திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
"சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார்." - மத்தேயு 19:13-15

மத்தேயு நற்செய்தி (Matthew)[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19[தொகு]

விண்ணரசின் வருகை[தொகு]

மண முறிவு[தொகு]

(மாற் 10:1-12)


1 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று
யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.
2 பெருந்திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.
அவர்களை அவர் அங்கே குணமாக்கினார்.
3 பரிசேயர் அவரை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன்,
"ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?"
என்று கேட்டனர்.
4 அவர் மறுமொழியாக,
"படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்
'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்' என்று
நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?" என்று கேட்டார். [1]


5 மேலும் அவர்,

"இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத்


தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
6 இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.


எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்."[2]


என்றார்.
7 அவர்கள் அவரைப் பார்த்து,
"அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து
மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?" என்றார்கள். [3]
8 அதற்கு அவர் "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே
உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார்.
ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.
9 பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி
வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத்
தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும்
விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். [4] [5]
10 அவருடைய சீடர்கள் அவரை நோக்கி,
"கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால்
திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது" என்றார்கள்.
11 அதற்கு அவர், "அருள்கொடை பெற்றவரன்றி
வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.
12 சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர்.
வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்குத்
தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.
இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்" என்றார்.

சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்[தொகு]

(மாற் 10:13-16; லூக் 18:15-17)


13 சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு
அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
14 ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்;
அவர்களைத் தடுக்காதீர்கள்;
ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார்.
15 அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு
அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான இளைஞர்[தொகு]

(மாற் 10:17-31; லூக் 18;18-30)


16 அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் வந்து,
"போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான்
என்ன நன்மை செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
17 இயேசு அவரிடம்,
"நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்?
நல்லவர் ஒருவரே.
நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்" என்றார்.
18 அவர், "எவற்றை?" என்று கேட்டார்.
இயேசு, "கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே;
களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; [6]
19 தாய் தந்தையை மதித்து நட.
மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல்
உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்று கூறினார். [7]
20 அந்த இளைஞர் அவரிடம்,
"இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்துவந்துள்ளேன்.
இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?" என்று கேட்டார்.
21 அதற்கு இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய்,
உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்.
அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.
பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார். [8]
22 அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார்.
ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
23 இயேசு தம் சீடரிடம்,
"செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்.
24 மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்:
செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட
ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.


25 சீடர்கள் இதைக் கேட்டு,
"அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?" என்று கூறி
மிகவும் வியப்படைந்தார்கள்.
26 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி,
"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்" என்றார். [9]
27 அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து,
"நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே;
எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்டார்.
28 அதற்கு இயேசு,
"புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.
அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும்
இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப்
பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். [10]
29 மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ,
சகோதரர்களையோ, சகோதரிகளையோ,
தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ,
நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும்
நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.
30 ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர்.
கடைசியானோர் பலர் முதன்மையாவர்" என்று அவர்களிடம் கூறினார். [11]


குறிப்புகள்

[1] 19:4 = தொநூ 1:27; 5:2.
[2] 19:5 = தொநூ 2:24; 1 கொரி 6:16; 7:10.
[3] 19:7 = இச 24:1-4; மத் 5:31.
[4] 19:9 = மத் 5:32; லூக் 16:18; 1 கொரி 7:10,11.
[5] 19:9 - "விலக்கப்பட்டவளை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்" என்னும் சொற்றொடர்
சில முக்கியமல்லாத கையெழுத்துப்படிகளில் காணப்படுகிறது.
[6] 19:18 = விப 20:13-15; இச 5:18-20.
[7] 19:19 = விப 20:12; லேவி 19:18; இச 5:16.
[8] 19:21 = மத் 13:44-46.
[9] 19:26 = லூக் 1:37.
[10] 19:28 = தானி 7:22; லூக் 22:30; 1 கொரி 6:2; திவெ 3:21; 20:4.
[11] 19:30 = மத் 20:16; லூக் 13:30.


அதிகாரம் 20[தொகு]

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை[தொகு]


1 "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்:
நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த
விடியற்காலையில் வெளியே சென்றார்.
2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என
வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு
அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.
3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது
சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.
4 அவர்களிடம், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்;
நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்" என்றார்.
5 அவர்களும் சென்றார்கள்.
மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும்
பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.
6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று
வேறு சிலர் நிற்பதைக் கண்டார்.
அவர்களிடம், "நாள் முழுவதும் வேலை செய்யாமல்
ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
7 அவர்கள் அவரைப் பார்த்து,
"எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை" என்றார்கள்.
அவர் அவர்களிடம், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்" என்றார்.
8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர்
தம் மேற்பார்வையாளரிடம்,
"வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை
அவர்களுக்குரிய கூலி கொடும்" என்றார். [1]
9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள்
ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.
10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள்.
ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.
11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,
12 "கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள்.
பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு
இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள்.
13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து,
"தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை.
நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?
14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும்.
உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.
15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா?
அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்றார்.
16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர்.
முதன்மையானோர் கடைசியாவர்" என்று இயேசு கூறினார். [2]

இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல்[தொகு]

(மாற் 10:32-34; லூக் 18:31-34)


17 இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில்
பன்னிரு சீடரையும் தனியே அழைத்து,
18 "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம்.
மானிட மகன் தலைமைக் குருக்களிடமும்,
மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்.
அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.
19 அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து,
சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்.
ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்" என்று அவர்களிடம் கூறினார்.

செபதேயுவின் மக்கள் சார்பில் வேண்டுகோள்[தொகு]

(மாற் 10:35-45)


20 பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு
இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.
21 "உமக்கு என்ன வேண்டும்?" என்று இயேசு அவரிடம் கேட்டார்.
அவர், "நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள்
ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும்
இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்" என்று வேண்டினார்.
22 அதற்கு இயேசு,
"நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை.
நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?" என்று கேட்டார்.
அவர்கள் "எங்களால் இயலும்" என்றார்கள்.
23 அவர் அவர்களை நோக்கி,
"ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்.
ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல;
மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ
அவர்களுக்கே அவை அருளப்படும்" என்றார்.
24 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும்
அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.
25 இயேசு அவர்களை வரவழைத்து,
"பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள்.
உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்;
இதை நீங்கள் அறிவீர்கள்.
26 உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது.
உங்களுள் பெரியவராக இருக்கு விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். [3]
27 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர்
உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். [4]
28 இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல,
தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத்
தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். [5]

பார்வையற்றோர் இருவர் பார்வை பெறுதல்[தொகு]

(மாற் 10:46-52; லூக் 18;35-42)


29 அவர்கள் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது
பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.
30 அப்பொழுது வழியோரத்தில் உட்கார்ந்திருந்த பார்வையற்றோர் இருவர்
இயேசு அவ்வழியே கடந்து செல்கிறார் என்று கேள்விப்பட்டு,
"ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்தினர்.
31 மக்கள் கூட்டத்தினர் அவர்களைப் பேசாதிருக்குமாறு அதட்டினர்.
ஆனால் அவர்கள், "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்"
என்று உரக்கக் கத்தினார்கள்.
32 இயேசு நின்று, அவர்களைக் கூப்பிட்டு,
"நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.
33 அதற்கு அவர்கள், "ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும்" என்றார்கள்.
34 இயேசு பரிவு கொண்டு அவர்களுடைய விழிகளைத் தொட்டார்.
உடனே அவர்கள் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றினார்கள்.


குறிப்புகள்

[1] 20:8 = லேவி 19:13; இச 24:15.
[2] 20:16 = மத் 19:30; மாற் 10:31; லூக் 13:30.
[3] 20:25,26 = லூக் 22:25,26.
[4] 20:26,27 = மத் 23:11; மாற் 5:35; லூக் 22:26; யோவா 13:4,15.
[5] 20:28 = மத் 26:28; உரோ 5:6; 1 திமொ 2:6.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை