திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவான் (அருளப்பர்) நற்செய்தி/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, 'போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?' என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். இயேசு நிமிர்ந்து பார்த்து, 'அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?' என்று கேட்டார். அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம் 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்." - யோவான் 8:1-11


யோவான் நற்செய்தி (John)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

5. கூடார விழா[தொகு]

இயேசு திருவிழாவுக்குச் செல்லுதல்[தொகு]


1 இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார்.
யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால்
அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. [1]
3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி,
"நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும்.
அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.
4 ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபடும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை.
நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!" என்றனர்.
5 ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
6 இயேசு அவர்களிடம்,
"எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை;
உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான்.
7 உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது.
ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்.
8 நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள்; நான் வரவில்லை.
ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.
9 அவ்வாறு சொன்ன அவர் கலிலேயாவிலேயே தங்கிவிட்டார்.


10 தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார்.
ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.
11 திருவிழாவின்போது, "அவர் எங்கே?" என்று யூதர்கள் இயேசுவைத் தேடினார்கள்.
12 மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இயேசுவைப்பற்றிக்
காதோடு காதாய்ப் பலவாறு பேசிக் கொண்டனர்.
சிலர், "அவர் நல்லவர்" என்றனர்.
வேறு சிலர், "இல்லை, அவர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார்" என்றனர்.
13 ஆனால் யூதர்களுக்கு அஞ்சியதால் எவரும் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.


14 பாதித் திருவிழா நேரத்தில் இயேசு கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார்.
15 "படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?" என்று யூதர்கள் வியப்புற்றார்கள்.
16 இயேசு மறுமொழியாக, "நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல;
அது என்னை அனுப்பியவருடையது.
17 அவருடைய திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர்
இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா?
அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா என்பதை அறிந்து கொள்வர்.
18 தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார்.
தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்;
அவரிடத்தில் பொய்ம்மை இல்லை.


19 "மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார் அல்லவா?
எனினும் உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை.
இப்போது என்னையும் கொல்லப் பார்க்கிறீர்களே!" என்றார்.
20 மக்கள் மறுமொழியாக, "யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்?
உனக்குப் பேய் பிடித்திருக்கிறது" என்றனர்.
21 இயேசு அவர்களைப் பார்த்து,
"ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலைப் பற்றி
நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள்.
22 மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி,
நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! -
உண்மையில் விருத்தசேதனம் மோசேயிடமிருந்து வந்தது அல்ல;
அது நம் மூதாதையர் காலத்திலிருந்தே உள்ளது - [2]
23 ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும்
ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால்,
அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக
நீங்கள் சினம் கொள்வதேன்? [3]
24 வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள்.
நீதியோடு தீர்ப்பளியுங்கள்" என்றார். [4]

இயேசுதான் மெசியாவோ?[தொகு]


25 எருசலேம் நகரத்தவர் சிலர்,
"இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்?
26 இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே!
யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே!
ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ?
27 ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்!
இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே" என்று பேசிக் கொண்டனர். [5]
28 ஆகவே கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில்,
"நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும்.
ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர்.
அவரை உங்களுக்குத் தெரியாது.
29 எனக்கு அவரைத் தெரியும்.
நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே" என்றார்.
30 இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள்.
எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.
31 கூட்டத்திலிருந்த பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
அவர்கள், "மெசியா வரும்போது இவர் செய்வதைவிடவா
மிகுதியான அரும் அடையாளங்களைச் செய்யப் போகிறார்?" என்று பேசிக்கொண்டார்கள்.

இயேசுவைப் பிடிக்க ஆள் அனுப்புதல்[தொகு]


32 இயேசுவைப்பற்றி மக்கள் இவ்வாறெல்லாம்
காதோடு காதாய்ப் பேசுவதைப் பரிசேயர் கேள்விப்பட்டனர்.
எனவே அவர்களும் தலைமைக் குருக்களும்
அவரைப் பிடித்து வரும்படி காவலர்களை அனுப்பினார்கள்.
33 எனவே இயேசு,
"இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்;
பின்னர் என்னை அனுப்பியவரிடம் செல்வேன்.
34 நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால் காணமாட்டீர்கள்.
நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது" என்றார். [6]
35 இதை கேட்ட யூதர்கள்,
"நாம் காணமுடியாதவாறு இவர் எங்கே செல்ல போகிறார்?
ஒரு வேளை கிரேக்கரிடையே சிதறி வாழ்வோரிடம் சென்று
கிரேக்கருக்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரோ?
36 'நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால் காணமாட்டீர்கள்.
நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது' என்றாரே!
இதன் பொருள் என்ன?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

ஆவியாரே வாழ்வு தரும் தண்ணீர்[தொகு]


37 திருவிழாவின் இறுதியான பெருநாளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில்,
"யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்;
என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்.
38 மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து
வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார். [7]
39 தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும்
தூய ஆவியைக்குறித்தே அவர் இவ்வாறு சொன்னார்.
தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை.
ஏனெனில் இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை.

இயேசுவை முன்னிட்டு மக்களிடையே பிளவு ஏற்படுதல்[தொகு]


40 கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு,
"வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றனர்.
41 வேறு சிலர், "மெசியா இவரே" என்றனர்.
மற்றும் சிலர், "கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?
42 தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும்
மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?" என்றனர். [8]
43 இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.
44 சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.

தலைவர்கள் நம்பாமை[தொகு]


45 தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள்
அவர்களிடம் திரும்பி வந்தார்கள்.
அவர்கள் காவலர்களிடம், "ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?" என்று கேட்டார்கள்.
46 காவலர் மறுமொழியாக, "அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை" என்றனர்.
47 பரிசேயர் அவர்களைப் பார்த்து, "நீங்களும் ஏமாந்து போனீர்களோ?
48 தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?
49 இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்" என்றனர்.
50 அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம்.
அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், [9]
51 "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது,
அவர் என்ன செய்தாரென்று அறியாது
ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டார். [10]
52 அவர்கள் மறுமொழியாக, "நீரும் கலிலேயரா என்ன?
மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும்.
அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை
என்பதை அறிந்துகொள்வீர்" என்றார்கள்.


53 [11] [அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.


குறிப்புகள்

[1] 7:2 = லேவி 23:24; இச 16:13.
[2] 7:22 = லேவி 12:3; தொநூ 17:10; திப 7:8.
[3] 7:23 = மத் 12:1-5,11,12; லூக் 14:5.
[4] 7:24 = செக் 7:9.
[5] 7:27 = எபி 7:3.
[6] 7:34 = இச 4:29; நீமொ 1:28; எசா 55:6; ஓசே 5:6.
[7] 7:38 = நீமொ 18:4; எசா 55:1,3.
[8] 7:42 = மீக் 5:2.
[9] 7:50 = யோவா 3:1; 19:39.
[10] 7:51 = இச 17:4.
[11] 7:53-8:11 - அடைப்புக்குறிக்குள் உள்ள இவ்வசனங்கள்
பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.

அதிகாரம் 8[தொகு]

விபசாரத்தில் பிடிபட்ட பெண்[தொகு]


1 இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.
2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்.
அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர்.
அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும்
விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,
4 "போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.
5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது
மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை.
நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர். [1]
6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக
அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.
இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.
7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால்,
அவர் நிமிர்ந்து பார்த்து,
"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்"
என்று அவர்களிடம் கூறினார்.
8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.


9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி
ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.
இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார்.
அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
10 இயேசு நிமிர்ந்து பார்த்து,
"அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?"
என்று கேட்டார்.
11 அவர், "இல்லை, ஐயா" என்றார்.
இயேசு அவரிடம் "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை.
நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.][2]


12 மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து,
"உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்;
வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார். [3]
13 பரிசேயர் அவரிடம், "உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்;
உம் சான்று செல்லாது" என்றனர்.
14 அதற்கு இயேசு,
"என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும்.
ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன்,
எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.
நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது.
15 நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள்.
நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை.
16 ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும்.
ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை;
என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார். [4]
17 இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா? [5]
18 என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்;
என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்" என்றார்.
19 அப்போது அவர்கள், "உம் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, "உங்களுக்கு என்னையும் தெரியாது;
என் தந்தையையும் தெரியாது.
என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்" என்றார்.


20 கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது
இவ்வாறு சொன்னார்.
அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.
21 இயேசு மீண்டும் அவர்களிடம்,
"நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள்.
நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது.
நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்றார்.
22 யூதர்கள், "'நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே,
ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?" என்று பேசிக்கொண்டார்கள்.


23 இயேசு அவர்களிடம்,
"நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன்.
நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல.
24 ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன்.
'இருக்கிறவர் நானே' என்பதை நீங்கள் நம்பாவிடில்
நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்" என்றார்.
25 அவர்கள், "நீர் யார்?" என்று அவரிடம் கேட்டார்கள்.
அவர், "நான் யாரென்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன். [6]
26 உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு.
ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர்.
நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்" என்றார்.
27 தந்தையைப்பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
28 இயேசு அவர்களிடம்,
"நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, 'இருக்கிறவர் நானே';
நானாக எதையும் செய்வதில்லை;
மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
29 என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார்.
அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை.
நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்" என்றார். [7]
30 அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

யூதரும் ஆபிரகாமும்[தொகு]


31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி,
"என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்
உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;
32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள்.
உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்றார். [8]


33 யூதர்கள் அவரைப் பார்த்து, "'உங்களுக்கு விடுதலை கிடைக்கும' என
நீர் எப்படிச் சொல்லலாம்?
நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை.
நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!" என்றார்கள்.
34 அதற்கு இயேசு, "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [9]
35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை;
மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.
36 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால்
நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.[10]
37 நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால்
நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள்.
38 நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன்.
நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்" என்றார்.
39 அவர்கள் அவரைப் பார்த்து,
"ஆபிரகாமே எங்கள் தந்தை" என்றார்கள்.
இயேசு அவர்களிடம், "நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள்.
40 ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை
நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள்.
ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே!
41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள்" என்றார்.

யூதரும் சாத்தானும்[தொகு]


அவர்கள், "நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல;
எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்" என்றார்கள்.
42 இயேசு அவர்களிடம் கூறியது:
"கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள்.
நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன்.
நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.
43 நான் சொல்வதற்குச் செவி சாய்க்க உங்களால் இயலவில்லை.
எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை.
44 சாத்தானே உங்களுக்குத் தந்தை.
உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம்.
தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி.
அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை.
அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது.
ஏனெனில் அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம். [11]
45 நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை.
46 என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா?
நான் உங்களிடம் உண்மையைக் கூறியும் நீங்கள் ஏன் என்னை நம்புவதில்லை? [12]
47 கடவுளைச் சார்ந்தவர் கடவுளிள் சொல்லுக்குச் செவிசாய்க்கிறார்;
நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள் அல்ல.
ஆதலால் அவர் சொல்லுக்குச் செவி சாய்ப்பதில்லை."

இயேசுவும் ஆபிரகாமும்[தொகு]


48 யூதர்கள் இயேசுவைப் பார்த்து,
"நீ சமாரியன், பேய் பிடித்தவன் என நாங்கள் சொல்வது சரிதானே?" என்றார்கள்.
49 அதற்கு இயேசு, "நான் பேய் பிடித்தவன் அல்ல; என் தந்தைக்கு மதிப்பளிப்பவன்.
ஆனால் நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள்.
50 நான் எனக்குப் பெருமை தேடுவதில்லை.
அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார். அவரே தீர்ப்பளிப்பவர்.
51 என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
52 யூதர்கள் அவரிடம்,
"நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது.
ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள்.
ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே!
53 எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ?
ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர்.
நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்றார்கள்.
54 இயேசு மறுமொழியாக,
"நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை.
என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே.
அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள்.
55 ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும்.
எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன்.
அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன்.
56 உங்கள் தந்தை ஆபிரகாம்
நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்;
அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்" என்றார்.


57 யூதர்கள் அவரை நோக்கி,
"உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை;
நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள்
58 இயேசு அவர்களிடம்,
"ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
59 இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள்.
ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.


குறிப்புகள்

[1] 8:5 = லேவி 20:10; இச 22:22-24.
[2] 7:53-8:11 - அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனங்கள்
பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
[3] 8:12 = எசா 42:6; மத் 5:14; யோவா 9:5.
[4] 8:16 = யோவா 5:30.
[5] 8:17 = இச 17:6; 19:15.
[6] 8:25 - "நான் சொல்லி வந்துள்ளேன்" என்னும் சொற்றொடரை
"நான் உங்களிடம் ஏன் பேச வேண்டும்?" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[7] 8:29 = 1 யோவா 3:22.
[8] 8:32 = எசா 42:7.
[9] 8:34 = யோவா 8:17-19; 2 பேது 2:19.
[10] 8:36 = கலா 5:1.
[11] 8:44 = 1 யோவா 3:8.
[12] 8:46 = 1 பேது 2:22; 1 யோவா 3:5.


(தொடர்ச்சி): யோவான் (அருளப்பர்) நற்செய்தி: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை