திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு ... கூறிய உவமை: 'ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார். 'கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?' என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், 'அவருக்கு இரக்கம் காட்டியவரே' என்றார். இயேசு, 'நீரும் போய் அப்படியே செய்யும்' என்று கூறினார்" - லூக்கா 10:30-37

லூக்கா நற்செய்தி (Luke)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

பன்னிரு திருத்தூதர் அனுப்பப்படுதல்[தொகு]

(மத் 10:5-15; மாற் 6:7-15)


1 இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து,
பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும்
வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார்.
2 இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும்
உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
3 அப்போது அவர்களை நோக்கி,
"பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும்
எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும்.
4 நீங்கள் எந்த வீட்டிக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்;
அங்கிருந்தே புறப்படுங்கள்.
5 உங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது
உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்" என்றார். [1] [2]
6 அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து
நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

ஏரோதுவின் குழப்பம்[தொகு]

(மத் 14:1-12; மாற் 6:14-29)


7 நிகழ்ந்தவற்றையெல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான்.
ஏனெனில் சிலர், "இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்" என்றனர்.
8 வேறு சிலர், "எலியா தோன்றியிருக்கிறார்" என்றனர்.
மற்றும் சிலர், "முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்" என்றனர். [3]
9 ஏரோது, "யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?
இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!" என்று சொல்லி
இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்[தொகு]

(மத் 14:13-21; மாற் 6:30-44; யோவா 6:1-14)


10 திருத்தூதர்கள் திரும்பி வந்து,
தாங்கள் செய்த யாவற்றையும் இயேசுவிடம் எடுத்துக் கூறினார்கள்.
அவர்களை மட்டும் கூட்டிக்கொண்டு அவர் தனித்திருப்பதற்காகப்
பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்.
11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.
அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி,
குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.
12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து,
"இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே;
சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும்
உணவு வாங்கிக்கொள்ளவும்
மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர்.
13 இயேசு அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.
அவர்கள், "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன.
நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்" என்றார்கள்.
14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர்.
இயேசு அவருடைய சீடர்களை நோக்கி,
"இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்" என்றார்.
15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.
16 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து
வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு,
மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.
17 அனைவரும் வயிறார உண்டனர்.
எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை[தொகு]

(மத் 16:13-19; மாற் 8:27-29)


18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது
சீடர் மட்டும் அவரோடு இருந்தனர்.
அப்போது அவர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று அவர் கேட்டார்.
19 அவர்கள் மறுமொழியாக,
"சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும்
மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்
எனவும் சொல்கின்றனர்" என்றார்கள். [4]
20 "ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?" என்று அவர்களிடம் அவர் கேட்டார்.
பேதுரு மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா" என்று உரைத்தார். [5]
21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசு தம் சாவை முதன் முறை முன்னறிவித்தல்[தொகு]

(மத் 16:20-28; மாற் 8:30; 9:1)


22 மேலும் இயேசு, "மானிட மகன் பலவாறு துன்பப்படவும்
மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக்
கொலைசெய்யப்படவும்
மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்" என்று சொன்னார்.
23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி,
"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து
தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். [6]
24 ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார்.
என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். [7]
25 ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும்
வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?
26 என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும்
வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும்
மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும் உரிய
மாட்சியோடு வரும் போது வெட்கப்படுவார்.
27 இங்கு நிற்பவர்களுள் சிலர் இறையாட்சி வருவதைக் காண்பதற்குமுன்
சாகமாட்டார்கள் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

இயேசு தோற்றம் மாறுதல்[தொகு]

(மத் 17:1-8; மாற் 9:2-8)


28 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு
இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு
இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.
29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது
அவரது முகத்தோற்றம் மாறியது;
அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.
30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.
31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள்
எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள்.
அவர்கள் விழித்தபோது
மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.
33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது,
பேதுரு இயேசுவை நோக்கி,
"ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது.
உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக
மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று
தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
34 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது
ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது.
அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.
35 அந்த மேகத்தினின்று,
"இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே.
இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. [8] [9]
36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார்.
தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில்
யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

பேய் பிடித்த சிறுவனின் பிணி தீர்த்தல்[தொகு]

(மத் 17:14-18; மாற் 9:14-27)


37 மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கியபொழுது,
பெருந்திரளான மக்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள்.
38 கூட்டத்திலிருந்து ஒருவர்,
"போதகரே, என் மகன்மீது அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன்.
அவன் எனக்கு ஒரே மகன்.
39 ஓர் ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது;
உடனே அவன் அலறுகிறான்; வலிப்பு உண்டாகி நுரை தள்ளுகிறான்;
அது அவனை நொறுக்கிவிடுகிறது; அவனைவிட்டு எளிதாகப் போவதில்லை.
40 அதை ஓட்டிவிடும்படி உம் சீடரிடம் மன்றாடினேன்.
ஆனால் அவர்களால் முடியவில்லை" என்று உரக்கக் கூறினார்.
41 அதற்கு இயேசு,
"நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே,
எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்?
எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்?" என்றார்.
"உம் மகனை இங்கே கொண்டுவாரும்" என்று அம்மனிதரிடம் கூறினார்.
42 அவன் அவரிடம் வந்தபோது பேய் அவனைக் கீழே தள்ளி வலிப்புண்டாக்கியது.
இயேசு அத்தீய ஆவியை அதட்டி, சிறுவனின் பிணி தீர்த்து,
அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார்.
43அ அப்பொழுது எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள்.

இயேசு தம் சாவை இரண்டாம் முறை முன்னறிவித்தல்[தொகு]

(மத் 17:22,23; மாற் 9:30-32)


43ஆ இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்.
அவர் தம் சீடர்களிடம்,
44 "நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்றார்.
45 அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை.
அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது.
ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

யார் மிகப் பெரியவர்?[தொகு]

(மத் 18:1-5; மாற் 9:33-37)


46 தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.
47 இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து
ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி,
48 அவர்களிடம்,
"இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும்
என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்.
உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்" என்றார். [10]

இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவர்[தொகு]

(மாற் 9:38-40)


49 யோவான் இயேசுவைப் பார்த்து,
"ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு,
நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்;
ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.
50 இயேசு அவரை நோக்கி,
"தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்" என்றார்.

5. எருசலேம் நோக்கிப் பயணம்[தொகு]

இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியர்[தொகு]


51 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே
எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,
52 தமக்கு முன் தூதர்களை அனுப்பினார்.
அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள்
சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால்
அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு,
"ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?
இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். [11]
55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.
56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள்[தொகு]

(மத் 8:19-22)


57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி,
"நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.
58 இயேசு அவரிடம்,
"நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு,
மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.
59 இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றிவாரும்" என்றார்.
அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்" என்றார்.
60 இயேசு அவரைப் பார்த்து,
"இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்.
நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்" என்றார்.
61 வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்;
ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம்
விடைபெற்று வர அனுமதியும்" என்றார். [12]
62 இயேசு அவரை நோக்கி,
"கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும்
இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" என்றார்.


குறிப்புகள்

[1] 9:3-5 = லூக் 10:4-11.
[2] 9:5 = திப 13:51.
[3] 9:7,8 = மத் 16:14; மாற் 8:28; லூக் 9:19.
[4] 9:19 = மத் 14:1,2; மாற் 6:14,15; லூக் 9:7,8.
[5] 9:20 = யோவா 6:68,69.
[6] 9:23 = மத் 10:38; லூக் 14:27.
[7] 9:24 = மத் 10:39; லூக் 17:33; யோவா 12:25.
[8] 9:35 = எசா 42:1; மத் 3:17; 12:18; மாற் 1:11; லூக் 3:22.
[9] 9:28-35 = 2 பேது 1:17,18.
[10] 9:48 = மத் 10:40; லூக் 10:16; யோவா 13:20.
[11] 9:54 = 2 அர 19:10.
[12] 9:61 = 1 அர 19:19-21.


அதிகாரம் 10[தொகு]

எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புதல்[தொகு]


1 இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு [1] பேரை நியமித்து,
அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும்
தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.
2 அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது:
"அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.
ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி
அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். [2]
3 புறப்பட்டுப் போங்கள்; [3]
ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.
4 பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ
எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்;
வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
5 நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும்,
"இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள்.
6 அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால்,
நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்;
இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.
7 அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள்.
ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே;
வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம். [4]
8 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால்
உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.
9 அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி,
இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.
10 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால்
அதன் வீதிகளில் சென்று,
11 "எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும்
உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம்.
ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்"
எனச் சொல்லுங்கள். [5] [6]
12 அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை
சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட
கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன். [7]

திருந்த மறுத்த நகரங்களுக்குச் சாபம்[தொகு]

(மத் 11:20-24)


13 "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு!
பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு!
ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள்
தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால்,
அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர்.
14 எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட
உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.
15 கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ?
இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய். [8]


16 "உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்;
உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார்.
என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்." [9]

எழுபத்திரண்டு சீடர்களும் திரும்பிவருதல்[தொகு]


17 பின்னர் எழுபத்திரண்டு [10] பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து,
"ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால்
பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர்.
18 அதற்கு அவர்,
"வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.
19 பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும்,
பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும்
உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்.
உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. [11]
20 ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம்.
மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன
என்பது பற்றியே மகிழுங்கள்" என்றார்.

தந்தையும் மகனும்[தொகு]

(மத் 11:25-27; 13:16-17)


21 அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து,
"தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து,
குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்" என்றார்.
22 "என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்.
தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்;
மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும்.
வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார். [12]


23 பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக,
"நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்.
24 ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும்
நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள்.
ஆனால், அவர்கள் காணவில்லை.
நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்;
ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.

நல்ல சமாரியர்[தொகு]


25 திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன்,
"போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள
நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
26 அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது?
அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார்.
27 அவர் மறுமொழியாக,


'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும்,


முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும்
உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக.


உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக'


என்று எழுதியுள்ளது" என்றார். [13]


28 இயேசு, "சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்றார். [14] [15]


29 அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி,
"எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார்.
30 அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:
"ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார்.
அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு,
அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31 குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார்.
அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.
32 அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து
அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.
33 ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர்
அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.
34 அவர் அவரை அணுகி,
காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து,
அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி,
ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.
35 மறுநாள் இரு தெனாரியத்தை [16] எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து,
'இவரைக் கவனித்துக் கொள்ளும்;
இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார்.


36 "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு
இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார்.
37 அதற்கு திருச்சட்ட அறிஞர்,
"அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார்.
இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.

மார்த்தா மரியாவைச் சந்தித்தல்[தொகு]


38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார்.
அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.
39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார்.
மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். [17]
40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து,
"ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே,
உமக்குக் கவலையில்லையா?
எனக்கு உதவி புரிய அவளிடம் சொல்லும்" என்றார்.
41 ஆண்டவர் அவரைப் பார்த்து,
"மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
42 ஆனால் தேவையானது ஒன்றே.
மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்;
அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார்.


குறிப்புகள்

[1] 10:1 - "எழுபத்திரண்டு" என்னும் சொல் சில கையெழுத்துப் படிகளில்
"எழுபது" என உள்ளது.
[2] 10:2 = மத் 9:37,38.
[3] 10:3 = மத் 10:16.
[4] 10:7 = 1 கொரி 9:14; 1 திமொ 5:18.
[5] 10:10,11 = திப 13:51.
[6] 10:4-11 = மத் 10:7-14; மாற் 6:8-11; லூக் 9:35.
[7] 10:12 = தொநூ 18:24-28; மத் 10:15; 11:24.
[8] 10:15 = எசா 14:13-15.
[9] 10:16 = மத் 10:40; மாற் 9:37; லூக் 9:48; யோவா 13:20.
[10] 10:17 - "எழுபத்திரண்டு" என்னும் சொல் சில கையெழுத்துப் படிகளில்
"எழுபது" என உள்ளது.
[11] 10:19 = திபா 91:13; திவெ 12:9.
[12] 10:22 = யோவா 3:35; 10:15.
[13] 10:27 = இச 6:5; லேவி 19:18.
[14] 10:28 = லேவி 18:5.
[15] 10:25-28 = மத் 22:35-40; மாற் 12:28-34.
[16] 10:35 - காண்க: 7:41இன் அடிக்குறிப்பு.
[17] 10:38,39 = யோவா 11:1.

(தொடர்ச்சி): லூக்கா நற்செய்தி: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை