திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 3 முதல் 5 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம். உறங்குபவர் இரவில்தான் உறங்குவர்; குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர். ஆனால் பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம். நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புபெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம். (1 தெசலோனிக்கர் 5:4-8)


1 தெசலோனிக்கர் (1 Thessalonians)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 5 வரை

அதிகாரம் 3[தொகு]


1 ஆகவே, இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாமல் போனதால்,
நாங்கள் ஏதென்சு நகரில் தனிமையாக இருக்க முடிவு செய்தோம். [1]
2 நம் சகோதரரும், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும்
கடவுளின் உடன் உழைப்பாளருமாகிய திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பினோம்.
3 நீங்கள் படும் துன்பங்களால் எவரும் மனம் தளர்ந்து போகாதவாறு,
உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி உங்களை ஊக்குவிக்க அவரை அனுப்பினோம்.
துன்பங்கள் வந்தே தீரும் என்பது உங்களுக்குத் தெரியும்.
4 நாம் துன்பப்படத்தான் வேண்டும் என்று
நாங்கள் உங்களோடு இருந்தபொழுதே உங்களுக்குச் சொன்னோம்.
அவ்வாறே நடந்திருக்கிறது; இதுவும் உங்களுக்குத் தெரியும்.
5 ஆகவே, நமது பிரிவைத் தாங்க முடியாமல்
உங்கள் நம்பிக்கையைப் பற்றி அறிந்துகொள்ள திமொத்தேயுவை அனுப்பினேன்.
ஏனெனில் சோதிப்பவன் உங்களைச் சோதனைக்குட்படுத்தி விட்டானோ என்றும்
அதனால் எங்கள் உழைப்பு வீணாகி விட்டதோ என்றும் அஞ்சினேன்.
6 ஆனால் இப்பொழுது திமொத்தேயு உங்களிடமிருந்து திரும்பி எங்களிடம் வந்துவிட்டார்;
உங்களுடைய நம்பிக்கையையும் அன்பையும் குறித்து நல்ல செய்தி சொன்னார்.
நாங்கள் உங்களைக் காண ஏங்குவதுபோல நீங்களும் எங்களைக் காண விழைவதாகவும்,
எப்பொழுதும் எங்களை அன்போடு நினைவுகூருவதாகவும் அறிவித்தார். [2]
7 ஆகையால், அன்பர்களே!
எங்கள் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் உங்களது நம்பிக்கையைக் கண்டு
உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம்.
8 நீங்கள் ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருக்கிறீர்கள்
என்று அறிந்ததும் எங்களுக்கு உயிர் வந்தது.
9 நம் கடவுள் முன்னிலையில் உங்களால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அதற்காக உங்கள் பொருட்டு எத்தகைய நன்றியை அவருக்குக் கைம்மாறாகக் காட்ட இயலும்?
10 நாங்கள் உங்கள் முகத்தைக் காணவும்,
உங்கள் நம்பிக்கையில் குறைவாகவுள்ளவற்றை நிறைவாக்கவும்,
அல்லும் பகலும் மிகுந்த ஆர்வமுடன் மன்றாடுகிறோம்.


11 இப்பொழுது நம் தந்தையாம் கடவுளும்,
நம் ஆண்டவராம் இயேசுவும்
உங்களிடம் வருவதற்கான வழியை எங்களுக்குக் காட்டுவார்களாக!
12 உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல,
நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும்
ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!
13 இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது,
நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு
அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!


குறிப்புகள்

[1] 3:1 = திப 17:15.
[2] 3:6 = திப 18:5.


அதிகாரம் 4[தொகு]

4. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை[தொகு]


1 சகோதர சகோதரிகளே!
நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்;
அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள்.
இதில் இன்னும் முன்னேற வேண்டுமென
ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம்.
2 ஆண்டவராகிய இயேசுவின் பெயரால்
நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.
3 நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்;
பரத்தைமையை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
4 உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் [1] தூயவராகக் கருதி,
மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும்.
5 கடவுளை அறியாத பிற இனத்தாரைப் போன்று
நீங்கள் கட்டுக்கடங்காப் பாலுணர்வுக்கு இடம் கொடுக்கலாகாது.
6 இதில் எவரும் தவறிழைத்துத் தம் சகோதரரை வஞ்சிக்கக் கூடாது.
ஏனெனில் இத்தகைய செயல்கள் அனைத்தையும் ஆண்டவரே தண்டிப்பார்.
இதை நாங்கள் முன்னமே உங்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்;
எச்சரித்தும் இருக்கிறோம்.
7 கடவுள் நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல, தூய வாழ்வுக்கே அழைத்தார்.
8 எனவே இக்கட்டளைகளைப் புறக்கணிப்போர், மனிதரை அல்ல,
தம்முடைய தூய ஆவியை உங்களுக்கும் அளிக்கும் கடவுளையே புறக்கணிக்கின்றனர்.


9 சகோதர அன்பைப்பற்றி உங்களுக்கு எழுதவேண்டிய தேவையில்லை.
ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த,
கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.
10 உண்மையிலேயே நீங்கள்
மாசிதோனியாவிலுள்ள சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும்
அன்பு செலுத்தி வருகிறீர்கள்.
அன்பர்களே! இதில் இன்னும் முன்னேற வேண்டுமென்று
உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
11 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதுபோல,
உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு,
உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
12 அப்பொழுது திருச்சபைக்கு வெளியே இருப்பவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்;
பிறர் கையை நம்பாதபடி வாழ்வீர்கள்.

5. ஆண்டவரின் வருகை[தொகு]


13 சகோதர சகோதரிகளே!
இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என
நாங்கள் விரும்புகிறோம்;
எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.
14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம்.
அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில்
இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.
15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே:
ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம்,
இறந்தோரை முந்திவிட மாட்டோம்.
16 கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க,
கடவுளுடைய எக்காளம் முழங்க,
ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்;
அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள்
முதலில் உயிர்த்தெழுவர்.
17 பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம்,
அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு,
வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம்.
இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். [2]
18 எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.


குறிப்புகள்

[1] 4:4 - இச்சொல்லை "உடல்" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[2] 4:15-17 = 1 கொரி 15:51,52.


அதிகாரம் 5[தொகு]


1 சகோதர சகோதரிகளே!
இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து
உங்களுக்கு எழுதத் தேவையில்லை.
2 ஏனெனில் திருடன் இரவில் வருவதுபோல,
ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். [1]
3 'எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது,
கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோல,
திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.
4 ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல;
ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது.
5 நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள்.
நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.
6 ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது;
விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.
7 உறங்குபவர் இரவில்தான் உறங்குவர்;
குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர்.
8 ஆனால் பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம்.
நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும்,
மீட்புபெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம். [2]
9 ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார்.
10 நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம்
அவர் நம்பொருட்டு இறந்தார்.
11 ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல,
ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்;
ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.

6. பொது அறிவுரைகள்[தொகு]


12 சகோதர சகோதரிகளே!
உங்களிடையே உழைத்து, ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி,
உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
13 அவர்கள் பணியின்பொருட்டு, அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள்.
உங்களிடையே அமைதி நிலவட்டும்.


14 அன்பர்களே! நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே:
சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்;
மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்;
வலுவற்றோர்க்கு உதவுங்கள்;
எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.
15 எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி,
எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.


16 எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
17 இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
18 எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.


19 தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.
20 இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம்.
21 அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
22 எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.

7. முடிவுரை[தொகு]


23 அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக.
அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது
உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும்
குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக!
24 உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.


25 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்.
26 தூய முத்தம் கொடுத்துச் சகோதரர் சகோதரிகள் எல்லாரையும் வாழ்த்துங்கள்.
27 அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று
ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன்.
28 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக!


குறிப்புகள்

[1] 5:2 = மத் 24:43; லூக் 12:39; 2 பேது 3:10.
[2] 5:8 = எசா 59:17; எபே 6:13-17.


(தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): தெசலோனிக்கருக்கு எழுதிய 2ஆம் திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை