தில்லைப் பெருங்கோயில் வரலாறு/தில்லை நடராசர் திருக்கோயிலில்

விக்கிமூலம் இலிருந்து

10. பிற்சேர்க்கை

1. தில்லை நடராசர் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் இடம் பெற்ற வரலாறு

செந்தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் தில்லைப் பெருங்கோயில் சைவசமயத்தார்க்குச் சிறப்புரிமையுடைய தலைமைக் கோயிலாகவே போற்றப் பெற்றுள்ளது. வியாக்கிர பாதராகிய புலிக்கால் முனிவர் திருமூலட்டானப் பெருமானை வழிபட்டுப் போற்றினமையால் பெரும் பற்றப்புலியூர் எனவும், தில்லைவனமாகிய இத்திருத்தலத்திலே பதஞ்சலி முனிவர் செய்த தவத்திற்கு அருள்கூர்ந்து எல்லாம் வல்ல சிவபெருமான் ஞான மயமான அம்பலத்திலே ஆனந்தக் கூத்து நிகழ்த்தியருளுதலால் தில்லைச் சிற்றம்பலம் எனவும் வழங்கப் பெறுவது இத்தில்லைப் பெருங் கோயிலாகும். திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப் பதிகங்களும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவையாகிய அருள் நூல்களும் திருமூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் ஈறாகவுள்ள ஏனைய திருமுறைகளும் தில்லைச்சிற்றம்பலத்தையே சிவ தலங்களெல்லாவற்றிலும் முதன்மையுடையதாகக் கொண்டு'கோயில்' என்னும் பெயராற் சிறப்பித்துப் போற்றியுள்ளன. சேரசோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் ஆட்சியிலும் இடைக்காலத்தில் வந்த பல்லவ மன்னர்கள் ஆட்சியிலும் பிற்காலத்தில் வந்த விசயநகர மன்னர் நாயக்கமன்னர் மராட்டிய மன்னர் ஆட்சியிலும் தில்லைப் பெருங்கோயில் கூத்தப் பெருமானுக்குரிய திருக்கோயிலாகவே கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் ஆட்சியுரிமைகள் அனைத்தும் சிவனடியாாகளாகிய மாதேஸ்வரர்களுக்கும் கோயிலில் ஸ்ரீ காரியமாகிய அகத்தொண்டு புரிந்து வரும் தில்லை வாழந்தணர் முதலியோர்க்கும் கோயில் நாயகஞ் செய்வார் ஆகிய அரசியலதிகாரிகட்கும் சமுதாயஞ் செய்வாராகிய ஊர்ப் பொதுமக்களுக்கும் உரியனவாகக் கோயிலில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளன. சிதம்பரம் நடராசர் கோயிலில், வரையப் பெற்றுள்ள 270 க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் இக்கோயில் உடையார் திருச்சிற்றம்பலமுடையராகிய பொன்னம்பலவாணர்க்குச் சிறப்புரிமை யுடைய திருக்கோயிலாகக் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

இவ்வாறு சைவ சமயத்தார்க்கே சிறப்புரிமை வாய்ந்த சிதம்பரம் நடராசப் பெருமான் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் திருவுருவம் எப்பொழுது பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதும் இக்கோயிலில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எத்தகைய உரிமையுண்டு என்பதும் வரலாற்று முறையில் நோக்குவது இக்கோவிலின் அமைதியான நடைமுறைக்கு மிகவும் உறுதுணை செய்வதாகும்.

தேவார ஆசிரியர் மூவர் காலம் வரையிலும் தில்லைப்பெருங் கோயிலில் கோவிந்தராசப்பெருமாள் சந்நிதி இடம்பெற வில்லை. சிதம்பரம் சபாநாயகர் திருக்கோயிலில் கோவிந்த ராசப்பெருமாளை முதன் முதற் பிரதிஷ்டை செய்தவன் கி.பி. 726 முதல் 775 வரை ஆட்சிபுரிந்த நந்திவர்மபல்லவன் ஆவன், இச்செய்தி திருச்சித்திரகூடத்தைப் போற்றித் திருமங்கை யாழ்வார் பாடியருளிய பெரிய திருமொழியாற் புலனாகின்றது.

“பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன் பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச் சித்திர கூடம் சென்று சேர்மின்களே"

(பெரிய திருமொழி 3-2-3)

எனத் திருமங்கையாழ்வார் பாடிப் போற்றுதலால் தில்லைப் பெருங்கோயிலிலுள்ள கோவிந்தராசப்பெருமாள் சந்நிதி நந்தி வர்ம பல்லவனால் முதன் முதல் அமைக்கப்பெற்றதென்பது நன்கு புலனாகும். இச்சந்நிதி தில்லைக் கூத்தப்பிரான் திருமுற்றத்தில் சிறிய திண்ணையளவில்தான் முதன் முதல் நிறுவப்பெற்றிருந்தது என்பது தில்லைத் திருச்சித்திரகூடம் என்ற பெயரால் தெளியப்படும். 'சித்திரகூடம் தெற்றியம்பலம்' என்பது திவாகரம். தெற்றி -- திண்ணை, எனவே திண்ணையளவிலமைந்த சிறிய இடத்திலேயே நந்திவர்மபல்லவன் கோவிந்தராசப்பெருமாளைப் பிரதிஷ்டை செய்தான் என்று தெரிகின்றது.

சிவனைத் தொழுகுலமாகப் பெற்று அம்முதல்வனது ஊர்தியாகிய இடபத்தினை இலச்சினையாகக் கொண்டவர்கள் பல்லவ மன்னர்கள். அத்தகைய பல்லவமரபிலே தோன்றிய நந்திவர்ம பல்லவன் தன் ஆட்சியின் முற்பகுதியில் சைவ வைணவ சமயங்களிற் சமநோக்குடையனாக விளங்கினான். இவன் தன்காலத்தில் திருமாலின் திருவருளுக்குரிய அருளாசிரியராகத் திகழ்ந்த திருமங்கையாழ்வாரது தொடர்பினால் பரமவைணவனாக மாறி விட்டான். "முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலைவணங்கவில்லை” எனத்தண்டத்தோட்டப் பட்டயம் இம்மன்னனைப் பற்றிக் கூறுதலால் இவன் வைணவனாக மாறிய செய்தி நன்கு புலனாகும். இவன் பரம வைணவனாக மாறிய பின்பே தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயில் முற்றத்திற் கோவிந்தராசப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தனன் என்று தெரிகிறது.

தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பிரதிஷ்டை செய்யப் பெற்ற கோவிந்தராசப் பெருமாளை முறைப்படி பூசை செய்து வந்தவர்கள் தில்லை மூவாயிரர் எனச் சிறப்பித்துரைக்கப்படும் தில்லைவாழந்தணர்களேயாவர். இங்குள்ள பெருமாள் திருவுருவம் நடராசர்கோயிலைச் சார்ந்த சுற்றுக்கோயில் தெய்வம் (பரிவாரதெய்வம்) என்ற அளவிலேயே தில்லைவாழந்தணர்களால் முறைப்படி பூசனை செய்யப்பெற்று வந்தது. இவ்வாறே காஞ்சிநகரில் ஏகாம்பரநாதர் திருக்கோயிவில் பரிவார தெய்வமாக எழுந்தருளியுள்ள பெருமாளை "நிலாத்திங்கள் துண்டத்தான்” எனத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருப்பதும் இங்கு எழுந்தருளிய பெருமாளைப் பூசனை செய்யும் உரிமையினை இக்கோயிற் பூசை முறையினராகிய ஆதி சைவக் குருக்கள் இன்றளவும் மேற்கொண்டிருப்பதும் இங்கு நினைத்தற்குரியதாகும். தில்லைக் கோவிந்தராசப்பெருமாள் பிரதிஷ்டை பற்றியும் ஆதியிலிருந்த பூசை முறைபற்றியும் ஆராய்ச்சியறிஞர் மு. இராகவையங்கார் அவர்கள் 'திருச்சித்திரகூடம்' என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையில் பின் வருமாறு கூறியுள்ளார்:

திருமங்கை மன்னன்

"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னன் பல்லவர்கோன் பணிந்த
-- தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3-2-3)

என்று பாடுகின்றார். இதனால் பல்லவ வேந்தனொருவனால் ஆதியில் அபிமானிக்கப்பட்டது இத்திருமால்கோயில் என்பது தெரியவரும்.

"பல்லவ மல்லையர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணகரம்",
"நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகரம்" (பெ.தி' 5-19-7) கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்”

(6, 5, 5.9)

எனப் பண்டையரசர்கள் திருப்பணிசெய்து வணங்கிய தலங்களை இவ்வாறே ஆழ்வார்கள் பாடியிருத்தல் காணலாம்.

'பணிந்த கோயில்' முதலியன, பணிசெய்து, பிரதிஷ்டித்த கோயில் என்ற பொருளில் முன்பு வழங்கியவை என்பது; மேற் காட்டிய ஆழ்வார்கள் வாக்குகளினின்றும் அறியப்படும்.

பல்லவர்கோனால் பணிசெய்து வழிபடப்பட்டது இத்திருச் சித்திரகூடம் என்று கருதுதல் பொருந்தும். இங்கனம் பணிந்த பல்லவனாகத் திருமங்கையாழ்வாராற் புகழப்பட்டவன் அவர் காலத்தே பரம வைஷ்ணவனாக விளங்கிய இரண்டாம் நந்தி வர்மனாகச் சொல்லலாம்.

இச் சித்திரகூடத் திருமாலை முற்காலத்தில் முறைப்படி ஆராதித்து வந்தவர்கள் தில்லை மூவாயிரவரேயாவர்.

"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
--தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்"

(பெ.தி. 3.2-8)

"தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்"

(குல. தி.10,2)
என்ற ஆழ்வார்கள் வாக்குக்களால் இது தெரியவருகின்றது. இவற்றால் சிற்றம்பலமான சிவாலய வழிபாட்டையும், தெற்றியம்பலமான சித்திரகூட வழிபாட்டையும், முறைப்படி புரித்து வந்தவர்கள் தில்லை மூவாயிரவர் என்பது விளக்கமாம்" (சென்னைப் பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III {1938-39) பகுதி 1)

எனச் சிறந்த ஆராய்ச்சியாளரும் ஸ்ரீவைஷ்ணவருமான ராவ்சாகேப் மு. இராகவையங்காரவர்கள் காய்த்லுவத்தலகற்றி நடு நின்று கூறிய ஆய்வு முடிவுகள் அறிஞர்களது பாராட்டுக்கு உரியனவாகும்.

தில்லைப் பெருங் கோயிலில் இடைக்காலத்தில் நந்திவர்ம பல்லவனால் பிரதிட்டை செய்யப்பெற்ற கோவிந்தராசப் பெருமாளுக்குச் சைவசமயத்தவராகிய தில்லைமூவாயிரவர் பூசை செய்து வருவதனைக் கண்டு மனம் பொறுக்காத பிற்கால வீர வைஷ்ணவர்களிற் சிலர். சிறுகச் சிறுகத் தில்லைத் திருச்சிற்றம்பலக் கோயில் நடைமுறைகளுக்குத் தொல்லையுண்டாக்கி வந்தனர். அவர்களாற் செய்யப்பட்டுவரும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. அவற்றால் தில்லைச்சிற்றம்பலத் திருப்பணிகளும் நாட்பூசனைகளும் தடைப்படுவனவாயின. அதுகண்டு மனம், பொறாத இரண்டாங் குலோத்துங்க சோழன் இவ்வைணவர்கள் செய்யும் தொல்லைகளுக்கெல்லாம் ஒரு காரணமாக வுள்ளது கோவிந்தராசப்பெருமாள் மூர்த்தமேயென எண்ணி அதனைத் தில்லைப் பெருங்கோயிலினின்றும் அப்புறப்படுத்தினன் என்பதனை இவனுடைய அவைக்களப் புலவராகிய கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தாம்பாடிய உலாவிலும் தக்கயாகப்பரணியிலும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக்கோயிலினின்றும் திருமால் மூர்த்தத்தை அப்புறப்படுத்திய இச்செயலைப் பிற் காலத்தில் வைணவர்களால் எழுதப்பட்ட திவ்யசூரிசரிதம், கோயிலொழுகு முதலான நூல்கள் மிகைப்படுத்திக்கூறி இவ் வேந்தன் மீது அடாத பழிகளைச் சுமத்தியும், கிருமிகண்ட சோழன் என இவனை இழித்துக் கூறியும் உள்ளன. இந்நூல்களில் இவ்வேந்தனைக்குறித்துக் கூறப்படுவனவெல்லாம் வெறுங் கற்பனைக் கனதகளே; உண்மையாவன அல்ல என்பது வரலாற்றாசிரியர்கள் துணிபாகும். (பிற்காலச் சோழர் சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 95,96 பார்க்க).

இரண்டாங் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் தில்லைக் கோயிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கோவிந்தராசப்பெருமாள் திருவுருவத்தை இராமாநுசர் கீழைத் திருப்பதியிற் கொண்டு சேர்த்து அங்கே பிரதிட்டை செய்தார் என இராமாநுஜ திவ்ய சரிதை கூறுகிறது. இராமாநுசரால் பிரதிட்டை செய்யப்பட்ட திருவுருவம் இன்றும் அங்கேயுள்ளதென்பதும், இப்போது சிதம்பரம் கோயிலிலுள்ள கோவிந்தராசப் பெருமாள் திருவுருவம் விசயநகர அரசர் அச்சுதராயர் காலத்தில் புதிதாகப் பிரதிட்டை செய்யப்பட்டதென்பதும் வரதராஜ ஐயங்கார் பாடிய பாகவதபுராணத்தில் திருவரங்கப்படலத்திலுள்ள 63, 99 ஆம் செய்யுட்களால் நன்கு புலனாகும். எனவே இரண்டாங் குலோத்துங்கசோழன் ஆட்சிக்காலமாகிய கி.பி. பன்னிரண்டாம் நாற்றாண்டிற்கும் அச்சுதராயர் ஆட்சிக்காலமாகிய கி.பி.பதினாறாம் நுாற்றாண்டிற்கும் இடைப்பட்டகாலத்திலே சிதம்பரம் நடராசப்பெருமான் கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் மூர்த்தம் இல்லையென்று தெரிகிறது. கி.பி 1251 முதல் 1271 வரை ஆட்சிபுரிந்தவரும் சைவவைணவசமயங்கள் இரண்டினையும் ஒப்ப மதித்துப் போற்றியவரும் 'ஆமுத்தமால்யதா' என்னும் நூலை இயற்றி நாச்சியாராகிய ஆண்டாளைப் போற்றியவரும் ஸ்ரீவைஷ்ணவரும் ஆகிய விசயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர், கி.பி. 1516-இல் பொட்டனூரில் தாம் பெற்ற வெற்றிக்கு அடையாளமாகத் தில்லை நடராசப்பெருமான் திருக்கோயிலின் வடக்குக் கோபுரத்தைக்கட்டி முடித்துப் பொன்னம்பல வாணர்க்கு நிலம் வழங்கியுள்ளார் (தெ. இ. க தொகுதி VII எண் 149). இதனை யுற்றுநோக்குங்கால் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியில்லையென்பதும், தில்லைப் பெருங்கோயில் பொன்னம்பல நாதராகிய சிவபெருமானுக்கே சிறப்புடைய திருக்கோயில் என்னும் கருத்துடையவர் கிருஷ்ண தேவராயர் என்பதும் நன்கு விளங்கும்.

கிருஷ்ண தேவராயருக்குப் பின் கி.பி 1529-இல் பட்டத்துக்கு வந்த அச்சுததேவராயர் கி. பி 1539-இல் தில்லை நடராசர் கோயிலில் கோவிந்தராசப் பெருமானை மீண்டும் பிரதிஷ்டை செய்து வைகாநச சூத்திரத்தின்படி பூசைநடக்க 500 பொன் வருவாயுள்ள நான்கு கிராமங்களின் வரியை நீக்கிக் கொடுத்துள்ளார். இவர் பெருமாளை மீண்டும் பிரதிட்டை செய்த இடம் முற்காலத்தில் நந்திவர்மபல்லவன் பிரதிட்டை செய்திருந்த திண்ணையளவாகிய சிறிய இடமே என்பது இங்குக் கவனித்தற்குரியதாகும். ஆயினும் இங்கு எழுந்தருளுவித்த பெருமாளைப் பூசிக்க ஸ்ரீவைஷ்ணவர்களை நியமித்தமையால் பெருமாளை வழிபாடு செய்யும் உரிமையை அரசன் வழியாகப் பெற்ற அவ் வைணவர்கள் மெல்லமெல்லத் தங்களுக்குரியனவாக நடராசர் கோயிலிடங்களை, வலிதிற் கைப்பற்றிக்கொள்ள முயன்று வந்தார்கள். வேங்கடபதி தேவமகாராயர் ஆட்சியில் அவருடைய பிரதிநிதியாகச் செஞ்சியிலிருந்து ஆட்சிபுரிந்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயகன் என்னும் அதிகாரி வைணவர் முயற்சிக்கு உடந்தையாய்க் கி.பி. 1597-இல் நடராசர் கோயில் முதற் பிராகாரத்திலேயே கோவிந்தராசப் பெருமாளுக்குத் தனிக் கோயிலை அமைக்கத் தொடங்கினான். இந்நிலையில் தில்லைப் பெருங்கோயிலின் பூசையுரிமையைத் தொன்றுதொட்டுப் பெற்றுடையராகிய தில்லைவாழந்தணர்களும் நகரப் பொது மக்களும் நடராசப்பெருமானுக்கேயுரிய இக்கோயிலில் பெருமாளுக்கெனப் புதிதாகத் தனிக்கோயில் கட்டுதல் வேண்டாம் எனவும் இரண்டாம் பிராகாரத்தில் முன்னிருந்த இடத்திலேயே பெருமாளுக்குப் பூசை நிகழச் செய்தலே பொருத்தமாகும் எனவும் அவ்வதிகாரியை எவ்வளவோ முறை நயந்து கேட்டார்கள். கொண்டது விடாக் கொண்டம நாயக்கனாகிய அவ்வதிகாரி அவர்களது வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் கோவிந்த ராசர் சந்நிதியைப் பொன்னம்பலலாணர் சந்நிதிக்கு மிகவும் அருகிலேயே அமைக்கத் தொடங்கினான். அந்நிலையில் தில்லை வாழந்தணர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் அவ் வன் செயலைத் தடுத்து நிறுத்த உறுதி பூண்டனர்; தாங்கள் உயிரோடிருக்கும் வரை நடராசர் கோயிலின் உட்புறத்தில் கோவிந்தராசப் பெருமாள் கோயில் கட்டுதற்கு இணங்க மாட்டோம் என்று சொல்லி ஒருவர் பின் ஒருவராகக் கோபுரத்தின் மேலேறிக் கீழே வீழ்ந்து உயிர் விடுவாராயினர். இவ்வாறு இருபது பேர் வரை தற்கொலை செய்து கொண்ட துன்பக்காட்சியைத் தன் கண்களாற் கண்டும் மனமிரங்காத கொண்டம நாயக்கன் கோபுரத்தின் மேலேறித் தற்கொலை செய்ய முந்துபவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளும்படி உத்தரவிட்டான். அதன்படி தில்லை வாழந்தணர் இருவர் சுடப்பட்டு இறந்தனர். இத்துன்ப திலையைப் பொறுக்கலாற்றாது தில்லைவாழந்தணர் குடும்பத்தைச் சேர்ந்த அம்மையார் ஒருவர் தமது கழுத்தையறுத்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு அரசாங்க அதிகாரியொருவனது சமயப் பிடி வாதங்காரணமாகச் சிதம்பரம் கோயிலுக்குள்ளே இத்துன்பச் செயல்கள் நிகழ்ந்த நாளில் மேலை நாட்டிலிருந்து யாத்திரை காரணமாகத் தமிழ் நாட்டிற்குச் சுற்றுப்பயணஞ் செய்த பிமெண்டா (Jesevit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரிற் கண்டு வருந்தியதுடன். இக் கொடுஞ்செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார். இந்நிகழ்ச்சியை யுணரும் நல்லறிவுடையோர் எவரும் கண்ணீர் விட்டு வருந்துவர் என்பது திண்ணம்.

The Aravidu Dynasty by Father Heras (P. 553)

1. 'A notable instance of the struggle between the two sects is the lamentable event that took place at Chidambaram in 1597 A. D. While Krishnappa Nayaka of Jinji, himself a Staunch Vaishnava, was there Superintending the improvements which he had ordered at the temple of Govinda Raja within the great Saiva Temple. Father: N. Pimenta, who passed through Chidambaram at this time narrates in one of his letters that on this occasion a great controversy arose as to 'Whether it were lawful to place the signe of Perumal in the temple at Chidambaram. Some cefused, others by their legates importunatly urged and the Naiks of Gingee degreed to erect in the temple'. These last words of pimenta indicate that after the restoration of the idol to the temple by Rama Rayan it had again been removed and its shrine probably destroyed. In order to re-instal it with due honour, Krishnappa Nayaka ordered the old shrine to be repaired and even perhaps enlarged'

This was the cause of the whole trouble. "The priests of the Temple which were the Treasuries” Continues, pimenta (were) with standing, and threatening if it was done, to cast down themselves from the top. The Brahmanes of the temple Swore to do the like after they buried the former, which yet after better advice they performed not". But Krishanppa Nayaka was unmoved by any such threat. When the reconstruction of the shrine was carried on with out hesitation where upon the priests climbing one of the high Gopurams of the temple started to cast themselves down while the Nayak was in the temple. 'Aboat twenty bad perished in that precipitation on that day of our departure, whereat the Naichus angry, caused his gunners to shoot at the rest which killed two of them. A woman also was so hot in this Zealous quarrel taat she cut her own throat", Naturally Krishnappa Nayaka accomplished his purpose in spite of this opposition.

நந்திவர்மபல்லவன் திருமால் மூர்த்தத்தைத் தில்லைக் கோயிலில் பிரதிஷ்டை செய்த காலத்தில் அத்திருமேனி திண்ணையளவாக அமைத்த சிறிய இடத்திலே தான் வழிபடப் பெற்றது. பின் நானூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயர் பிரதிஷ்டை செய்ததும் அதே இடத்தில் தான். சமயவெறிபிடித்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் என்பான் கி.பி 1597-இல் முன்னிருந்த அத் தெற்றியம்பலத்தளவில் நில்லாது நடராசர்சந்நிதிமுகப்பிலுள்ள இடத்தையும் சேர்த்துக் கொண்டு, கோவிந்த ராசப் பெருமாளுக்குத் தனிக் கோயில் கட்டிவிட்டான். இந்த வம்புகளுக்கெல்லாம் காரணம் வைஷ்ணவத்தை எங்கும் பரப்ப வேண்டுமென்று முயன்ற விசயநகர அரசர்களும் அவர்களுக்குத் துணை நின்ற அவர்களுடைய குரு தாதாசாரியாரும் ஆவர் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்து காலஞ்சென்ற C.S.சீனிவாசாசாரியார் அவர்கள் மனம் வருந்தி எழுதியுள்ளார்கள்.

கிருஷ்ணப்ப நாயக்கனுக்குப் பின் விசயநகர மன்னனாகிய சீரங்கராயன்-III கி.பி. 1643-இல் தில்லைக்கோவிந்தராசர் சந்நிதியை மேலும் விரிவுபடுத்த எண்ணி முன்பு இல்லாத புண்டரீகவல்லித்தாயார் சந்நிதி முதலிய புதிய சந்நிதிகளையும் தில்லைக்கோயிலில் அமைத்தான். இவர்களுடைய மதவெறி காரணமாகத் தில்லை நடராசர் கோயிலிற் பழமையாக இருந்த சிலசந்நிதிகள் இடிக்கப்பட்டு மறைந்துபோயின. இவ்வாறு வைஷ்ணவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தில்லைக்கோயிலின் பெரும்பகுதியைத் தமக்கு உரிமையாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவாராயினர். அதனையுணர்ந்த தில்லைநகரச் சைவப் பெருமக்களும் தில்லைவாழந்தணர்களும் கொதித்தெழுந்து தில்லைக்கோயிலில் கோவிந்தராசப்பெருமாளுக்கு இனி இடமில்லையென்று கூறும் அளவுக்குப் பெருமாள் சந்நிதியையே அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவாராயினர். அந்நிலையில் கோவிந்தராசப் பெருமாள் பூசை முறையினைக் கண்காணிக்கும் உரிமையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் கி. பி. 1862-இல் தில்லைப் பெருங்கோயில் பூசை முறை உரிமையாளராகிய' தில்லைவாழந்தணர்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய இன்றியமையாமை உண்டாயிற்று. சிதம்பரம் கோவிந்தராசப் பெருமாள் பூசை முறையைக் கவனிக்கும் உரிமையடைய வைஷ்ணவர்கள் தில்லைவாழந்தணர்கட்கு எழுதிக் கொடுத்த உடன்படிக்கையில் தாங்கள் கோவிந்தராசப் பெருமாளுக்குச் செய்து வரும் நித்தியபூசைகளைத் தவிர வேறு பிரமோற்சவம் நடத்துவதில்லையெனவும், தில்லையில் நடராசப்பெருமானுக்குத் தொன்று தொட்டு நடைபெற்று வரும் நித்திய பூசைகளிலும் திருவிழாக்களிலும் தாம் தடையாக இருப்பதில்லையெனவும் ஒப்புக்கொண்டு உறுதி கூறியுள்ளார்கள். இவ்வுறுதியின் பேரில் கி. பி. 1867-இல் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. தில்லைப் பெருங்கோயிலில் சைவர் வைணவர் ஆகிய இருதிறத்தார்க்கும் ஏற்பட்ட உடன்பாடும் தில்லைவாழந்தணர்கள் பெற்றுள்ள நீதிமன்றத் தீர்ப்பும் காரணமாகத் தில்லைப் பெருங்கோயிலில் சைவரும் வைணவர்களும் அன்பினால் ஒன்றுகூடி நடராசர் கோவிந்தராசர் ஆகிய இருபெருந்தெய்வங்களையும் வழிபட்டு மகிழ்தற்குரிய அமைதியான சூழ்நிலை தொடர்ந்து நிலைபெற்றுள்ளது என்பதனை இத்திருக்கோயிலுக்கு வரும் அன்பர்கள் எல்லோரும் நன்குணர்வர். இத்தகைய அமைதிநிலையே என்றும் நின்று நிலவி இன்பம் அளிப்பதாகுக.