திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவான் (அருளப்பர்) நற்செய்தி/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள்." - யோவான் 6:10-14


யோவான் நற்செய்தி (John)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

3. யூதர்களின் திருவிழா[தொகு]

உடல் நலமற்றவர் நலமடைதல்[தொகு]


1 யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார்.
2 எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு.
எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்.
3 இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர்,
கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப் படுத்துக்கிடப்பர்.
[இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள்.
4 ஏனெனில் ஆண்டவரின் தூதர் சில வேளைகளில்
அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார்.
தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.] [1]


5 முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.
6 இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து,
"நலம்பெற விரும்புகிறீரா?" என்று அவரிடம் கேட்டார்.
7 "ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை.
நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்று
உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார்.
8 இயேசு அவரிடம்,
"எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" என்றார்.
9 உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.

ஓய்வுநாள் பற்றிய உரையாடல்[தொகு]


10 அன்று ஓய்வு நாள்.
யூதர்கள் குணமடைந்தவரிடம்,
"ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது
சட்டத்திற்கு எதிரான செயல்" என்றார்கள். [2]
11 அவர் மறுமொழியாக "என்னை நலமாக்கியவரே,
'உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்'
என்று என்னிடம் கூறினார்" என்றார்.
12 "'படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்' என்று உம்மிடம் கூறியவர் யார்?"
என்று அவர்கள் கேட்டார்கள்.
13 ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை.
ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால்
இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.
14 பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு,
"இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்;
இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.
15 அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.
16 ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.
17 இயேசு அவர்களிடம்,
"என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.
18 இவ்வாறு அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல்,
கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால்
யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள். [3]

தந்தை, மகன் ஒற்றுமை[தொகு]


19 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது:
"மகன் தாமாக எதையும் செய்ய இயலாது;
தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும்.
தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
20 தந்தை மகன் மேல் அன்புகொண்டு
தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்;
இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார்.
நீங்களும் வியப்புறுவீர்கள்.
21 தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல
மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.
22 தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை.
தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல
மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத்
தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். [4]
23 மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.
24 என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர்
நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்;
ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [5]
25 காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது.
அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்;
அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
26 தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல
மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.
27 அவர் மானிடமகனாய் இருப்பதால்,
தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார். [6]
28 இது பற்றி நீங்கள் வியப்புற வேண்டாம்.
காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு
29 வெளியே வருவர்.
நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்;
தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர். [7]
30 நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன்.
நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது.
ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

இயேசுவுக்கான சான்றுகள்[தொகு]


31 "என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது.
32 என்னைப்பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார்.
என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும்.
33 யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். [8]
34 மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல;
நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன்.
35 யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு.
நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.


36 "யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு.
நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று.
நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.
37 "என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார்.
நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை;
அவரது உருவைக் கண்டதுமில்லை. [9]
38 அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை;
ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை.
39 மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி
அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே!
அம் மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது.
40 வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.

நம்பாதோர்மேல் குற்றச்சாட்டு[தொகு]


41 "மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. [10]
42 உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. [11]
43 நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன்.
ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
44 கடவுள் ஒருவரே.
அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே!
உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்? [12]
45 தந்தையின் முன்னிலையில் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள்.
உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள் மேல் குற்றம் சுமத்துவார். [13]
46 நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள்.
ஏனெனில் அவர் என்னைப்பற்றித்தான் எழுதினார். [14]
47 அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால்
நான் சொல்லுபவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?


குறிப்புகள்

[1] 5:3-4 - அடைப்புக் குறியிலுள்ள இவ்வசனங்கள்
பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
[2] 5:10 = நெகே 13:9; எரே 17:21,22.
[3] 5:18 = மத் 12:14.
[4] 5:22 = தானி 7:10; திப 10:42.
[5] 5:24 = 1 யோவா 2:17.
[6] 5:27 = தானி 7:17-22; மத் 9:6; 2 கொரி 5:10.
[7] 5:29 = தானி 12:2.
[8] 5:33 = யோவா 1:19-27; 3:27-30.
[9] 5:37 = மத் 3:17; மாற் 1:11; லூக் 2:22.
[10] 5:41 = 1 தெச 2:6.
[11] 5:42 = 1 யோவா 3:17.
[12] 5:44 = மத் 6:1; யோவா 12:41; உரோ 22:29; 1 தெச 2:6.
[13] 5:45 = இச 31:26.
[14] 5:46 = இச 18:15; லூக் 16:31.


அதிகாரம் 6[தொகு]

4. இரண்டாம் பாஸ்கா விழா[தொகு]

அப்பம் பகிர்ந்தளித்தல்[தொகு]

(மத் 14:13-21; மாற் 6:30-44; லூக் 9:10-17)


1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார்.
அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு.
2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த
அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.
3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார்.
4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.
5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு,
"இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார்.


6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.
7 பிலிப்பு மறுமொழியாக,
"இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும்
ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார்.


8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,
9 "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான்.
அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன.
ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார்.
10 இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார்.
அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது.
அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.
11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி
அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்.
அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார்.
அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.
12 அவர்கள் வயிறார உண்டபின்,
"ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்"
என்று தம் சீடரிடம் கூறினார்.
13 மக்கள் உண்டபின்
ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச்
சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.
14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள்,
"உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள்.
15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய்
அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு
மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

இயேசு கடலைக் கடந்து செல்லுதல்[தொகு]

(மத் 14:22-23; மாற் 6:45-52)


16 மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து,
17 படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள்.
ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை.
18 அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது.
19 அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் [1] தொலை படகு ஓட்டியபின்
இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.
20 இயேசு அவர்களிடம், "நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்.
21 அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக் கொள்ள விரும்பினார்கள்.
ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம்போய்ச் சேர்ந்துவிட்டது. [2]

உணவு வேண்டல்[தொகு]


22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள்.
முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும்
அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி
இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும்
அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.
23 அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக்
கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில்
திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன.
24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள்
கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.
25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு,
"ரபி, எப்போது இங்கு வந்தீர்?" என்ற கேட்டார்கள்.
26 இயேசு மறுமொழியாக,
"நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல,
மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்.
நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்.
ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார்.
28 அவர்கள் அவரை நோக்கி,
"எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு
நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.
29 இயேசு அவர்களைப் பார்த்து,
"கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்"" என்றார்.


30 அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில்
நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்?
அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?
31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே!


'அவர்கள் உண்பதற்கு
வானிலிருந்து உணவு அருளினார்'


என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!" என்றனர்.
32 இயேசு அவர்களிடம்,
"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்:
வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல;
வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.
33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து
உலகுக்கு வாழ்வு அளிக்கிறது" என்றார்.

வாழ்வு தரும் உணவு[தொகு]


34 அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்"
என்று கேட்டுக்கொண்டார்கள்.
35 இயேசு அவர்களிடம்,
"வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது;
என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. [3]
36 ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே
நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை.
37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர்.
என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.
38 ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல,
என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே
நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். [4]


39 "அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல்
இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும்.
இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.
40 மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்
நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.
நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார். [5]


41 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று இயேசு கூறியதால்
யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.
42 "இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா?
இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா?
அப்படியிருக்க, 'நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என
இவர் எப்படி சொல்லலாம்?" என்று பேசிக்கொண்டார்கள்.
43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது:
"உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.
44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது.
என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். [6]


45 'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்'


என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது.
தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். [7]
46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து
தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது.
கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். [8]
47 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்:
என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.
48 வாழ்வுதரும் உணவு நானே.
49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.
50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு
விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்[தொகு]


51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.
இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.
எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்.
அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்."
52 "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?"
என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
53 இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்:
மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய
நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.
54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்.
நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்,
நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். [9]
57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன்.
அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.
58 உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே.
இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல.
அதை உண்டவர்கள் இறந்து போனார்கள்.
இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்."

சீடர் முணுமுணுத்தல்[தொகு]


59 இயேசு கப்பர்நாகுமிலுள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார்.
60 அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு,
"இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்;
இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக் கொண்டனர்.
61 இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம்,
"நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?
62 அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால்
அது உங்களுக்கு எப்படி இருக்கும்?
63 வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது.
நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.
64 அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை" என்றார்.
நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும்
இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.
65 மேலும் அவர், "இதன் காரணமாகத்தான்
'என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று
உங்களுக்குக் கூறினேன்" என்றார்.

பேதுருவின் அறிக்கை[தொகு]


66 அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்.
அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.
67 இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார்.
68 சீமோன் பேதுரு மறுமொழியாக,
"ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?
நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
69 நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.
அதை நம்புகிறோம்" என்றார். [10]
70 இயேசு அவர்களைப் பார்த்து,
"பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்துகொண்டேன் அல்லவா?
ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்" என்றார். [11]
71 அவர் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசைப் பற்றியே இப்படிச் சொன்னார்.
ஏனெனில் பன்னிருவருள் ஒருவனாகிய அவன் அவரைக் காட்டிக் கொடுக்கவிருந்தான்.


குறிப்புகள்

[1] 6:19 - இருபத்தைந்து அல்லது முப்பது ஸ்தாதியம் என்பது கிரேக்க பாடம்.
[2] 6:21 = விப 16:14,15; திபா 78:24.
[3] 6:35 = நீமொ 9:1-6; எசா 55:1-3.
[4] 6:38 = மத் 26:39; எபி 10:7,10.
[5] 6:40 = 1 யோவா 2:25.
[6] 6:44 = மத் 16:17.
[7] 6:45 = எசா 54:13; எரே 31:33,34; 1 தெச 4:9; 1 யோவா 2:20-27.
[8] 6:46 = விப 33:20.
[9] 6:56 = யோவா 15:4,5.
[10] 6:68,69 = இச 8:3; மத் 16:16; மாற் 8:29; லூக் 9:20.
[11] 6:70 = யோவா 13:2-17.


(தொடர்ச்சி): யோவான் (அருளப்பர்) நற்செய்தி: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை