திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து


"பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்." - லூக்கா 5:12-14

லூக்கா நற்செய்தி (Luke)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல்[தொகு]

(மத் 8:5-13; யோவா 4:43-54)


1 இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு,
கப்பர்நாகுமுக்குச் சென்றார்.
2 அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர்
நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார்.
அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.
3 அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு
யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித்
தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.
4-5 அவர்கள் இயேசுவிடம் வந்து,
"நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே.
அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்;
எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்"
என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். [1]
6 இயேசு அவர்களோடு சென்றார்.
வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே
நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப்
பின்வருமாறு கூறச் சொன்னார்:
"ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்;
நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
7 உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை.
ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
8 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன்.
என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர்.
நான் ஒருவரிடம் 'செல்க' என்றால் அவர் செல்கிறார்;
வேறு ஒருவரிடம் 'வருக' என்றால் அவர் வருகிறார்.
என் பணியாளரைப் பார்த்து 'இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்."
9 இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார்.
தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து,
"இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என
உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது
அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல்[தொகு]


11 அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார்.
அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர்.
12 அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது,
இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர்.
தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண்.
அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.
13 அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு,
"அழாதீர்" என்றார்.
14 அருகில் சென்று பாடையைத் தொட்டார்.
அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள்.
அப்பொழுது அவர், "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார்.
15 இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார்.
இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.
16 அனைவரும் அச்சமுற்று,
"நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார்.
கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்"
என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். [2]
17 அவரைப்பற்றிய இந்தச் செய்தி
யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

இறையாட்சியின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்[தொகு]

(மத் 11:2-19)


18 யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர்.
யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து,
19 "வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது
வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" எனக் கேட்க
ஆண்டவரிடம் அனுப்பினார்.
20 அவர்கள் அவரிடம் வந்து,
"வர இருப்பவர் நீர்தாமா? அல்லது
வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்கத்
திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்"
என்று சொன்னார்கள்.


21 அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும்
பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்;
பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார்.
22 அதற்கு அவர் மறுமொழியாக,
"நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும்
யோவானிடம் போய் அறிவியுங்கள்;
பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்;
கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்;
தொழுநோயாளர் நலமடைகின்றனர்;
காது கேளாதோர் கேட்கின்றனர்;
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்;
ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. [3]
23 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.


24 யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு
இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்:
"நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்?
காற்றினால் அசையும் நாணலையா?
25 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்?
மெல்லிய ஆடை அணிந்த ஒரு மனிதரையா?
பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர்
அரச மாளிகையில் அல்லவா இருக்கின்றனர்!
26 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்?
இறைவாக்கினரையா?
ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என
நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

27 'இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்.
அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்'


என இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது. [4]


28 மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை.
ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும்
அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்."


29 திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு,
கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர்.
30 ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும்
அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது,
தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள். [5]


31 பின்னர் இயேசு,
"இத் தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்?
இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்?
32 இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து
ஒருவரை ஒருவர் கூப்பிட்டு
'நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை.
நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை'
என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.


33 "எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்;
அவர் உணவு அருந்தவுமில்லை; திராட்சை மது குடிக்கவுமில்லை;
அவரை, 'பேய் பிடித்தவன்' என்றீர்கள்.
34 மானிடமகன் வந்துள்ளார்;
அவர் உண்கிறார், குடிக்கிறார்;
நீங்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,
வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறீர்கள்.
35 எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு
அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று" என்றார்.

பாவியான ஒரு பெண் நறுமணத் தைலம் பூசுதல்[தொகு]

(மத் 26:6-13; மாற் 14:3-9; யோவா 12:1-8)


36 பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார்.
அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார்.
இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது
அவருக்குத் தெரியவந்தது.
உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.
38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்;
அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து,
தம் கூந்தலால் துடைத்து,
தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். [6]
39 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு,
"இவர் ஓர் இறைவாக்கினர் என்றால்,
தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்;
இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.


40 இயேசு அவரைப் பார்த்து,
"சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்" என்றார்.
அதற்கு அவர், "போதகரே, சொல்லும்" என்றார்.
41 அப்பொழுது அவர்,
"கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் [7]
மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர்.
42 கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே,
இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார்.
இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?" என்று கேட்டார்.
43 சீமோன் மறுமொழியாக,
"அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ
அவரே என நினைக்கிறேன்" என்றார்.
இயேசு அவரிடம், "நீர் சொன்னது சரியே" என்றார்.


44 பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம்,
"இவரைப் பார்த்தீரா?
நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது
நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை;
இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து
அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.
45 நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை;
இவரோ நான் உள்ளே வந்ததுமுதல்
என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.
46 நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை;
இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
47 ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்:
இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார்.
குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.
48 பின்பு அப்பெண்ணைப் பார்த்து,
"உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
49 "பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று
அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
50 இயேசு அப்பெண்ணை நோக்கி,
"உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க" என்றார்.


குறிப்புகள்

[1] 7:5 = திப 10:1,22.
[2] 7:16 = மத் 16:14-16.
[3] 7:22 = எசா 35:5,6; 61:1; திப 3:8.
[4] 7:27 = மலா 3:1.
[5] 7:29,30 = மத் 21:32; லூக் 3:12.
[6] 7:37,38 = மத் 26:7; மாற் 14:3; யோவா 12:3.
[7] 7:41 - "தெனாரியம்" என்பது ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு
இணையான உரோமை நாணயம்.

அதிகாரம் 8[தொகு]

இயேசுவின் பெண் சீடர்கள்[தொகு]


1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று
இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.
பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.
2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும்,
ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்
3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும்
சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள்.
இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு
அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.

விதைப்பவர் உவமை[தொகு]

(மத் 13:1-9; மாற் 4:1-9)


4 பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும்
அவரிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது:
5 "விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன;
வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.
6 வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன;
அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின.
7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன;
கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன.
8 இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன.
அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன."
இவ்வாறு சொன்னபின்,
"கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று உரக்கக் கூறினார்.

உவமைகளின் நோக்கம்[தொகு]

(மத் 13:10-17; மாற் 4:10-12)


9 இந்த உவமையின் பொருள் என்ன என்று
அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர்.
10 அதற்கு இயேசு கூறியது:
"இறையாட்சியின் மறைபொருளை அறிய
உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது.
மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன.
எனவே "அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்துகொள்வதில்லை."

விதைப்பவர் உவமையின் விளக்கம்[தொகு]

(மத் 13:18-23; மாற் 4:13-20)


11 "இந்த உவமையின் பொருள் இதுவே:
விதை, இறைவார்த்தை.
12 வழியோரம் விழுந்த விதைகள்,
அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும்.
அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து
அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.
13 பாறைமீது விழுந்த விதைகள்,
அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும்.
ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்;
சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்;
சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.
14 முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள்,
வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம்,
வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு
முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.
15 நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ,
சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு,
அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

விளக்கு உவமை[தொகு]

(மாற் 4:21-25)


16 "எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை;
கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை.
மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி
அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.
17 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை;
அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.
18 ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள்
என்பது பற்றிக் கவனமாயிருங்கள்.
உள்ளவருக்குக் கொடுக்கப்படும்;
இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும்
எடுத்துக்கொள்ளப்படும்."

இயேசுவின் உண்மையான உறவினர்[தொகு]

(மத் 12:46-50; மாற் 3:31-35)


19 இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள்.
ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.
20 "உம் தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி
வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21 அவர் அவர்களைப் பார்த்து,
"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே
என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்.

காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் அடக்குதல்[தொகு]

(மத் 8:23-27; மாற் 4:35-41)


22 ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும்,
"ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்" என்று
அவர் அவர்களுக்குச் சொன்னார்.
அவர்களும் படகைச் செலுத்தினார்கள்.
23 படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.
அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது.
படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள்.
24 அவர்கள் அவரிடம் வந்து,
"ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்"
என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார்.
உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று.
25 அவர் அவர்களிடம்,
"உங்கள் நம்பிக்கை எங்கே?" என்றார்.
அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய்,
"இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார்.
அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?" என்று
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

கெரசேனர் பகுதியில் பேய் பிடித்தவரை நலமாக்குதல்[தொகு]

(மத் 8:28-34; மாற் 5:1-20)


26 அவர்கள் கலிலேயாவுக்கு எதிரே இருக்கும் கெரசேனர் பகுதியை நோக்கிப்
படகைச் செலுத்தினார்கள்.
27 கரையில் இறங்கியதும் அந்நகரைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு எதிரே வந்தார்.
பேய் பிடித்த அவர் நெடுநாளாய் ஆடை அணிவதில்லை;
வீட்டில் தங்காமல் கல்லறைகளில் தங்கிவந்தார்.
28 இயேசுவைக் கண்டதும் கத்திக்கொண்டு அவர்முன் விழுந்து,
"இயேசுவே, உன்னத கடவுளின் மகனே,
உமக்கு இங்கு என்ன வேலை?
என்னை வதைக்க வேண்டாம் என உம்மிடம் மன்றாடுகிறேன்" என்று
அவர் உரத்த குரலில் கூறினார்.
29 ஏனென்றால், அவரைவிட்டு வெளியேறுமாறு
அத்தீய ஆவிக்கு இயேசு கட்டளையிட்டிருந்தார்.
அது எத்தனையோ முறை அவரைப் பிடித்திருந்தது.
அவ்வேளைகளில் அவர் சங்கிலிகளாலும் விலங்குகளாலும் கட்டப்பட்டுக்
காவலில் வைக்கப்பட்டிருந்தும்
அவற்றை உடைத்து எறிந்துவிடுவார்.
அது மட்டுமல்ல, தீய ஆவி அவரைப் பாலை நிலத்திற்கும் இழுத்துச் செல்லும்.
30 இயேசு அவரிடம், "உம் பெயர் என்ன?" என்று கேட்க,
அவர், "இலேகியோன்" என்றார்.
ஏனெனில் பல பேய்கள் அவருக்குள் புகுந்திருந்தன.
31 அவை தங்களைப் பாதாளத்துக்குள் போகப்
பணிக்கவேண்டாமென அவரை வேண்டின.
32 அங்கு ஒரு மலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன.
அவற்றுக்குள் புகம்படி தங்களை அனுமதிக்குமாறு பேய்கள் அவரை வேண்டின.
அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார்.
33 பேய்கள் அவரைவிட்டு வெளியேறிப் பன்றிகளுக்குள் புகந்தன.
பன்றிக்கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து ஏரியில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.
34 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் நடந்ததைக் கண்டு ஓடிப்போய்,
நகரிலும் நாட்டுப் புறத்திலும் அறிவித்தார்கள்.
35 நடந்தது என்ன என்று பார்க்க மக்கள் இயேசுவிடம் வந்தனர்;
பேய்கள் நீங்கப்பெற்றவர் ஆடை அணிந்து
அறிவுத் தெளிவுடன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர்.
36 நடந்ததைப் பார்த்தவர்கள்
பேய் பிடித்தவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37 அப்பொழுது கெரசேனரைச் சுற்றியுள்ள
பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த மக்கள் அனைவரும்
அச்சம் மேலிட்டவர்களாய்த்
தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
அவர் படகேறித் திரும்பிச் சென்றார்.
38 அப்போது பேய்கள் நீங்கப்பெற்றவர்
தம்மைக் கூட்டிச் செல்லும்படி இயேசுவிடம் மன்றாடினார்.
39 அவரோ, "உம்முடைய வீட்டிற்குத் திரும்பிப்போம்;
கடவுள் உமக்குச் செய்ததையெல்லாம் எடுத்துக்கூறும்" என்று சொல்லி
அவரை அனுப்பிவிட்டார்.
அவரும் நகரெங்கும் போய்,
இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் அறிவித்தார்.

இரத்தப்போக்குடைய பெண் நலம்பெறுதலும்
சிறுமி உயிர்த்தெழுதலும்
[தொகு]

(மத் 9:18-26; மாற் 5:21-43)


40 இயேசு திரும்பி வந்தபோது
அங்கே திரண்டு அவருக்காகக் காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.
41 அப்போது தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார்.
அவர் பெயர் யாயிர்.
அவர் இயேசுவின் காலில் விழுந்து தம்முடைய வீட்டிற்கு வருமாறு வேண்டினார்.
42 ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள்
சாகும் தறுவாயிலிருந்தாள்.


இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது
43 பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.
அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும்
எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை.
44 அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து
அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.
உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று.
45 "என்னைத் தொட்டவர் யார்?" என்று இயேசு கேட்டார்.
அனைவரும் மறுத்தனர்.
பேதுரு, "ஆண்டவரே, மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறதே" என்றார்.
46 அதற்கு இயேசு, "யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்;
என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்" என்றார்.
47 அப்பெண் தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு
நடுங்கிக்கொண்டே வந்து அவர்முன் விழுந்து,
தாம் அவரைத் தொட்ட காரணத்தையும்
உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி
மக்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்தார்.
48 இயேசு அவரிடம்,
"மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது.
அமைதியுடன் போ" என்றார்.


49 அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது
தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஒருவர் வந்து,
"உம்முடைய மகள் இறந்துவிட்டாள்.
இனி போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார்.
50 இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து,
"அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார்.
51 வீட்டுக்குள் வந்ததும் பேதுரு, யோவான், யாக்கோபு,
சிறுமியின் தாய், தந்தை ஆகியோரைத் தவிர
எவரையும் அவர் தம்மோடு உள்ளே வர அனுமதிக்கவில்லை.
52 அவளுக்காக அனைவரும் மாரடித்துப் புலம்பி அழுதுகொண்டிருந்தார்கள்.
இயேசுவோ, "அழாதீர்கள்; இவள் இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார்.
53 அவள் இறந்துவிட்டாள் என்று அறிந்திருந்ததால்
அவரைப் பார்த்து அவர்கள் நகைத்தார்கள்.
54 அவர் அவளது கையைப் பிடித்து,
"சிறுமியே, எழுந்திடு!" என்று கூப்பிட்டார்.
55 உயிர் மூச்சுத் திரும்பி வரவே, உடனே அவள் எழுந்தாள்;
இயேசு அவளுக்கு உணவு கொடுக்கப் பணித்தார்.
56 அவளுடைய பெற்றோர் மலைத்துப் போயினர்.
நடந்ததை எவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.


குறிப்புகள்

[1] 8:2,3 = மத் 27:55,56; மாற் 15:40,41; லூக் 23:49.
[2] 8:10 = எசா 6:9.
[3] 8:16 = மத் 5:15; லூக் 11:33; யோவா 8:12.
[4] 8:17 = மத் 10:26; லூக் 12:2.
[5] 8:18 = மத் 25:29; மாற் 4:24,25; லூக் 19:26.
[6] 8:21 = எசே 33:31.
[7] 8:30 - இலேகியோன் என்பது உரோமைப் படையின்
6000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு.


(தொடர்ச்சி): லூக்கா நற்செய்தி: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை