திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவான் (அருளப்பர்) நற்செய்தி/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். 'ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, 'இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி' என்றார். இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, 'நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்' என்றார். சிலோவாம் என்பதற்கு "அனுப்பப்பட்டவர்" என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்." - யோவான் 9:1-7


யோவான் நற்செய்தி (John)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல்[தொகு]


1 இயேசு சென்றுகொண்டிருக்கும்போது
பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.
2 "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா?
இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.
3 அவர் மறுமொழியாக,
"இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல;
கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.
4 பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது.
இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது.
5 நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" என்றார். [1]
6 இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து,
உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி,
7 "நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்" என்றார்.
சிலோவாம் என்பதற்கு "அனுப்பப்பட்டவர்" என்பது பொருள்.
அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். [2]


8 அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும்,
"இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?" என்று பேசிக்கொண்டனர்.
9 சிலர், "அவரே" என்றனர்; வேறு சிலர் "அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்" என்றனர்.
ஆனால் பார்வை பெற்றவர், "நான்தான் அவன்" என்றார்.
10 அவர்கள், "உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?" என்று அவரிடம் கேட்டார்கள்.
11 அவர் அவர்களைப் பார்த்து,
"இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி,
'சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும்' என்றார்.
நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது" என்றார்.
12 "அவர் எங்கே?" என்று அவர்கள் கேட்டார்கள்.
பார்வை பெற்றவர், "எனக்குத் தெரியாது" என்றார்.

பரிசேயரின் கேள்விக் கணைகள்[தொகு]


13 முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள்.
14 இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள்.
15 எனவே, "எப்படிப் பார்வை பெற்றாய்?" என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர்.
16 பரிசேயருள் சிலர், "ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள்
கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது" என்று பேசிக் கொண்டனர்.
ஆனால் வேறு சிலர், "பாவியான ஒரு மனிதரால்
இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?" என்று கேட்டனர்.
இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
17 அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம்,
"உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?"
என்று மீண்டும் கேட்டனர்.
"அவர் ஓர் இறைவாக்கினர்" என்றார் பார்வை பெற்றவர்.


18 அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை
அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை.
19 "பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என
நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா?
இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?" என்று கேட்டார்கள்.
20 அவருடைய பெற்றோர் மறுமொழியாக,
"இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான்.
21 ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ
யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது.
அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே!
நடந்ததை அவனே சொல்லட்டும்" என்றனர்.
22 யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர்.
ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும்
தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று
யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள்.
23 அதனால் அவருடைய பெற்றோர்,
"அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.


24 பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம்,
"உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. [3]
இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்" என்றனர்.
25 பார்வை பெற்றவர் மறுமொழியாக,
"அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.
ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்:
நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்" என்றார்.
26 அவர்கள் அவரிடம், "அவன் உனக்கு என்ன செய்தான்?
எப்படிப் பார்வை அளித்தான்?" என்று கேட்டார்கள்.
27 அவர் மறுமொழியாக,
"ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன்.
அப்போது நீங்கள் கேட்கவில்லை.
இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்?
ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?" என்று கேட்டார்.
28 அவர்கள் அவரைப் பழித்து,
"நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள்.
29 மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்;
இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது" என்றார்கள்.
30 அதற்கு அவர் "இது வியப்பாய் இல்லையா?
எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்;
அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே!
31 பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை;
இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே
அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். [4]
32 பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே!
33 இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால்
இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது" என்றார்.
34 அவர்கள் அவரைப் பார்த்து,
"பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?"
என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.

பார்வையற்றோர் பரிசேயரே[தொகு]


35 யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்;
பின் அவரைக் கண்டபோது,
"மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" என்று கேட்டார்.
36 அவர் மறுமொழியாக, "ஐயா, அவர் யார்? சொல்லும்.
அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்" என்றார்.
37 இயேசு அவரிடம், "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்!
உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்" என்றார்.
38 அவர், "ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்" என்று கூறி அவரை வணங்கினார்.
39 அப்போது இயேசு, "தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்;
பார்வையற்றோர் பார்வை பெறவும்
பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்" என்றார்.
40 அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது,
"நாங்களுமா பார்வையற்றோர்?" என்று கேட்டனர்.
41 இயேசு அவர்களிடம்,
"நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது.
ஆனால் நீங்கள் 'எங்களுக்குக் கண் தெரிகிறது' என்கிறீர்கள்.
எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்" என்றார். [5]


குறிப்புகள்

[1] 9:5 = மத் 5:14; யோவா 8:12.
[2] 9:7 = 2 அர 5:10.
[3] 9:24 - "உண்மையை...மாட்சிப்படுத்து" என்னும் சொற்றொடர்
ஆணையிடும்போது பயன்படுத்தப்படும் ஒரு வாய்பாடு.
"உண்மையையே பேசுவேன் எனக் கடவுள் பெயரால் உறுதிமொழி கூறு"
அல்லது "கடவுள்முன் உண்மை பேசு" எனவும் இதை மொழிபெயர்க்கலாம்.
[4] 9:31 = நீமொ 15:29.
[5] 9:41 = மத் 23:16,17.


அதிகாரம் 10[தொகு]

ஆட்டுக் கொட்டில் பற்றிய உவமை[தொகு]


1 "நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்:
ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல்
வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.
2 வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்.
3 அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார்.
ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும்.
அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்.
4 தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின்
அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும்.
ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். [1]
5 அறியாத ஒருவரை அவை பின் தொடரா.
அவரை விட்டு அவை ஓடிப்போகும்.
ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது."
6 இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார்.
ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இயேசுவே நல்ல ஆயர்[தொகு]


7 மீண்டும் இயேசு கூறியது:
"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆடுகளுக்கு வாயில் நானே.
8 எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே.
அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை.
9 நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை.
அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். [2]
10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை.
ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு,
அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். [3]
11 நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். [4]


12 "கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார்.
ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல;
ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். [5]
13 கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.
14 நல்ல ஆயன் நானே.
தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன்.
15 அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்;
என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன.
அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். [6]
16 இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன.
நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும்.
அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும்.
அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். [7]
17 தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார்.
ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்;
அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.
18 என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை.
நானாகவே அதைக் கொடுக்கிறேன்.
உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு;
அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு.
என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்."


19 இவ்வாறு இயேசு சொன்னதால் யூதரிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது.
20 அவர்களுள் பலர், "அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது;
பித்துப்பிடித்து அலைகிறான்; ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?" என்று பேசிக் கொண்டனர்.
21 ஆனால் மற்றவர்கள், "பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்?
பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா?" என்று கேட்டார்கள்.

6. கோவில் அர்ப்பண விழா[தொகு]

யூதர்கள் இயேசுவை ஏற்க மறுத்தல்[தொகு]


22 எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது.
அப்போது குளிர்காலம்.
23 கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருந்தார்.
24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு,
"இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்?
நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்" என்று கேட்டார்கள்.
25 இயேசு மறுமொழியாக, "நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை.
என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன.
26 ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள்.
ஏனெனில் நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல. [8]
27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன.
எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.
28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்.
அவை என்றுமே அழியா.
அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.
29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர்.
அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. [9] [10]
30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார்.


31 அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.
32 இயேசு அவர்களைப் பார்த்து,
"தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன்.
அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார்.
33 யூதர்கள் மறுமொழியாக,
"நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம்.
ஏனெனில் மனிதானாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்" என்றார்கள். [11]
34 இயேசு அவர்களைப் பார்த்து,
"'நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்' என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? [12]
35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே
தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.
மறைநூல் வாக்கு என்றும் அழியாது. [13]
36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு
அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை 'இறை மகன்' என்று சொல்லிக் கொண்டதற்காக
'இறைவனைப் பழித்துரைக்கிறாய்' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?
37 நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால்
நீங்கள் என்னை நம்ப வேண்டாம்.
38 ஆனால் நான் அவற்றைச் செய்தால்,
என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்;
அதன்மூலம் தந்தை என்னுள்ளும்
நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்" என்றார். [14]
39 இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள்.
ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். [15]


40 யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு
இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். [16]
41 பலர் அவரிடம் வந்தனர்.
அவர்கள், "யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை;
ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று"
எனப் பேசிக்கொண்டனர்.
42 அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.


குறிப்புகள்

[1] 10:4 = விப 13:22.
[2] 10:9 = திபா 23:1-3.
[3] 10:10 = யோவா 10:28.
[4] 10:11 = எசே 34:1-32; எபி 13:20.
[5] 10:12 = எரே 23:1-3; செக் 11:17.
[6] 10:15 = மத் 11:27; லூக் 10:22.
[7] 10:16 = எசே 37:24; எபே 2:14,15; 4:4,5.
[8] 10:26 = 1 கொரி 2:14.
[9] 10:29 - "என் தந்தை எனக்களித்தது அனைத்திலும் பெரிது.
அதை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது"
எனவும் இவ்வசனத்தை மொழிபெயர்க்கலாம்.
[10] 10:29 = இச 32:39; எசா 43:13.
[11] 10:33 = லேவி 24:16.
[12] 10:34 = திபா 82:6.
[13] 10:35 = எபி 1:1.
[14] 10:38 = யோவா 14:11; 17:21.
[15] 10:39 = லூக் 4:30; யோவா 8:39.
[16] 10:40 = மத் 19:1; மாற் 10:1; யோவா 1:28.


(தொடர்ச்சி): யோவான் (அருளப்பர்) நற்செய்தி: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை