தும்பைப்பூ-நாவல்/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து

பதிப்புரை

எழுத்தாளர்களின் நன்மைக்காக எழுத்தாளர்களின் சொந்த முயற்சியால் எழுத்தாளர்களே நடத்தி வருவது தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். இதுவரை எண்பத்தெட்டுப் புத்தகங்கள் தமிழுறவு வரிசையில் வெளியாகியுள்ளன. இது இருபத்தோராவது புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு.

தமிழ் உறவு என்ற பெயரைப் பெற்ற இக்கூட்டுறவுச் சங்கத்தின் வெளியீடுகளைப் பல நிறுவனங்களும் தமிழ் மக்களும் ஆதரித்து நலம் செய்வதால் மேலும் மேலும் பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற ஊக்கம் எங்களுக்கு உண்டாகியிருக்கிறது. நல்ல புத்தகம், பயனுள்ள புத்தகம் என்று யாவரும் பாராட்டும் சிறப்பைத் தமிழுறவு நூல்கள் பெறவேண்டும் என்பது எங்கள் அவா. எழுத்தாளர்களின் சொந்தமுயற்சி, தரமான வெளியீடுகள் என்ற இரண்டையே எங்கள் தகுதியாகக் கொண்டு புத்தகம் வெளியிடுகிறோம். மக்களின் ஆதரவு மிகுதியாக ஆக எங்கள் முயற்சி விரிந்து பரந்து யாவருக்கும் நலந் தரும் என்பதில் ஐயமே இல்லை.

ஒரு பதிப்புக்கு இரண்டாயிரம் பிரதிகள் வெளியிட்டு அவற்றை ஓர் ஆண்டுக்குள் விற்றுவிட வேண்டும் என்பது எங்கள் அவா. இது நிறைவேற முடியாத ஒரு பேராசை அன்று. நூல் நிலையங்களும், பள்ளிக்கூடங்களும், பிற திறுவனங்களும் இந்த வெளியீடுகளை வாங்கி ஆதரித்தால் இந்த அவா எளிதில் நிறைவேறும். கூட்டுறவுத்துறையினரும் அரசாங்கமும் எங்களுக்கு மேலும் மிகுதியான ஆதரவைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

எங்கள் முயற்சியை ஆதரிக்கும் யாவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

சென்னை -5.   தமிழுறவாளர்
2-4-77