தில்லைப் பெருங்கோயில் வரலாறு/தில்லைத் திருக்கோயிலின் நிர்வாகம்

விக்கிமூலம் இலிருந்து

9. தில்லைக்கோயிலின் நிர்வாகம்

தில்லைப் பெருங்கோயிலின் நிர்வாகமனைத்தும் நாடாளும் மன்னனது நேரடிப்பார்வையில் நிகழ்ந்தமையால் இத்தலம், கல்வெட்டுக்களில் தனியூர் பெரும்பற்றப்புலியூர் என வழங்கப் பெறுவதாயிற்று. (தெ. இ. க. தொகுதி IV எண் 226) அரசனுடைய அதிகாரி ஒருவரோ இருவரோ இத்திருக்கோயிலின் நடைமுறையை, தில்லையில் தங்கிக் கவனித்து வருவார். கோயில் பணிகளைப் புரிந்து வரும் பல்வேறு குழுவினரும் மூலப்பருஷையாரும் நகரமக்களும் இவ்வதிகாரிகளுடன் கலந்து கோயிலுக்குரிய நிலமுதலிய உடைமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை மேற்கொள்வர். இச்செய்தி, "தொண்டைமானும் திருவை யாறுடையானும் மதுராந்தகப் பிரமராயனும் ஆளுடையார் கோயிலுக்குச் சமுதாயத் திருமாளிகைக் கூறு தில்லையம்பலப் பல்லவராயனும் சீகாரியஞ் செய்வார்களும் சமுதாயஞ் செய்வார்களும் கோயில் நாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக் கூறு செய்ய திருவாய் மொழிந்தருளின படி" (தெ.இ. க, தொ. IV எண் 222.) என வரும் அரசு ஆணையால் நன்குபுலனாகும். முதற் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சியில் தில்லைப்பெருங்கோயில் அவனது நேர்ப்பார்வையில் நிர்வாகஞ் செய்யப்பெற்றதாகத் தெரிகின்றது.

இரண்டாம் கோப்பெருஞ் சிங்கன் காலத்தில் உடையார் திருச்சிற்றம்பல முடையார் கோயிலை "ஸ்ரீ மாகேசுவரக் கண்காணி செய்வார்களும் ஸ்ரீகாரியம் செய்வார்களும் கோயில் நாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக் கூறு செய்வார்களும் கணக்கரும்" (தெ. இ. க, தொ. XII எண் 148) அரசனது ஆணைப்படி கண்காணித்து வந்தனர் எனத் தெரிகின்றது. இக்கோயிலின் நில முதலியன பற்றிய சான்றுகள் பெரும்பற்றப் புலியூர் மூலபருஷையார் கையெழுத்துடன் திருக்கையொட்டிப் பண்டாரத்தில் ஒடுக்கப் பெற்றிருந்தன. தில்லைப்பெருங் கோயிலில் வரையப்பெற்றுப் படியெடுக்கப் பெற்றுள்ள இருநூற்றெழுபது கல்வெட்டுக்களில் இக்கோயிலின் நிர்வாகம் நாடாள் வேந்தனின் ஆணைப்படி திருக்கோயிலில் பணிசெய்யும் பல்வேறு குழுவினராலும் சமுதாயஞ் செய்வாராகிய நகர மக்களாலும் நிர்வகிக்கப் பெற்று வந்த செய்தியே இடம் பெற்றுள்ளமை மனம் கொள்ளத் தகுவதாகும். புறச்சமய மக்கள் படையெடுப்பினால் இக்கோயிற் பூசை தடைப்பட்ட நிலையில் கூத்தப்பெருமான் திருவுருவத்தையும் இன்றியமையாத பிற உடைமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் இக்கோயிலிற் பூசை புரியும் தில்லைவாழந்தணர்கள், தம் கடமையாக மேற் கொண்டு ஒழுகினமையாலும், மிக நெருக்கடியான காலத்தில் உயிர்த்தியாகம் செய்து திருக்கோயில் உடைமைகளைப் பாது காத்தமையாலும் இக்கோயிலின் நிர்வாகத்தைப் பிற்காலத்தில் தில்லைப் பொதுவார் எனப்படும் தில்லைவாழந்தணர் கவனித்து வருவாராயினர்.

முதலாம் சரபோசியின் ஆட்சியில் கி.பி. 1719-இல் ஏகோசி யரசராற் சிறப்புச் செய்யப்பெற்ற தொண்டை மண்டல வேளாளரும் சேறைகிழார் கோத்திரத்தினரும், நியமம் என்ற ஊரின் தலைவரும் ஆகிய ராயஸ்ரீ முதலியார் முத்துச் செல்லப்ப முதலியார் தருமமாகச் சைவப்பேரன்பர் தாண்டவமூர்த்தி சேரு வைகாரர் என்பார் வல்லத்துத்தோட்டமும் ஒரு ஆள் ஆயத்தீர்வையும் தில்லைச் சிதம்பரேசுவரசுவாமிக்கும் தில்லைக்கோவிந்தராயப் பெருமாளுக்கும் தான சாசனம் செய்து சிதம்பரம் அகோர பண்டாரம் சார்பிலே அரிசியப்ப முதலியார் கட்டளையினை நடத்திவரும் தாண்டவன் தோட்டம் சரவணைத்தம்பிரானுக்கு நீர்வார்த்துக்கொடுத்தார் என்பதும், சிதம்பரம் சபாபதிக் கட்டளையினை நடத்திவரும் சரவணைத்தம்பிரான் என்பவர் இத் தான சாசனத்தை ஏற்றுக்கொண்டு சூரியசந்திரர் உள்ள வரையும் இக்கட்டளையினை நடத்துவதாக ஒப்புக்கொண்டார் என்பதும் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'தஞ்சை மராட்டிய செப்பேடுகள் - 50' என்ற நூலில் 7-ஆம் எண்ணுள்ள ' 'திருவாரூர்ச்செப்பேடு-1'- இல் குறிக்கப்பெற்றுள்ளன. (பக்கம் 55-61)

கி.பி. 25-8-1719-இல் அளிக்கப்பட்ட. இத்தமிழ்ச் செப் பேடு சிதம்பரம் - கோயிலுக்கு உரியதாகும். திருவாரூர்க் கோயிலிற் பாதுகாக்கப்பட்டிருத்தலால், திருவாரூர்ச் செப்பேடு, என்ற பெயரில் வெளியிடப்பெற்றுள்ளது. இச்செப்பேட்டிற் குறிக்கப்பட்டுள்ள அறக்கட்டளையினை ஏற்று நடத்தும் பொறுப் புடையவராகவோ இக்கட்டளைக்குரிய நிர்வாகத்திற்கு உரியவராகவோ தீட்சிதர்கள் இச்செப்பேட்டிற் குறிக்கப்படவில்லை. இவ்வறக்கட்டளையினை ஏற்று நடத்தும் நிர்வாகப் பொறுப்புடையவராகத் தாண்டவன் தோட்டம் சபாபதிகட்டளையினை நடத்தும் சரவணைத்தம்பிரான் என்பவரே குறிப்பிடப்பெற்றுள்ளார்.

இச்செப்பேட்டிற் கூறப்பட்ட - செய்தியினைக் கூர்ந்து நோக்குங்கால் அக்காலத்தில் தில்லைப் பெருங்கோயிலுக்கு மன்னர்களாலும் குடிமக்களாலும் நிறுவப்படும் கட்டளைகளை நிர்வகிக்கும் பொறுப்பு அகோரபண்டாரம் போன்ற திருமடத்தின் தலைவர்களிடத்திலும் சரவணைத் தம்பிரான் தலைவர்களிடத்திலும் சரவனைத் தம்பிரான் போன்ற துறவிகளிடத்திலும் ஒப்படைக்கப்பட்ட தென்பதும் தில்லை வரழந்தணர்கள் திருக்கோயிலின் பூசனை முறைகளாகிய உள் துறை அலுவல்களை மட்டுமே கவனித்துக்கொள்ளும் உரிமையாளராக இருந்தனர் என்பதும் நன்கு புலனாதல் காணலாம்.

தில்லைப்பெருங்கோயிலுக்கென - வேந்தர்களும் குறுநில மன்னார்களும், வள்ளல்களும், தேவதானமாகக் கொடுத்துள்ள ஊர்களும் நிலங்களும் பிற்காலத்தவர்களாற் சுவரப்பட்டன. எனவே. தில்லைப் பெருங்கோயிலுக்கென இப்பொழுது நில வுடைமை எதுவுமில்லை. காஞ்சிபுரம் பச்சையப்பமுதலியார் போன்றதமிழ் முன்னோர்கள் நிறுவியுள்ள அறக்கட்டளை சுளைக் கொண்டே இக்கோயிலின் நாள்வழிபாடும் திருவிழாக்களும் சிறப்புற நிகழ்ந்து வருகின்றன.

தில்லைவாழந்தணர்கள் கூத்தப்பெருமானுக்குப் பூசனை புரியும் அவ்வளவில் மட்டும் அமைந்துவிடாமல் இக்கோயிலுள்ளே நிகழும் அகத்தொண்டுகள் எவ்லாவற்றையும் தாமே செய்யும் பொறுப்பினை - மேற்கொண்டவர்கள் என்பது 'அந்தணர் கோயி லுள்ளால் அகம்படித் தொண்டு செய்வார்.' எனவரும் சேக்கிழார் வாய் மொழியாலும், குடந்தையை யடுத்துள்ள இராசராசேச்சுரத் திருக்கோயிலிலுள்ள தில்லை வாழந்தணர்களைக் குறித்த திருத்தொண்டத் தொகையடியார் சிற்பத்தினாலும் இனிது புலனாகும். தில்லையம்பலப் பெருமானைத் தமது வாழ்வாகவும் வைப்பு நிதியாகவும் கொண்டு வழிபாடு செய்து வரும் நான்மறை யந்தணர்களாகிய இத்தில்லைவாழ் அந்தனர்களை 'ஊறுஇன் தமிழால் உயர்ந்தார்' எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிறப்பித்துப் போற்றியுள்ளார். பின்ளையார் அருளிய வண்ணம் தமிழால் உயர்ந்த தில்லைவாழந்தணர்கள் தில்லைக் கனகசபையிவே செந்தமிழ்ச் சைவத் திருமுறைகளைப் பண்ணுடன் ஓதிப் போற்றி வருவது தமிழ் மக்கள் எல்லோரும் பாராட்டுதற்குரிய திருப்பணியாகும்.

"அகலிடத் துயர்த்த தில்லை யந்தணர் அகிலமெல்லாம்
புகழ்திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றிவாழ்க"

எனச் சேக்கிழார் பெருமான் வாழ்த்திய அருண்மொழி வாழ்த்து தில்லைவாழந்தணர்க்கு என்றும் உரியதாகும்.