திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"விண்ணகத்தில் அரியணை ஒன்று இருந்தது. அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவரது தோற்றம் படிகக்கல்போலும் மாணிக்கம்போலும் இருந்தது. மரகதம்போன்ற வானவில் அந்த அரியணையைச் சூழ்ந்திருந்தது. அரியணையைச்சுற்றி இருபத்து நான்கு அரியணைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருபத்து நான்கு மூப்பர்கள் வீற்றிருந்தார்கள். அவர்கள் வெண்ணாடை அணிந்திருந்தார்கள்; தலையில் பொன்முடி சூடியிருந்தார்கள்." (திருவெளிப்பாடு 4:2-4)


திருவெளிப்பாடு (Revelation)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

சர்தைக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்[தொகு]


1 "சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது:
'கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே:
உன் செயல்களை நான் அறிவேன்.
நீ பெயரளவில்தான் உயிரோடிருக்கிறாய்; உண்மையில் இறந்துவிட்டாய்.
2 எனவே விழிப்பாயிரு. உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து.
அது இறக்கும் தறுவாயில் உள்ளது.
என் கடவுள் திருமுன் உன் செயல்கள் நிறைவற்றவையாய் இருக்கக் கண்டேன்.
3 நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்;
அவற்றைக் கடைப்பிடி; மனம் மாறு; நீ விழிப்பாயிரு.
இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன்.
நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய். [1]
4 ஆயினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர் சர்தையில் உள்ளனர்.
அவர்கள் வெண்ணாடை அணிந்து என்னுடன் நடந்து வருவார்கள்.
அவர்கள் அதற்குத் தகுதி பெற்றவர்களே.
5 வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர்.
வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன்.
மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும்
அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன். [2]
6 கேட்கச் செவி உடையோர்
திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.'

பிலதெல்பியாவுக்கு விடுக்கப்பெற்ற மடல்[தொகு]


7 "பிலதெல்பியாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது:


'தூயவரும் உண்மையுள்ளவரும்


தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும்
எவரும் பூட்ட முடியாதவாறு திறந்து விடுபவரும்


எவரும் திறக்க முடியாதவாறு பூட்டிவிடுபவரும்'


கூறுவது இதுவே: [3]


8 உன் செயல்களை நான் அறிவேன்.
இதோ, எவராலும் பூட்ட முடியாத கதவை
நான் உனக்குமுன் திறந்து வைத்திருக்கிறேன்.
சிறிதளவு வலிமைதான் உன்னிடம் இருக்கிறது.
இருப்பினும், நீ என் வாக்கைக் கடைப்பிடித்தாய்;
என் பெயரை மறுதலிக்கவில்லை.
9 சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்,
தாங்கள் யூதர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள்.
அவர்கள் யூதர்களே அல்ல, பொய்யர்கள்.
அவர்கள் உன்னிடம் வந்து, உன் காலடியில் விழுந்து பணியச் செய்வேன்;
நான் உன்மீது அன்பு செலுத்திவருகிறேன் என்பதையும் அறியச்செய்வேன். [4]
10 மனவுறுதி தரும் என் வாக்கை நீ கடைப்பிடித்ததால்,
மண்ணுலகில் வாழ்வோரைச் சோதிக்க
உலகு அனைத்தின்மீதும் வரவிருக்கும் சோதனைக் காலத்தில்
நான் உன்னைக் காப்பாற்றுவேன்.


11 இதோ, விரைவில் வருகிறேன்.
உனக்குரிய மணிமுடியை வேறு யாரும் பறித்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள்.
நீ பெற்றுக்கொண்டதை உறுதியாகப் பற்றிக்கொள்.
12 வெற்றி பெறுவோரை என் கடவுளின் கோவிலில் தூணாக நாட்டுவேன்.
அவர்கள் அதை விட்டு ஒருபொழுதும் நீங்கமாட்டார்கள்.
என் கடவுளின் பெயரையும் என் கடவுளுடைய நகரின் பெயரையும்,
அதாவது என் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருகின்ற
புதிய பெயரையும் அவர்கள்மீது பொறிப்பேன். [5]
13 கேட்கச் செவி உடையோர்
திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.'

இலவோதிக்கேயாவுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்[தொகு]


14 "இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது:
'ஆமென் எனப்படுபவரும்
நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும்
கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே: [6]
15 உன் செயல்களை நான் அறிவேன்.
நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை.
குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்.
16 இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல்
வெதுவெதுப்பாய் இருப்பதால்
என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.
17 "எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு,
ஒரு குறையும் இல்லை" என நீ சொல்லிக்கொள்ளுகிறாய்.
ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க,
வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய்
என்பது உனக்குத் தெரியவில்லை.
18 ஆகவே, நீ செல்வம் பெறும்பொருட்டு புடம்போட்ட பொன்னையும்,
ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி
அணிந்துகொள்ள வெண்ணாடையையும்,
நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தையும்
என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு உனக்கு அறிவுரை வழங்குகிறேன்.
19 நான் யார் மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன்.
ஆகவே நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு. [7]
20 இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்.
யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால்,
நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்;
அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.
21 நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல,
வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.
22 கேட்கச் செவி உடையோர்,
திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.'


குறிப்புகள்

[1] 3:3 = மத் 24:43,44; லூக் 12:39,40; திவெ 16:15.
[2] 3:5 = விப 32:32,33; திபா 69:28; திவெ 20:12; மத் 10:32; லூக் 12:8.
[3] 3:7 = எசா 22:22; யோபு 12:14.
[4] 3:9 = எசா 49:23; 60:14; எசா 43:4.
[5] 3:12 = எசா 62:2; 65:15.
[6] 3:14 = நீமொ 8:22.
[7] 3:19 = நீமொ 3:12; எபி 12:6


அதிகாரம் 4[தொகு]

3. ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு[தொகு]

விண்ணக வழிபாடு[தொகு]


1 இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன்;
விண்ணகத்தில் ஒரு கதவு திறந்திருந்தது.
நான் முதலில் கேட்ட அதே குரல் எக்காளம்போல முழங்கியது:
"இவ்விடத்துக்கு ஏறி வா. இனி நடக்கவேண்டியதை உனக்குக் காட்டுவேன்" என்றது.
2 உடனே தூய ஆவி என்னை ஆட்கொண்டது.
விண்ணகத்தில் அரியணை ஒன்று இருந்தது.
அதில் ஒருவர் வீற்றிருந்தார்.
3 அவரது தோற்றம் படிகக்கல்போலும் மாணிக்கம்போலும் இருந்தது.
மரகதம்போன்ற வானவில் அந்த அரியணையைச் சூழ்ந்திருந்தது. [1]
4 அரியணையைச்சுற்றி இருபத்து நான்கு அரியணைகள் போடப்பட்டிருந்தன.
அவற்றில் இருபத்து நான்கு மூப்பர்கள் வீற்றிருந்தார்கள்.
அவர்கள் வெண்ணாடை அணிந்திருந்தார்கள்;
தலையில் பொன்முடி சூடியிருந்தார்கள்.
5 அரியணையிலிருந்து மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் கிளம்பின.
அரியணைமுன் ஏழு தீவட்டிகள் எரிந்துகொண்டிருந்தன.
அவை கடவுளின் ஏழு ஆவிகளே. [2]
6அ அரியணை முன் பளிங்கையொத்த தெளிந்த கடல் போன்ற ஒன்று தென்பட்டது.


6ஆ நடுவில் அரியணையைச் சுற்றிலும் நான்கு உயிர்கள் காணப்பட்டன.
முன்புறமும் பின்புறமும் அவற்றுக்குக் கண்கள் இருந்தன. [3]
7 அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம்போலும்,
இரண்டாவது இளங்காளை போலும் தோன்றின.
மூன்றாவதற்கு மனித முகம் இருந்தது,
நான்காவது பறக்கும் கழுகை ஒத்திருந்தது.
8 இந்த நான்கு உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன;
உள்ளும் புறமும் கண்கள் நிறைந்திருந்தன.


"தூயவர், தூயவர், தூயவர்,


எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்;
இருந்தவரும் இருக்கின்றவரும்


வரவிருக்கின்றவரும் இவரே"


என்று அந்த உயிர்கள் அல்லும் பகலும்
இடையறாது பாடிக்கொண்டிருந்தன. [4]
9 அரியணையில் வீற்றிருப்பவரை,
என்றென்றும் வாழ்பவரை அவை போற்றிப் புகழ்ந்து
அவருக்கு நன்றி செலுத்தியபோதெல்லாம்,
10 இருபத்து நான்கு மூப்பர்கள்
அரியணையில் வீற்றிருந்தவர் முன் விழுந்து,
என்றென்றும் வாழ்கின்ற அவரை வணங்கினார்கள்.
தங்கள் பொன்முடிகளை அரியணைமுன் வைத்து,


11 "எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே,


மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்;
ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே.
உமது திருவுளப்படியே அவை உண்டாயின,


படைக்கப்பட்டன"


என்று பாடினார்கள்.


குறிப்புகள்

[1] 4:2 = 3 எசே 1:26-28; 10:1.
[2] 4:5 = விப 19:16; திவெ 1:4; 8:5; 11:19; 16:18.
[3] 4:6 = எசே 1:22.
[4] 4:8 = எசே 1:18; 10:12; எசா 6:3.


(தொடர்ச்சி): யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை