திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, 'ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என மன்றாடினார். இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, 'நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று." - லூக்கா 5:12-14


லூக்கா நற்செய்தி (Luke)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

முதல் சீடரை அழைத்தல்[தொகு]

(மத் 4:18-22; மாற் 1:16-20)


1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார்.
திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு
அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.
2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார்.
மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.
3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது.
அதில் இயேசு ஏறினார்.
அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு
படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார். [1]
4 அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி,
"ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய்,
மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார்.
5 சீமோன் மறுமொழியாக,
"ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும்
ஒன்றும் கிடைக்கவில்லை;
ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். [2]
6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள்.
வலைகள் கிழியத் தொடங்கவே, [3]
7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித்
துணைக்கு வருமாறு அழைத்தார்கள்.
அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள்.
அவை மூழ்கும் நிலையிலிருந்தன.
8 இதைக் கண்ட சீமோன் பேதுரு,
இயேசுவின் கால்களில் விழுந்து,
"ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார். [4]
9 அவரும் அவரோடு இருந்த அனைவரும்
மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.
10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள்
யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.
இயேசு சீமோனை நோக்கி,
"அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார். [5]
11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின்
அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

தொழுநோயாளரின் நோயை நீக்குதல்[தொகு]

(மத் 8:1-4; மாற் 1:40-45)


12 இயேசு ஓர் ஊரில் இருந்தபோது,
உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார்.
அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து,
"ஆண்டவரே, நீர் விரும்பினால்
எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என மன்றாடினார்.
13 இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு,
"நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!" என்றார்.
உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.
14 இயேசு அவரிடம்,
"இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.
நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி
நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.
நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று கட்டளையிட்டார். [6]
15 ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று.
அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும்
பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்து கொண்டிருந்தார்கள்.
16 அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று
தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.

முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்[தொகு]

(மத் 9:1-8; மாற் 2:1-12)


17 ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது,
கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும்
எருசலேமிலிருந்தும் வந்திருந்த
பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள்.
பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.
18 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக்
கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து,
அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர்.
19 மக்கள் திரண்டிருந்த காரணத்தால்
அவரை உள்ளே கொண்டுபோக அவர்களால் முடியவில்லை.
எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து
அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு
இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.
20 அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து,
"உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
21 இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும்,
"கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்?
கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?"
என்று எண்ணிக்கொண்டனர்.
22 அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து,
"உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன?
23 'உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன என்பதா,
அல்லது 'எழுந்து நடக்கவும்' என்பதா, எது எளிது?
24 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க
மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை
நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,
"நான் உமக்குச் சொல்கிறேன்:
நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு
உமது வீட்டுக்குப் போம்!" என்றார்.
25 உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து,
தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு,
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.
26 இதைக் கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய்க்
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
அவர்கள் அச்சம் நிறைந்தவராய்,
"இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!" என்று பேசிக் கொண்டார்கள்.

லேவியை அழைத்தல்[தொகு]

(மத் 9:9-13; மாற் 2:13-17)


27 அதன்பின் இயேசு வெளியே சென்று
சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த
லேவி என்னும் பெயருடைய வரி தண்டுபவர் ஒருவரைக் கண்டார்;
அவரிடம், "என்னைப் பின்பற்றி வா!" என்றார்.
28 அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து
இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
29 இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார்.
வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய்
அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.
30 பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும்
முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம்,
"வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து
நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டனர். [7]
31 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக,
"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.
32 நேர்மையாளர்களை அல்ல,
பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார்.

நோன்பு பற்றிய கேள்வி[தொகு]

(மத் 9:14-17; மாற் 2:18-22)


33 பின்பு அவர்கள் இயேசுவை நோக்கி,
"யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள்;
பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர்.
உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!" என்றார்கள்.
34 இயேசு அவர்களை நோக்கி,
"மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை
அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா?
35 ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும்;
அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்றார்.


36 அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்:
"எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து
அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை.
அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்;
புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.


37 "அதுபோலப் பழைய தோற்பைகளில்
எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை;
ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்.
மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும்.
38 புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும்.
39 பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார்;
ஏனெனில் 'பழையதே நல்லது' என்பது அவர் கருத்து. [8]


குறிப்புகள்


[1] 5:1-3 = மத் 13:12; மாற் 3:9,10; 4:1.
[2] 5:5 = யோவா 21:3.
[3] 5:6 = யோவா 2:6.
[4] 5:8 = விப 33:20; மத் 8:8; மாற் 1:17-19.
[5] 5:10 = யோவா 21:15-17,19.
[6] 5:14 = லேவி 14:1-32.
[7] 5:30 = லூக் 15:1-2.
[8] 5:39 = யோவா 3:19.

அதிகாரம் 6[தொகு]

ஓய்வுநாளில் கதிர் கொய்தல்[தொகு]

(மத் 12;1-8; மாற் 2:23-28)


1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது.
அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். [1]
2 பரிசேயருள் சிலர்,
"ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர்.
3 அதற்கு இயேசு மறுமொழியாக,
"தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது,
தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?
4 அவர் இறை இல்லத்திற்குள் சென்று,
குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக்கூடாத
அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித்
தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?" என்று கூறினார். [2] [3]
5 மேலும் அவர்களிடம்,
"ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.

கை சூம்பியர் ஓய்வுநாளில் நலமடைதல்[தொகு]

(மத் 12:9-14; மாற் 3:1-6)


6 மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார்.
அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.
7 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன்,
ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று
கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்.
8 இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து,
கை சூம்பியவரை நோக்கி,
"எழுந்து நடுவே நில்லும்!" என்றார்.
அவர் எழுந்து நின்றார்.
9 இயேசு அவர்களை நோக்கி,
"உங்களிடம் ஒன்று கேட்கிறேன்:
ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா?
உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று கேட்டார்.
10 பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு,
"உமது கையை நீட்டும்!" என்று அவரிடம் கூறினார்.
அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது.
11 அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம்
என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தல்[தொகு]

(மத் 10:1-4; மாற் 3:13-19)


12 அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார்.
அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.
13 விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு
அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து
அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.
14 அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,
அவருடைய சகோதரர் அந்திரேயா,
யாக்கோபு, யோவான் பிலிப்பு, பர்த்தலமேயு,
15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு,
தீவிரவாதி எனப்பட்ட சீமோன்,
16 யாக்கோபின் மகன் யூதா,
துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

திரளான மக்களுக்குப் பணிபுரிதல்[தொகு]

(மத் 4:23-25)


17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து
சமவெளியான ஓரிடத்தில் நின்றார்.
பெருந்திரளான அவருடைய சீடர்களும்
யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும்
தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த
பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.
18 அவர் சொல்வதைக் கேட்கவும்
தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள்.
தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.
19 அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு
அனைவர் பிணியையும் போக்கியதால்,
அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர். [4]

சமவெளிப் பொழிவு[தொகு]

பேறுபெற்றோரும் கேடுற்றோரும்[தொகு]

(மத் 5:1-12)


20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை:

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்;


ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.
21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்;
ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.
இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்;


ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.[5]


22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து,
நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். [6]
23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்;
ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர். [7]

24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!


ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். [8]
25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள்.
இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!


ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.


26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு!
ஏனெனில் அவர்களின் மூதாதையரும்
போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.

பகைவரிடம் அன்பு காட்டுதல்[தொகு]

(மத் 5:38-48; 7:12அ)


27 "நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்:
உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்;
உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.
28 உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்;
உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். [9]
29 உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு
மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர்
உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்;
30 உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள்.
உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து
அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.


31 "பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ,
அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
32 உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால்
உங்களுக்கு வரும் நன்மை என்ன?
பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.
33 உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால்
உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. [10]
34 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து
நீங்கள் கடன் கொடுத்தால்
உங்களுக்கு வரும் நன்மை என்ன?
ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன்
பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
35 நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்;
அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;
திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்.
அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும்.
நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள்.
ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.
36 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல
நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

தீர்ப்பிடுதல்[தொகு]

(மத் 7:1-5)


37 "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்;
அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்.
மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்;
அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.
மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
38 கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்;
அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து
உங்கள் மடியில் போடுவார்கள்.
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ
அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."


39 மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது:
"பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு
வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? [11]
40 சீடர் குருவைவிட மேலானவர் அல்ல.
ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர். [12]


41 "நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல்
உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும்
துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?
42 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே
நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு
உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம்,
'உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?' என்று
எப்படிக் கேட்க முடியும்?
வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும்
மரக் கட்டையை எடுத்து எறியுங்கள்.
அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின்
கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.

மரமும் கனியும்[தொகு]

(மத் 7:17-20; 12:34-35)


43 "கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை;
நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.
44 ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்.
ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை;
முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.
45 நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து
நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர்.
தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர்.
உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

இருவகை அடித்தளங்கள்[தொகு]

(மத் 7:24-27)


46 "நான் சொல்பவற்றைச் செய்யாது
என்னை, 'ஆண்டவரே, ஆண்டவரே' என ஏன் கூப்பிடுகிறீர்கள்? [13]
47 என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு,
அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என
உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்;
48 அவர் ஆழமாய்த் தோண்டி,
பாறையின் மீது அடித்தளம் அமைத்து,
வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார்.
வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து
அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை;
ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.
49 நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ,
அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார்.
ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது;
அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது."


குறிப்புகள்

[1] 6:1 = இச 23:25.
[2] 6:3,4 = 1 சாமு 21:1-6.
[3] 6:4 = லேவி 24:9.
[4] 6:19 = மாற் 5:30.
[5] 6:20,21 = மத் 5:1-5.
[6] 6:22 = மத் 5:11,12; 1 பேது 4:14.
[7] 6:23 = 2 குறி 36:16; திப 7:52.
[8] 6:24 = லூக் 16:25.
[9] 6:28 = 1 பேது 3:9.
[10] 6:33 = லூக் 14:12-14.
[11] 6:39 = மத் 15:14.
[12] 6:40 = மத் 10:24,25; யோவா 13:16; 15:20.
[13] 6:46 = மத் 7:21.



(தொடர்ச்சி): லூக்கா நற்செய்தி: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை