதன் கருத்துக்கள் முக்கியமானவை.

சூழலும் நோக்கமும்[தொகு]

மாசிதோனியாவிலுள்ள ஒரு துறைமுக நகரம் தெசலோனிக்கா. அங்கு யூதர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தார்கள். பவுல் தம் இரண்டாம் நற்செய்திப் பயணத்தின்போது தெசலோனிக்கா வந்தார்; அங்கு எதிர்ப்பு இருந்ததால் பெரேயா வழி ஏதென்சு சென்றார். அங்கிருந்தபோது தெசலோனிக்கர் பற்றிய நினைவே அவர் நெஞ்சில் நிறைந்திருந்தது. தாமே அங்குச் செல்ல முடியாத நிலையில் பவுல் தமக்குப் பதில் திமொத்தேயுவை அனுப்பினார். திமொத்தேயு தெசலோனிக்கா சென்று திரும்பி வந்தபோது நல்ல செய்தி கொண்டு வந்தார். அதாவது அங்குள்ள சீடர்கள் இன்னலகளுக்கிடையே தளரா ஊக்கத்துடன் கிறிஸ்தவராகத் தொடர்ந்து நிலைத்திருக்கின்றனர் என்பதை அவர் பவுலிடம் தெரிவித்தார்; அத்துடன், இறந்துபோனவர்கள் குறித்து அவர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.

நல்ல செய்தி அறிந்து மகிழ்ந்த பவுல் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் தெசலோனிக்கரின் தவறான கண்ணோட்டங்களைக் களையவும் விரும்பிக் கொரிந்திலிருந்து இத்திருமுகத்தை எழுதினார்.

உள்ளடக்கம்[தொகு]

இத்திருமுகத்தில் பவுல் தெசலோனிக்க மக்களுடன் கொண்டிருந்த உறவு, அவர்கள்மேல் கொண்டிருந்த அக்கறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்; அங்குள்ள கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துகிறார்; அவர்கள் கிறிஸ்துவிடம் கொண்டிருந்த அன்புக்காகவும் நம்பிக்கைக்காகவும் நன்றி கூறுகிறார்; அவர்களுடன் இருந்தபோது அவர் வாழ்ந்த வாழ்வை நினைவூட்டுகிறார்; கிறிஸ்துவின் வருகை குறித்த ஐயப்பாட்டிற்கு விடையளிக்கிறார்; "கிறிஸ்துவின் வருகைக்குமுன் இறந்தவர்கள், கிறிஸ்து வரும்போது நிலைவாழ்வில் பங்குபெறுவார்களா? எப்போது கிறிஸ்து வருவார்?' போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரத்தில் கிறிஸ்துவின் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து அமைதியாக உழைக்கப் பணிக்கிறார். கிறிஸ்து திரும்ப வருதல் எந்த நாளில் நிகழும் எனத் தெரியாததால், அவரது வருகைக்காக எப்போதும் தயாராயிருக்குமாறு வேண்டுகிறார்.

1 தெசலோனிக்கர்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை

(வாழ்த்தும், தெசலோனிக்கரின் நம்பிக்கையும் முன்மாதிரியும்)

1:1-10 382
2. தெசலோனிக்காவில் பவுல் ஆற்றிய பணி 2:1-16 382 - 383
3. திருமுகம் எழுதப்பட்ட சூழ்நிலை 2:17 - 3:13 383 - 384
4. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை 4:1-12 384 - 385
5. ஆண்டவரின் வருகை 4:13 - 5:11 385 - 386
6. பொது அறிவுரைகள் 5:12-22 386
7. முடிவுரை 5:23-28 386

1 தெசலோனிக்கர் (1 Thessalonians)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. முன்னுரை[தொகு]

வாழ்த்து[தொகு]


1 தந்தையாம் கடவுளோடும்
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற
தெசலோனிக்க சபைக்கு,
பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது:
உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! [1]

தெசலோனிக்கரின் நம்பிக்கையும் முன்மாதிரியும்[தொகு]


2 நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது
இடைவிடாது உங்களை நினைத்து
உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்.
3 செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும்,
அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும்,
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள
உங்கள் மனவுறுதியையும்
நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம்.
4 கடவுளின் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
5 ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி,
தூய ஆவி தரும் வல்லமையோடும்
மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டுவந்தோம்.
உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே
எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
6 மிகுந்த வேதனை நடுவிலும்
நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள்.
இவ்வாறு எங்களைப்போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள். [2]
7 மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள,
நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள்.
8 எப்படியெனில் ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது.
கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது
மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல,
எல்லா இடங்களிலும் தெரியவந்துள்ளது.
எனவே இதைப்பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
9 நாங்கள் உங்களிடம் வந்தபோது
எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள்.
நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு,
உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக்
கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள்.
10 இவ்வாறு நீங்கள் வானினின்று வரும்
அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.
அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர்.
இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.


குறிப்புகள்

[1] 1:1 = திப 17:1.
[2] 1:6 = திப 17:5-9.

அதிகாரம் 2[தொகு]

2. தெசலோனிக்காவில் பவுல் ஆற்றிய பணி[தொகு]


1 சகோதர சகோதரிகளே!
நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாகவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.
2 உங்களிடம் வருமுன்பே பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம்,
இழிவாக நடத்தப்பட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும்.
இருப்பினும் பெரும் எதிர்ப்புக்கிடையில்
கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க
நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம். [1]
3 எங்கள் அறிவுரைகள் தவற்றையோ, கெட்ட எண்ணத்தையோ,
வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவையல்ல.
4 நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி,
நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார்.
அதற்கேற்ப, நாங்கள் பேசுகிறோம்.
மனிதர்களுக்கு அல்ல,
எங்கள் இதயங்களைச் சோதித்தறியும் கடவுளுக்கே
உகந்தவர்களாயிருக்கப் பார்க்கிறோம்.
5 நாங்கள் என்றும் போலியாக உங்களைப் புகழ்ந்ததேயில்லை.
இது உங்களுக்குத் தெரிந்ததே.
போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை.
இதற்குக் கடவுளே சாட்சி.
6-7 கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில்
நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும்.
ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ,
மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை.
மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது,
தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல்,
கனிவுடன் நடந்து கொண்டோம்.
8 இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய்,
கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி,
எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்;
ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள்.
9 அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம்
என்பதை நினைத்துப் பாருங்கள்.
உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி,
எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே,
கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்.


10 நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக
நாங்கள் மிகவும் தூய்மையோடும் நேர்மையோடும்
குற்றமின்றியும் ஒழுகினோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி!
11 ஒரு தந்தை தம் பிள்ளைகளை நடத்துவதுபோல உங்களை நடத்தினோம்.
12 தம்முடைய ஆட்சியிலும் மாட்சியிலும் பங்குபெற
உங்களை அழைக்கும் கடவுளுக்கு ஏற்ப நடக்குமாறு
உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கினோம்;
உங்களை ஊக்குவித்தோம்; வற்புறுத்தினோம்.
இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவையே.


13 கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது
அதை மனித வார்த்தையாக அல்ல,
கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள்.
இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம்.
உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்;
அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது.
14 சகோதர சகோதரிகளே!
இயேசு கிறிஸ்துவின் உறவில் யூதேயாவில் வாழும் கடவுளின் சபைகளுக்கு
நேர்ந்ததுபோலவே உங்களுக்கும் நேர்ந்தது.
யூதர்களால் அவர்கள் துன்புறுத்தப்பட்டதுபோலவே
நீங்களும் உங்கள் சொந்த இனத்தாரால் துன்புறுத்தப்பட்டீர்கள். [2]
15 அந்த யூதரே ஆண்டவராகிய இயேசுவையும் இறைவாக்கினரையும் கொன்றார்கள்.
எங்களையும் துரத்திவிட்டார்கள்.
அவர்கள் கடவுளுக்கு உகந்தவர்கள் அல்ல; மனித இனத்திற்கே எதிரிகள். [3]
16 ஏனெனில், பிற இனத்தார் மீட்புப் பெறுமாறு
நாங்கள் அவர்களிடம் பேசுவதைத் தடுக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களை என்றும் பெருக்கிக் கொண்டே போகிறார்கள்.
இறுதியில் கடவுளின் சினம் அவர்கள் மேல் வந்துவிட்டது.

3. திருமுகம் எழுதப்பட்ட சூழ்நிலை[தொகு]

பவுல் மீண்டும் தெசலோனிக்கா செல்ல விரும்புதல்[தொகு]


17 அன்பர்களே! நாங்கள் உள்ளத்தால் அல்ல,
உடலால் மட்டுமே உங்களை விட்டுச் சிறிதுகாலம் பிரிந்து தவித்தோம்.
உங்கள் முகத்தைக் காண பேராவலோடு ஏங்கியிருந்தோம்.
18 ஆகையால் நாங்கள் உங்களிடம் வர விரும்பினோம்.
அதிலும் பவுலாகிய நான் ஒருமுறை அல்ல,
இருமுறை உங்களிடம் வரத் திட்டமிட்டேன்.
ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்து விட்டான்.
19 நம் ஆண்டவர் இயேசுவின் வருகையின்போது, அவர்முன்,
உங்களைத்தானே நாங்கள் எதிர்நோக்கி இருக்கப் போகிறோம்?
நீங்கள்தானே எங்களுக்கு மகிழ்ச்சியும்,
பெருமையோடு சூடப்போகும் வெற்றிவாகையுமாய் இருக்கப் போகிறீர்கள்?
உங்களைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?
20 ஆம், உங்களால்தான் எங்களுக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.


குறிப்புகள்

[1] 2:2 = திப 16:19-24; 17:1-9.
[2] 2:14 = திப 17:5.
[3] 2:15 = திப 9:23,29; 13:45,50; 14:2,5,19; 17:5, 13; 18:12.


(தொடர்ச்சி): தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 3 முதல் 5 வரை