திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இயேசு அவர்களை நோக்கி, 'நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. மக்களெல்லாரும், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?" என்று வியந்தனர்." - மத்தேயு 8:26-27

மத்தேயு நற்செய்தி (Matthew)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

தீர்ப்பு அளித்தல்[தொகு]

(லூக் 6:37-38, 41-42)


1 "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்;
அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
2 நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ,
அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். [1]
3 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல்
உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை
நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?
4 அல்லது அவரிடம்,
" உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?" என்று
எப்படிக் கேட்கலாம்?
இதோ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே!
5 வெளிவேடக்காரரே,
முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள்.
அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து
துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
6 தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்.
அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும்.
மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்;
எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.

வேண்டுதலின் விளைவு[தொகு]

(லூக் 11:9-13)


7 "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்;
தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்;
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்;
தேடுவோர் கண்டடைகின்றனர்;
தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக்
கல்லைக் கொடுப்பாரா?
10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?
11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு
நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள்.
அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை
தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

பொன்விதி[தொகு]

(லூக் 6:31)


12 "ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம்
நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே. [2]

இடுக்கமான வாயில்[தொகு]

(லூக் 13:24)


13 "இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்;
ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது;
அதன் வழியே செல்வோர் பலர்.
14 வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது;
இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.

போலி இறைவாக்கினர்[தொகு]

(லூக் 6:43-44)


15 "போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர்.
ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.
16 அவர்களின் செயல்களைக் கொண்டே
அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள்.
முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ,
முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா?
17 நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்.
கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.
18 நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது.
கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.
19 நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு
நெருப்பில் எறியப்படும். [3]
20 இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென
அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

சொல்லும் செயலும்[தொகு]

(லூக் 13:25-27)


21 "என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச்
சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.
மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி
செயல்படுபவரே செல்வர்.
22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே,
உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?
உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா?
உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர்.
23 அதற்கு நான் அவர்களிடம்,
'உங்களை எனக்குத் தெரியவே தெரியாது.
நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்' என
வெளிப்படையாக அறிவிப்பேன்.[4]

இருவகை அடித்தளங்கள்[தொகு]

(லூக் 6:47-49)


24 "ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு
இவற்றின்படி செயல்படுகிற எவரும்
பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது;
அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை.
ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு
இவற்றின்படி செயல்படாத எவரும்
மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.
27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது;
அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது."
28 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது
அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர்.
29 ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி
அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.[5]


குறிப்புகள்

[1] 7:2 = மாற் 4:24.
[2] 7:12 = லூக் 6:31.
[3] 7:19 = மத் 3:10; லூக் 3:9; யோவா 15:6.
[4] 7:23 = திபா 6:8.
[5] 7:28,29 = மாற் 1:22; லூக் 4:32; யோவா 7:15.

அதிகாரம் 8[தொகு]

2. விண்ணரசுப் பணி[தொகு]

தொழுநோயாளர் நோய் நீங்குதல்[தொகு]

(மாற் 1:40-45; லூக் 5:12-16)


1 இயேசு மலையிலிருந்து இறங்கிய பின்
பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
2 அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து,
"ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்.
3 இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு,
"நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று சொன்னார்.
உடனே அவரது தொழுநோய் நீங்கியது.
4 இயேசு அவரிடம்,
"இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும்.
ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி
மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.
நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்றார்.[1]

நூற்றுவர் தலைவரின் பையன் குணமடைதல்[தொகு]

(லூக் 7:1-10; யோவா 4:43-54)


5 இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது
நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.
6 "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால்
மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்றார்.
7 இயேசு அவரிடம்,
"நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.
8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக,
"ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
9 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன்.
என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர்.
நான் அவர்களுள் ஒருவரிடம் 'செல்க' என்றால் அவர் செல்கிறார்.
வேறு ஒருவரிடம் 'வருக' என்றால் அவர் வருகிறார்.
என் பணியாளரைப் பார்த்து 'இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்" என்றார்.
10 இதைக் கேட்டு இயேசு வியந்து,
தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி,
"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்:
இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.
11 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து,
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன்
விண்ணரசின் பந்தியில் அமர்வர். [2]
12 அரசுக்கு உரியவர்களோ
புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள்.
அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார். [3]
13 பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி,
"நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்றார்.
அந்நேரமே பையன் குணமடைந்தான்.

பேதுருவின் மாமியார் குணமடைதலும்
இயேசு பலருக்குக் குணமளித்தலும்
[தொகு]

(மாற் 1:29-34; லூக் 4:38-41)


14 இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது,
பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார்.
15 இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று.
அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.
16 பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர்.
அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின.
மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினர்.
17 இவ்வாறு,

'அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்;
நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்'


என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது. [4]

இயேசுவைப் பின்தொடர விரும்பியவர்கள்[தொகு]

(லூக் 9:57-62)


18 இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு,
மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து,
"போதகரே, நீர் எங்கே சென்றாலும்
நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.
20 இயேசு அவரிடம்,
"நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும்,
வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு.
மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.
21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி,
"ஐயா, முதலில் நான் போய்
என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும்" என்றார்.
22 இயேசு அவரைப் பார்த்து,
"நீர் என்னைப் பின்பற்றி வாரும்.
இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம்.
அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.

காற்றையும் கடலையும் அடக்குதல்[தொகு]

(மாற் 4:35-41; லூக் 8:22-23)


23 பின்பு இயேசு படகில் ஏறவே,
அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள்.
24 திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது.
படகுக்குமேல் அலைகள் எழுந்தன.
ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.
25 சீடர்கள் அவரிடம் வந்து,
"ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்"
என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
26 இயேசு அவர்களை நோக்கி,
"நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டு,
எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார்.
உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. [5]
27 மக்களெல்லாரும்,
"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!
இவர் எத்தகையவரோ?" என்று வியந்தனர்.

கதரேனர் பகுதியில் பேய்பிடித்த இருவரை நலமாக்குதல்[தொகு]

(மாற் 5:2-20; லூக் 8:26-39)


28 இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது,
பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி
அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர்.
அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு
அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்.
29 அவர்கள், "இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை?
குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?"
என்று கத்தினார்கள்.
30 அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில்
பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.
31 பேய்கள் அவரிடம்,
"நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால்
அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்" என்று வேண்டின.
32 அவர் அவற்றிடம், "போங்கள்" என்றார்.
அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகந்தன.
உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து
கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.
33 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள்.
அவர்கள் நகருக்குள் சென்று,
பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும்,
நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள்.
34 உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து,
அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.


குறிப்புகள்

[1] 8:4 = லேவி 14:1-32.
[2] 8:11 = லூக் 13:29.
[3] 8:12 = மத் 22:13; 25:30; லூக் 13:28.
[4] 8:17 = எசா 53:4; யோவா 1:29.
[5] 8:26 = திபா 107:29.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை