திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வானதூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார். அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய உண்மைக்கும், ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று பகர்ந்தார். இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறு பெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது." (திருவெளிப்பாடு 1:1-3)


யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு (Revelation) [1][தொகு]

முன்னுரை

புதிய ஏற்பாட்டின் இறுதி நூலாகிய திருவெளிப்பாடு வேறுபட்ட ஓர் இலக்கிய வகையைச் சார்ந்தது. இதில் அடையாளங்கள் மிகுதியாய் உள்ளன. இத்தகு இலக்கிய வகை கி.மு. 2ஆம் நூற்றாண்டையொட்டித் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. யூதர்கள் பிறஇனத்தாரால் துன்புறுத்தப்பட்ட காலத்தில் நம்பிக்கையும் ஊக்கமும் ஆறுதலும் ஊட்டுவதற்காகவும் அக்கால நிகழ்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட பார்வையில் புரிந்துகொள்ள உதவுவதற்காகவும் திருவெளிப்பாட்டு வகை நூல்கள் உருவாயின. தானியேல் நூல் இத்தன்மை கொண்டது.

ஆசிரியர்[தொகு]

இந்நூலின் ஆசிரியர் தம்மை யோவான் எனக் குறிப்பிடுகிறார் (1:1,4,9; 22:8). தாம் ஒரு திருத்தூதர் என்றோ இயேசுவின் சீடர் என்றோ அவர் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்ளவில்லை. மொழிநடை, இலக்கணம், இறையியல் கருத்துகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் இது நான்காம் நற்செய்தியை எழுதிய ஆசிரியரால் எழுதப்பட்டிருக்க இயலாது என்பது புலனாகும். தொடக்கக் காலத்திலிருந்தே கிறிஸ்தவ எழுத்தாளர்கள் இந்நூலின் ஆசிரியர் திருத்தூதர் யோவானே என்று கூறி வந்திருப்பது உண்மை எனினும், அகச்சான்று அடிப்படையில் பார்க்கும்போது இந்நூலாசிரியர் யோவான் என்னும் பெயருடைய தொடக்க கால மூப்பர் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்று சொலவதே முறையாகத் தெரிகிறது.

சூழலும் நோக்கமும்[தொகு]

இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் கிறிஸ்தவர்கள் கொடிய துன்பங்களுக்கு இலக்காயினர். அது நீரோவின் காலம் (கி.பி. 54-68) எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் தொமீசியன் காலமாக (கி.பி. 89-96) இருக்கும் எனக் கூறுவதே ஏற்புடையதாகத் தெரிகிறது. உரோமை அதிகாரிகள் அரச வணக்கத்தைப் பரப்பிய நேரத்தில் உரோமைப் பேரரசர் சீசரை வணங்க மறுத்த கிறிஸ்தவர்கள் வெறுப்புக்கும் இகழ்ச்சிக்கும் இன்னலுக்கும் உள்ளானார்கள். இந்நிலையில்தான் இதன் ஆசிரியர் பத்மு தீவிலிருந்து இதனை எழுதியிருக்க வேண்டும்.

உள்ளடக்கம்[தொகு]

வாசகர்கள் துணிச்சலோடு அரச வழிபாட்டை எதிர்க்க வேண்டும். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இறுதிப் போர் விரைவில் வர இருக்கிறது. சாத்தான் கிறிஸ்துவின் சீடர்களுக்கு எதிராகத் துன்பங்களை மிகுதிப்படுத்துவான். ஆனால், கிறிஸ்தவர்கள் சாவுவரை உறுதியோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு அழிவு வராது என்பது உறுதி. கிறிஸ்து இயேசு வரும்போது அவர்கள் வெற்றி பெறுவார்கள். அப்போது கொடியவர்கள் என்றென்றைக்கும் அழிக்கப்படுவார்கள். கடவுளின் மக்களோ நிலைவாழ்வு பெறுவார்கள்.

அடையாளங்கள்[தொகு]

மேற்சொல்லப்பட்ட கருத்தை நேரடியாகச் சொல்வது ஆபத்தாக முடியும். எனவே இந்நூலில் பற்பல அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; காட்சிகள் மூலமாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

7 என்னும் எண் 52 முறை இடம்பெறுகிறது. இது முழுமையைக் குறிக்கும் எண். ஒரு வேளை இது கடவுளையும் உலகையும் உள்ளடக்கும் எண்ணாக இருக்கலாம். ஏனெனில் மூன்று என்னும் எண் கடவுளைக் குறிக்கும்; நான்கு என்னும் எண் உலகை குறிக்கும். இவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையைக் குறிக்கின்ற எண்ணாக ஏழு கருதப்பட்டிருக்கலாம். மேலும், 10, 1000 என்பவையும் முழுமையைக் குறிப்பனவாக உள்ளன.

144 என்னும் எண்ணும், 12000, 1,44,000 என்பவையும் திருச்சபையைக் குறித்து நிற்கின்றன. 7 என்னும் முழுமையில் பாதியான 3½ என்னும் எண்ணைப் பயன்படுத்தி, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் துன்பங்கள் நிகழும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது என ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

கிறிஸ்தவர்களின் துன்பத்திற்குச் சின்னமாய் இருப்பவை ஏழு முத்திரைகள் (அதி 7,8), ஏழு எக்காளங்கள் (அதி 8,9), ஏழு கிண்ணங்கள் (அதி 16).

துன்புறுத்துவோருக்குச் சின்னங்களாய் இருப்பவை விலங்கு (அதி 13), விலைமகள் (அதி 17), பாபிலோன் (அதி 18). இங்கு பாபிலோன் எதிரிகளின் அரசான உரோமையைக் குறித்து நிற்கிறது.

இயேசு குரு என்றும் (1:12-16), சிங்கம் என்றும் (5:5), ஆட்டுக்குட்டி என்றும் (5:6), குழந்தை என்றும் (12:5), மணமகன் என்றும் (22:12), விண்மீன் என்றும் (21:13, 22:16) குறிப்பிடப்படுகிறார். கதிரவனை ஆடையாக உடுத்திய பெண் (12:1-16) புதிய இஸ்ரயேலாகிய திருச்சபையைக் குறித்து நிற்கிறார்.

திருவெளிப்பாடு[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (நூன்முகம்) 1:1-3 470
2. ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்குக் கடிதம் 1:4 - 3:22 470 - 474
3. ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு 4:1 - 8:1 474 - 478
4. ஏழு எக்காளங்கள் 8:2 - 11:9 478 - 481
5. அரக்கப் பாம்பும் இரு விலங்குகளும் 12:1 - 13:18 481 - 484
6. காட்சிகள் 14:1 - 15:8 484 - 486
7. ஏழு கிண்ணங்கள் 16:1-21 486 - 488
8. பாபிலோனின் அழிவும் எதிரிகளின் தோல்வியும் 17:1 - 20:15 488 - 494
9. புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் 21:1 - 22:15 494 - 496
10. முடிவுரை 22:16-21 496

திருவெளிப்பாடு (Revelation)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. முன்னுரை[தொகு]

நூன்முகம்[தொகு]


1 இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு.
விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு
கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார்.
அவர் தம் வானதூதரை அனுப்பித்
தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார்.
2 அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய உண்மைக்கும்,
ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று பகர்ந்தார்.
3 இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும்
இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறு பெற்றோர்.
இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.

2. ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்குக் கடிதம்[தொகு]


4-5 ஆசியாவில் [1] உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது:
இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும்,
அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும்,
இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி;
இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்;
மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர்.
இவர் நம்மீது அன்புகூர்ந்தார்;
தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். [2] [3]
6 ஆட்சி உரிமை பெற்றவர்களாக,
அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும்
குருக்களாக நம்மை ஏற்படுத்தினார்.
இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென். [4]
7 இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார்.
அனைவரும் அவரைக் காண்பர்;
அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்;
அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும்
மாரடித்துப் புலம்புவர்.
இது உண்மை, ஆமென்! [5]
8 "அகரமும் னகரமும் நானே" [6] என்கிறார் கடவுளாகிய ஆண்டவர்.
இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. [7]

கிறிஸ்துவின் காட்சி[தொகு]


9 உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும்
ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான்
கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது.
10 ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே
எனக்குப் பின்னால் பெரும் குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன்.
11 "நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி,
எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா
ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை"
என்று அக்குரல் கூறியது.


12 என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன்.
அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன்.
13 அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன்.
அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். [8]
14 அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும்
உறைபனிபோலும் வெண்மையாய் இருந்தது.
அவருடைய கண்கள் தீப்பிழம்புபோலச் சுடர் விட்டன. [9]
15 அவருடைய காலடிகள் உலையிலிட்ட வெண்கலம்போலப் பளபளத்தன.
அவரது குரல் பெரும் வெள்ளத்தின் இரைச்சலை ஒத்திருந்தது. [10] [11]
16 அவர் தம் வலக்கையில் ஏழு விண்மீன்களைக் கொண்டிருந்தார்.
இருபுறமும் கூர்மையான வாள் ஒன்று அவரது வாயிலிருந்து வெளியே வந்தது.
அவரது முகம் நண்பகல் கதிரவன் போல் ஒளிர்ந்தது.


17 நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன்.
அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது:
"அஞ்சாதே! முதலும் முடிவும் நானே.
18 வாழ்பவரும் நானே.
இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன்.
சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. [12]
19 எனவே நீ காண்பவற்றை,
அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.
20 எனது வலக்கையில் நீ கண்ட ஏழு விண்மீன்கள்,
ஏழு பொன் விளக்குத்தண்டுகள் ஆகியவற்றின் மறைபொருள் இதுவே:
ஏழு விண்மீன்கள் ஏழு திருச்சபைகளின் வான தூதர்களையும்,
ஏழு விளக்குத்தண்டுகள் ஏழு திருச்சபைகளையும் குறிக்கும்.


குறிப்புகள்

[1] 1:4 - ஆசியா என்பது உரோமை மாநிலங்களுள் ஒன்று.
இது இன்றைய துருக்கி நாட்டின் ஒரு பகுதி ஆகும்.
[2] 1:4 = விப 3:14; திவெ 4:5.
[3] 1:5 = எசா 55:4; திபா 89:27.
[4] 1:6 = விப 19:6; திவெ 5:10.
[5] 1:7 = தானி 7:13; செக் 12:10; மத் 24:30; மாற் 13:26;
லூக் 21:27; யோவா 19:34,37; 1 தெச 4:17.
[6] 1:8 - கிரேக்க நெடுங்கணக்கில் முதல், கடைசி எழுத்துகளான
"அல்பாவும் ஒமேகாவும் நானே" என்பது மூலபாடம்.
[7] 1:8 = திவெ 22:13; விப 3:14.
[8] 1:13 = தானி 7:13; 10:5.
[9] 1:14 = தானி 7:9.
[10] 1:14,15 = தானி 10:6.
[11] 1:15 = எசே 1:24; 43:2.
[12] 1:18 = எசா 44:6; 48:12; திவெ 2:8; 22:13.

அதிகாரம் 2[தொகு]

எபேசுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்[தொகு]


1 "எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது:
'தமது வலக்கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு,
ஏழுபொன் விளக்குத்தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே:
2 உன் செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன்.
தீயவர்களை உன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்பதும்,
திருத்தூதர்களாய் இல்லாதிருந்தும் தங்களை அவ்வாறு
திருத்தூதர்கள் என அழைத்துக் கொள்ளுகின்றவர்களை நீ சோதித்துப் பார்த்து,
அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும்.
3 நீ மனவுறுதி கொண்டுள்ளாய்;
என் பெயரின்பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்;
ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
4 ஆனால் உன்னிடம் நான் காணும் குறை யாதெனில்,
முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை.
5 ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்து விட்டாய்
என்பதை நினைத்துப்பார்; மனம்மாறு;
முதலில் நீ செய்து வந்த செயல்களை இப்பொழுதும் செய்.
நீ மனம் மாறத் தவறினால்,
நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை
அது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன்.
6 இருப்பினும் உன்னிடம் நல்லது ஒன்றும் உண்டு.
நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செயல்களை நீயும் வெறுக்கிறாய்.
7 கேட்கச்செவி உடையோர்
திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.
கடவுளின் தோட்டத்தில் உள்ள
வாழ்வு தரும் மரத்தினுடைய கனியை
வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன்.' [1]

சிமிர்னாவுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்[தொகு]


8 "சிமிர்னாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது:
'முதலும் முடிவும் ஆனவர், இறந்தும் வாழ்பவர் கூறுவது இதுவே: [2]
9 உன் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன்.
ஆனால் உண்மையில் நீ செல்வம் பெற்றிருக்கிறாய் அன்றோ!
தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் உன்னைப்
பழித்துப் பேசுவதும் எனக்குத் தெரியும்.
அவர்கள் யூதர்கள் அல்ல; சாத்தானுடைய கூட்டமே.
10 உனக்கு வரவிருக்கின்ற துன்பத்தைப்பற்றி அஞ்சாதே.
இதோ! சோதிப்பதற்காக அலகை உன்னைச் சேர்ந்தோருள் சிலரைச்
சிறையில் தள்ளவிருக்கின்றது.
பத்து நாள் நீ வேதனையுறுவாய்.
இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு.
அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்.
11 கேட்கச் செவியுடையோர்
திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.
வெற்றி பெறுவோரை இரண்டாவது சாவு தீண்டவே தீண்டாது.' [3]

பெர்காமுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்[தொகு]


12 "பெர்காமில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது:
'இருபுறமும் கூர்மையான வாளைக் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே:
13 நீ எங்குக் குடியிருக்கிறாய் என நான் அறிவேன்.
அங்கேதான் சாத்தானின் அரியணை உள்ளது.
நீ என் பெயர் மீது உறுதியான பற்றுக் கொண்டுள்ளாய்;
சாத்தான் குடியிருக்கும் இடத்தில்,
நம்பிக்கையுள்ள என் சாட்சியான அந்திப்பா
உங்கள் நடுவே கொலை செய்யப்பட்ட காலத்தில்கூட
நீ என்மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட்டு விலகவில்லை.
14 ஆயினும் உன்னிடம் நான் காணும் குறைகள் சில உண்டு;
பிலயாமின் போதனையில் பிடிப்புள்ள சிலர் உன் நடுவே உள்ளனர்.
இந்தப் பிலயாம்தான் இஸ்ரயேல் மக்கள் இடறிவிழும்படி செய்யப்
பாலாக்குக்குக் கற்றுக்கொடுத்தவன்.
அதனால் அவர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டு
பரத்தைமையில் ஈடுபட்டார்கள். [4]
15 இதுபோலவே நிக்கொலாயரின் போதனையில் பிடிப்புள்ள சிலரும்
உன் நடுவில் உள்ளனர்.
16 ஆகவே மனம்மாறு.
இல்லையேல், நான் விரைவில் உன்னிடம் வருவேன்;
என் வாயிலிருந்து வெளிவரும் வாள்கொண்டு அவர்களோடு போர்தொடுப்பேன்.


17 கேட்கச் செவி உடையோர்
திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.
மறைத்து வைக்கப்பட்டுள்ள மன்னாவை
வெற்றி பெறுவோருக்கு அளிப்பேன்;
வெள்ளைக் கல் ஒன்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.
அதில் ஒரு புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.
அதைப் பெறுபவரேயன்றி வேறு யாரும் அப்பெயரை அறியார்.'

தியத்திராவுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்[தொகு]


18 "தியத்திராவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது:
'தீப்பிழம்பு போன்ற கண்களும்
வெண்கலம் போன்ற காலடிகளும் கொண்ட இறைமகன் கூறுவது இதுவே:
19 உன் செயல்களை நான் அறிவேன்.
உன் அன்பு, நம்பிக்கை, திருத்தொண்டு,
மனவுறுதி ஆகியவை எனக்குத் தெரியும்;
நீ இப்பொழுது செய்துவரும் செயல்கள்
முதலில் செய்தவற்றைவிட மிகுதியானவை என்பதும் தெரியும்.
20 ஆயினும் உன்னிடம் நான் காணும் குறை ஒன்று உண்டு.
இசபேல் என்னும் பெண்ணை நீ கண்டிக்காமல் விட்டு வைத்திருக்கிறாய்.
தான் ஒரு இறைவாக்கினள் எனக் கூறிக்கொள்ளும் அவள்
என் பணியாளர்களை நெறி பிறழச் செய்து
அவர்கள் பரத்தைமையில் ஈடுபடவும்
சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்ணவும் போதித்து வருகிறாள். [5]
21 அவள் மனம் மாற வாய்ப்புக் கொடுத்தேன்.
அவளோ தன் பரத்தைமையை விட்டு மனம்மாற விரும்பவில்லை.
22 இதோ, அவளைப் படுத்த படுக்கையாக்குவேன்.
அவளோடு விபசாரம் செய்வோர் அவள் தீச்செயல்களை விட்டுவிட்டு
மனம் மாறாவிட்டால், அவர்களையும் கொடிய வேதனைக்கு உள்ளாக்குவேன்.
23 அவளுடைய பிள்ளைகளைக் கொன்றொழிப்பேன்.
அப்பொழுது உள்ளங்களையும் இதயங்களையும் துருவி ஆய்கிறவர் நானே
என்பதை எல்லாத் திருச்சபைகளும் அறிந்துகொள்ளும்.
உங்களுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பேன். [6]


24 தியத்திராவில் இருக்கும் ஏனையோரே,
நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை.
'சாத்தானின் ஆழ்ந்த ஞானம்' எனச் சொல்லப்படுவதை
நீங்கள் அறிய விரும்பவில்லை.
எனவே நான் உங்களுக்குச் சொல்வது:
உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன்.
25 நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில்
நான் வரும்வரை பிடிப்புள்ளவர்களாய் இருங்கள்.
26 என் தந்தையிடமிருந்து நான் அதிகாரம் பெற்றிருப்பதுபோல,
வெற்றி பெறுவோருக்கும் என் செயல்களை இறுதிவரை செய்வோருக்கும்,


27 "வேற்றினத்தார் மீது அதிகாரம் அளிப்பேன்.


அவர்கள் வேற்றினத்தாரை இருப்புக்கோலால் நடத்துவார்கள்;


28 குயவர்கலத்தைப் போல நொறுக்குவார்கள்." [7]


விடிவெள்ளியையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.


29 கேட்கச் செவி உடையோர்
திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.'


குறிப்புகள்

[1] 2:7 = தொநூ 2:9; நீமொ 3:18; திவெ 22:2.
[2] 2:8 = எசா 44:6; 48:12; திவெ 1:17; 22:13.
[3] 2:11 = திவெ 20:14; 21:8.
[4] 2:14 = எண் 22:5,7; 25:1-3; 31:16; இச 23:4.
[5] 2:20 = 1 அர 16:31; 2 அர 9:22,30.
[6] 2:23 = திபா 7:9; எரே 17:10; திபா 62:12.
[7] 2:26,27 = திபா 2:8,9.


(தொடர்ச்சி): யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை