திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவான் (அருளப்பர்) நற்செய்தி/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. 'கல்லை அகற்றி விடுங்கள்' என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், 'ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!' என்றார். இயேசு அவரிடம், 'நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?' என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, 'தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்' என்று கூறினார். இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், 'இலாசரே, வெளியே வா' என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. 'கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்' என்று இயேசு அவர்களிடம் கூறினார்." - யோவான் 11:38-44


யோவான் நற்செய்தி (John)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

இலாசர் இறத்தல்[தொகு]


1 பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார்.
அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்.
2 இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித்
தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர்.
நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். [1]
3 இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி,
"ஆண்டவரே, உன் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று தெரிவித்தார்கள்.
4 அவர் இதைக் கேட்டு, "இந்நோய் சாவில் போய் முடியாது.
கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான்.
இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்" என்றார்.
5 மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும்
இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.
6 இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு,
தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.


7 பின்னர் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார்.
8 அவருடைய சீடர்கள் அவரிடம்,
"ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்;
மீண்டும் அங்குப் போகிறீரா?" என்று கேட்டார்கள்.
9 இயேசு மறுமொழியாக, "பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா?
பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. [2]
10 ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை" என்றார்.
11 இவ்வாறு கூறியபின், "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்;
நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" என்றார்.
12 அவருடைய சீடர் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்" என்றனர்.
13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார்.
வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். [3]
14 அப்போது இயேசு அவர்களிடம்,
"இலாசர் இறந்து விட்டான்" என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,
15 "நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்;
ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது.
அவனிடம் போவோம், வாருங்கள்" என்றார்.
16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம்,
"நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார்.

நம்புவோர் வாழ்வர்[தொகு]


17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து
ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.
18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில்
ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் [4] தொலையில் இருந்தது.
19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு
ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.
20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும்
மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
21 மார்த்தா இயேசுவை நோக்கி,
"ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.
22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம்
அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
23 இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார்.
24 மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது
அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார்.
25 இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.
இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். '
27 மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்!
நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.

இயேசு கண்ணீர் விடுதல்[தொகு]


28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்;
அவரிடம், "போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய்ச் சொன்னார்.
29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.
30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை.
மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.
31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள்
அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு,
அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.
32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து,
அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து,
"ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றார்.
33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது
இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,
34 "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள்.
35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.
36 அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!"
என்று பேசிக் கொண்டார்கள்.
37 ஆனால் அவர்களுள் சிலர்,
"பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர்
இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?" என்று கேட்டனர்.

இலாசர் உயிர்பெறுதல்[தொகு]


38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார்.
அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.
39 "கல்லை அகற்றி விடுங்கள்" என்றார் இயேசு.
இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம்,
"ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!" என்றார்.
40 இயேசு அவரிடம்,
"நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என
நான் உன்னிடம் கூறவில்லையா?" என்று கேட்டார்.
41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள்.
இயேசு அண்ணாந்து பார்த்து,
"தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும்.
எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று
சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்" என்று கூறினார்.
43 இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில்,
"இலாசரே, வெளியே வா" என்று கூப்பிட்டார்.
44 இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார்.
அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன.
"கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம்[தொகு]

(மத் 26:1-5; மாற் 14:1,2; லூக் 22:1,2)


45 மரியாவிடம் வந்திருந்த யூதர் இயேசு செய்வதைக் கண்டு அவரை நம்பினர்.
46 ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்வதைத் தெரிவித்தனர். [5]
47 தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி,
"இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்?
48 இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர்.
அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும்
நம் இனத்தையும் அழித்து விடுவார்களே!" என்று பேசிக் கொண்டனர்.
49 கயபா என்பவர் அவர்களுள் ஒருவர்.
அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார்.
அவர் அவர்களிடம், "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. [6]
50 இனம் முழுவதும் அழிந்து போவதைவிட
ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை
நீங்கள் உணரவில்லை" என்று சொன்னார்.
51 இதை அவர் தாமாகச் சொல்லவில்லை.
அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால்,
இயேசு தம் இனத்திற்காவும்,
52 தம் இனத்திற்காக மட்டுமின்றி,
சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன்
அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.
53 ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள். [7]
54 அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை.
அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்;
அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.

7. இறுதிப் பாஸ்கா விழா[தொகு]


55 யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.
விழாவுக்குமுன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப்
பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.
56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள்.
"அவர் திருவிழாவுக்கு வரவே மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று
கோவிலில் நின்றுகொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.
57 ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும்
இயேசுவைப் பிடிக்க எண்ணி
அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால்
தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.


குறிப்புகள்

[1] 11:1,2 = லூக் 19:38,39; யோவா 12:1-8.
[2] 11:9 = யோவா 8:12.
[3] 11:13 = மத் 9:24.
[4] 11:18 - பதினைந்து ஸ்தாதியம் என்பது கிரேக்க பாடம்.
[5] 11:46 = மத் 26:3,4; லூக் 22:2; திப 4:16.
[6] 11:49 = லூக் 3:2; யோவா 18:13.
[7] 11:53 = மத் 12:14.


அதிகாரம் 12[தொகு]

நறுமணத் தைலம் பூசுதல்[தொகு]

(மத் 26:6-13; மாற் 14:3-9)


1 பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு
இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார்.
அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார்.
2 அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.
மார்த்தா உணவு பரிமாறினார்.
இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார்.
3 மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம்
ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் [1] கொண்டுவந்து
இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார்.
தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது. [2]
4 இயேசுவின் சீடருள் ஒருவனும்
அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து,
5 "இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று,
அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டான்.


6 ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல
மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான்.
பணப்பை அவனிடம் இருந்தது.
அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.
7 அப்போது இயேசு,
"மரியாவைத் தடுக்காதீர்கள்.
என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.
8 ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள்.
ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" என்றார். [3]

இலாசரைக் கொலை செய்யத் திட்டம்[தொகு]


9 இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள்.
அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல,
அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள்.
10 ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள்.
11 ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி
இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்[தொகு]

(மத் 21:1-11; மாற் 11:1-11; லூக் 19:28-40)


12 மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள்
இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று,
13 குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய்,


"ஓசன்னா! [4] ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!
இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!"

என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். [5]


14-15 இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார்.


"மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்;
கழுதைக் குட்டியின்மேல், ஏறி வருகிறார்"

என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார். [6]
16 அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை.
அவரைப்பற்றி மறைநூலில் எழுதப்பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது
இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.


17 இறந்து கல்லறையில் வைக்கப்பட்டிருந்த இலாசாரை
இயேசு கூப்பிட்டு உயிர்த்தெழச் செய்தபோது
அவரோடு இருந்த மக்கள் நடந்ததைக் குறித்துச் சான்று பகர்ந்தனர்.
18 இயேசு இந்த அரும் அடையாளத்தைச் செய்தார் என்று கேள்வியுற்றதால்
மக்கள் திரளாய் அவரை எதிர்கொண்டு சென்றார்கள்.
19 இதைக் கண்ட பரிசேயர்,
"பார்த்தீர்களா! நம் திட்டம் எதுவும் பயனளிக்கவில்லை.
உலகமே அவன் பின்னே போய்விட்டது" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.[7]

கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல்[தொகு]


20 வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.
21 இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து,
"ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
22 பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்;
அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.


23 இயேசு அவர்களைப் பார்த்து,
"மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்.
அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [8]
25 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர்.
இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர்
நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். [9]
26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்.
நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்.
எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்" என்றார்.

மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும்[தொகு]


27 மேலும் இயேசு, "இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது.
நான் என்ன சொல்வேன்?
'தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்' என்பேனோ?
இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். [10]
28 தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்" என்றார்.
அப்போது வானிலிருந்து ஒரு குரல்,
"மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" என்று ஒலித்தது.
29 அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு,
"அது இடிமுழக்கம்" என்றனர்.
வேறு சிலர், "அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு" என்றனர்.
30 இயேசு அவர்களைப் பார்த்து, "இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.
31 இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது;
இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். [11]
32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது
அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்" என்றார்.
33 தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.


34 மக்கள் கூட்டத்தினர் அவரைப் பார்த்து,
"மெசியா என்றும் நிலைத்திருப்பார் எனத்
திருச்சட்ட நூலில் கூறியுள்ளதை நாங்கள் கேட்டிருக்கிறோம்.
அப்படியிருக்க, மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் என
நீர் எப்படிச் சொல்லலாம்?
யார் இந்த மானிடமகன்?" என்று கேட்டனர். [12]
35 இயேசு அவர்களிடம்,
"இன்னும் சிறிது காலமே ஒளி உங்களோடு இருக்கும்.
இருள் உங்கள்மேல் வெற்றி கொள்ளாதவாறு
ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்து செல்லுங்கள்.
இருளில் நடப்பவர் எங்கே செல்கிறார் என்பது அவருக்குத் தெரியாது.
36 ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள்" என்றார்.
இப்படிச் சொன்னபின் இயேசு அவர்களிடமிருந்து மறைவாகப் போய்விட்டார்.


37 அவர்கள் முன் இயேசு இத்தனை அரும் அடையாளங்களைச் செய்திருந்தும்
அவர்கள் அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.


38 "ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?
ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?"


என்ற இறைவாக்கினர் எசாயாவின் கூற்று இவ்வாறு நிறைவேறியது. [13]


39-40 "அவர்கள் கண்ணால் காணாமலும்,


உள்ளத்தால் உணராமலும்,
மனம்மாறிக் குணமாகமலும் இருக்கும்படி
அவர்களுடைய கண்ணை மூடச் செய்தார்.


உள்ளத்தை மழுங்கச் செய்தார்"


என்பது அவர்களால் நம்பமுடியாத காரணத்தை விளக்கும் எசாயாவின் இன்னொரு கூற்று. [14]


41 எசாயா மெசியாவின் மாட்சியைக் கண்டதால்தான்
அவரைப்பற்றி இவ்வாறு கூறினார்.


42 எனினும் தலைவர்களில்கூடப் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
ஆனால் பரிசேயருக்கு அஞ்சி அவர்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.
அப்படி ஒப்புகொண்டால் அவர்கள் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்.
43 அவர்கள் கடவுள் அளிக்கும் பெருமையைவிட மனிதர் அளிக்கும் பெருமையையே விரும்பினார்கள்.

தீர்ப்பு அளிப்பது இயேசுவின் வார்த்தை[தொகு]


44 இயேசு உரத்த குரலில் கூறியது:
"என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல,
என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்.
45 என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.
46 என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.
47 நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத்
தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல.
ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.
48 என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு;
என் வார்த்தையே அது.
இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும்.
49 ஏனெனில் நானாக எதையும் பேசவில்லை;
என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும்,
என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். [15]
50 அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும்.
எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்.


குறிப்புகள்

[1] 12:3 - ஒரு லித்ரா என்பது கிரேக்க பாடம்.
[2] 12:3 = லூக் 7:37,38.
[3] 12:8 = இச 15:11.
[4] 12:13 - "ஓசன்னா" என்னும் எபிரேயச் சொல்லுக்கு "விடுவித்தருளும்" என்பது பொருள்.
ஆனால் எபிரேய வழக்கில் வாழ்த்தைத் தெரிவிக்கும் சொல்லாகவும் அது அமைகிறது.
[5] 12:13 = திபா 118:26; திவெ 7:9.
[6] 12:15 = செக் 9:9.
[7] 12:19 = யோவா 11:47,48.
[8] 12:24 = 1 கொரி 15:36.
[9] 12:25 = மத் 10:39; 16:25; மாற் 8:35; லூக் 9:24; 17:33.
[10] 12:27 = மத் 26:37; லூக் 22:40-46; யோவா 6:38; 11:33; 13:21; 18:4; எபி 5:7,8.
[11] 12:31 = லூக் 10:18; திவெ 12:9; 20:1-6.
[12] 12:34 = திபா 110:4; எசா 9:7; எசே 37:25; தானி 7:14.
[13] 12:38 = எசா 53:1.
[14] 12:40 = எசா 6:9,10.
[15] 12:49 = இச 18:18,19.


(தொடர்ச்சி): யோவான் (அருளப்பர்) நற்செய்தி: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை