தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/11. உடற்பயிற்சிகள்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

11. உடற்பயிற்சிகள்


1. நிமிர்ந்து செய்யும் பயிற்சிகள் பயிற்சி முறைகள்

1) கால்கள் இரண்டையும் அகலமாக விரித்து வைத்து, உள்ளங்கைகள் தரையைப் பார்த்திருப்பது பொலு இரண்டையும் மார்புக்கு நேராக நீட்டியிருக்க வேண்டும்.

நன்றாக மூச்சையிழுத்து, உள்ளே அடக்கிக் கொள்ள வேண்டும் . தோள் பட்டை இருக்கும் அளவிலேயே, கைகளை இடது புறமாகக் கொண்டு வரவும். முகமும் திரும்பி இடது புறம் பார்ப்பது போல வரவும் . இடுப்புத் தசைகளும் மடிந்து திரும்ப வேண்டும்.

பிறகு, கைகளை முன்னிருந்த நிலைக்குக் கொண்டு வரவும்.

இப்பொழுது காற்றை வெளியே விட்டு விட்டு, மீண்டும் மூச்சிழுக்கவும். அடுத்து வலப்புறமாகத் திரும்புவதுடன் வலப்புறம் கொண்டு செல்லவும்.

குறிப்பு: கால்களை எக்காரணத்தை முன்னிட்டும் அசைக்கவோ நகர்த்தவோ கூடாது. அவசரமில்லாமல் ஆர அமர செய்யவும். இடுப்புத் தசைகள் நன்றாக மடிவது போல் இடுப்பை முறுக்கவும்.

(2) கால்களை அகலமாக விரித்து, கைகளைப் பக்கவாட்டில் விறைப்பாக நீட்டியிருக்க வேண்டும்.

நிறைய மூச்சினை இழுத்துக் கொள்ள வேண்டும்

முதலில் இடதுபுறம் திரும்ப வேண்டும். அதாவது வலதுகை மார்புக்கு முன்னே வரும் பொழுது, இடது கை முதுகுக்குப் பின்புறம் போக வேண்டும். முகமானது இடது கை தோளுக்கு நேர்க்கோட்டில் பார்ப்பது போல் திரும்பியிருக்க வேண்டும்.

பிறகு, முன் நிலைக்கு கைகளைப் பக்கவாட்டிற்கு கொண்டு வந்து அதன் பின்னரே மூச்சினை வெளியே விட வேண்டும். (25 தடவை)

குறிப்பு : கால்களை நகர்த்தவே கூடாது. இடுப்பு நன்றாக மடியும்படி, உடலைப் பக்கவாட்டில் திரும்ப வேண்டும்.

(3) கால்களை அகலமாக விரித்து வைத்துக் கொண்டிருந்தவாறு கைகள் இரண்டையும் தொடைகளின் பக்கவாட்டில் இருப்பது போல் தொங்க விட்டு ஒட்டிய நிலையில் நிற்க வேண்டும்.

இடது கை, இடது தொடையைத் தொட்டவாறே இருக்க வேண்டும். அப்பொழுது, வலது கையை தலைக்கு மேலே உயர்த்திக் கொண்டு வரவும். இடப்புற இடுப்பின் பக்கம் இப்பொழுது நன்கு வளைய வேண்டும். ஆனால் வலக்கையின் உள்ளங்கைப் பகுதி, தலைக்கு மேற்புறம் வந்து இடப்புறத்தைப் பார்ப்பது போல வளைந்து தரலாம். ஆனால் முழங்கை வளையக் கூடாது. கழுத்தையும் வளைக்கவும் கூடாது. நேராகப் பார்க்கும் நேர்க்கொண்ட பார்வையுடன் நிற்க வேண்டும்.

பிறகு முன் இருந்த நிலைக்கு வந்தவுடன் தான் மூச்சை வெளியே விட வேண்டும்.

அதேபோல், மூச்சை இழுத்துக் கொண்டு, மீண்டும் கைகளைத் தலைக்கு மேலே கொண்டு வரவும். (25 தடவை).

(4) இடுப்பின் இரு புறமும் இரு கைகளையும் ஊன்றியவாறு, கால்களைச் சேர்த்து வைத்து நிற்க வேண்டும்.

நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் இடப் பக்கம் வளைய வேண்டும். கால்களை நகர்த்தாமல், வளைக்காமல், இடுப்பின் பக்கவாட்டுத் தசைகள் மட்டும் மடிந்திருப்பது போல இடுப்பை வளைக்க வேண்டும்.

முன் நிலைபோல, மீண்டும் நிமிர்ந்து வர வேண்டும். நிமிர்ந்த பின்னரே மூச்சை வெளியே விட வேண்டும்.

அதேபோல், மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு வலப்புறமாக வளைக்க வேண்டும்.

நிமிர்ந்து நின்ற பிறகு நன்கு மூச்சை இழுத்துக் கொண்டு, பின்னால் வளைய வேண்டும். முடிந்தவரை பின்னால் வளைந்து சிறிது நேரம் கழித்து, நிமிர்ந்து நின்ற பிறகே மூச்சை வெளியே விட வேண்டும் (25 தடவை)

கால்கள் இரண்டையும் அகலமாக விரித்து நிற்க

வேண்டும். கைகள்இரண்டையும் உள்ளங்கை தொடையின் முன் பகுதியினைத் தொடுவது போல வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.

நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றை உள்ளே அழுத்தியபடி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கைகள் இரண்டையும் தலைக்கு மேல் விறைப்பாக நீட்டவும்.

கைகளை மீண்டும் தொடைப் பகுதிக்குக் கொண்டு வந்தவுடன்தான், மூச்சை வெளியே விட வேண்டும்.

2. குனிந்து செய்யும் பயிற்சிகள்

(6) கால்கள் இரண்டையும் நன்றாகச் சேர்த்து வைத்து நிற்க வேண்டும். கைகள் இரண்டும் தலைக்கு மேலே விறைப்பாக இருப்பது போல் நீட்டி வைத்திருக்க வேண்டும்.

நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, குனிந்து கால்களின் கட்டை விரல்களைத் தொடவும். நிமிர்ந்து நின்ற பிறகே மூச்சை விட வேண்டும்.

குறிப்பு: ஆரம்ப காலத்தில், வயிற்றுக் கனத்தாலும் பெருக்கத்தாலும், முதுகெலும்பில் நெகிழ்ச்சித் தன்மை இல்லாததாலும், குனிந்து முழங்காலைத் தொட, முடியாதவாறு இருக்கும்.

தொட முடியவில்லையே கட்டை விரல்களை என்று, சோர்ந்து போய்விடக்கூடாது. எவ்வளவு தூரம் குனிய முடியுமோ, அந்த அளவு குனிய முயல வேண்டும்.

இப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டு வந்தால், முதுகெலும்பினைக் கட்டியிருக்கும் தசைநார்களின் , இறுக்கம் தளர, முதுகை நமது விருப்பம்போல் வளைத்துக் கொள்கின்ற வலிமையும் திறமையும் உங்களுக்குக் கிடைத்து விடும்.

இனிவரும் 4 பயிற்சிகளுக்கும் இதுதான் தொடக்கப் பயிற்சி என்பதால் இதனை முயன்று முடிந்தவரை செய்யவும். முடியவில்லை என்ற மனந்தளரவோ இடையே பயிற்சியை விட்டுவிடவோ கூடாது. (20 தடவை)

இதில் நல்ல பயிற்சி வந்த பிறகு, வலது காலை எடுத்து, இடது கால்புறத்தில் சுண்டுவிரலின் அருகே வைத்து (குழலுதும் கண்ணன் கால் வைத்திருப்பது போல) நின்று, அந்தக் கால்களின் கட்டை விரல்களை மூச்சிழுத்துக் கொண்டு, தலைக்கு மேலே உயர்த்திய கைகளைக் கொண்டு வந்து, குனிந்து தொடவேண்டும்.

அதேபோல், இடது காலை எடுத்து வலது கால் புறத்தில் குறுக்காக வைத்தும், பயிற்சியைச் செய்யலாம். (20 தடவை)

(7) ஒரடி அகல இடைவெளி இருப்பது போல் கால்கள் இரண்டையும் விரித்து வைத்திருக்க வேண்டும்.

கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தி வைத்திருக்கவும். நன்றாக மூச்சை இழுத்துக்கொள்ளவும்.

இடது காலைத் தூக்கி ஒரடி முன்னே வைத்து, பிறகு குனிந்து இரு கைகளாலும் முன் வைத்த இடது காலைத் தொடவும்.

தொட்டதும் நிமிர்ந்து நிற்கவும். பிறகு மூச்சை விடவும்.

அடுத்து, நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, வலது காலையும் முன்னே வைத்துக் குனிந்து தொடவும்.

குறிப்பு : முழங்கால்களை வளைக்கவோ, கால்களை நகர்த்தவோ கூடாது. (20 தடவை)

(8) கால்களை அகலமாக விரித்து வைத்து, கைகள் இரண்டையும் மார்புக்கு முன்னே நீட்டியவாறு முதலில் நிற்க வேண்டும்.

நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும்.

மார்புக்கு முன்னே நீட்டியிருக்கும் கைகளை, காதோரமாக தலைக்கு மேலே கொண்டு சென்று, உயர்த்துகிற பொழுது எவ்வளவு தூரம் பின்னால் முதுகை வளைத்து வளைய முடியுமோ, அவ்வளவு தூரம் பின்னால் வளைந்து, அங்கிருந்து திரும்பவும் நிமிர்ந்து வந்து கீழே குனிந்து, இரு பாதங்களையும் இரண்டு கைகளாலும் தொடவேண்டும். அதற்குப் பிறகு, மார்புக்கு முன் கைகளை நீட்டியிருந்த முன் நிலைக்கு வந்த பிறகே, மூச்சை வெளியே விட வேண்டும்.

குறிப்பு : முன்னால் குனியும் போதும், பின்னால் வளையும் போதும் கால்களை நகர்த்தவோ, முழங்கால்களை வளைக்கவோ கூடாது. (20 தடவை)

(9) முடிந்த வரை கால்களை அகலமாக விரித்து வைத்தவாறு, கைகளைப் பக்கவாட்டில் நீட்டியிருப்பது போல் முதலில் நிற்க வேண்டும்.

நன்றாக மூச்சை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும்.

இடது பறமாகக் குனிந்து, இடது கையால் இடது காலின் சுண்டு விரல் பகுதியைத் தொடவும்.

தொட்டதும் நிமிர்ந்து நின்று, மூச்சை விட்டு விடவும்

பிறகு மூச்சை இழுத்துக் கொண்டு வலதுபுறம் வளைந்து, கையால் வலது காலைத் தொடவும்.

குறிப்பு: இடுப்பை நன்றாக வளைக்க வேண்டும். கால்களை நகர்த்தவோ, முழங்கால்களை வளைக்கவோ கூடாது. (20 தடவை)

(10) 9வது பயிற்சிக்கு நிற்பதுபோலவே கால்களை அகலமாக வைத்து கைகளைப் பக்கவாட்டில் விறைப்பாக நீட்டியிருக்க வேண்டும்.

நன்றாக மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளவும்.

பிறகு, குனிந்து, கால்களை மடக்காமல், வலது கையால் இடது கால் கட்டை விரலைத் தொடவும்.

தொட்ட பின்னர், நிமிர்ந்து நின்று மூச்சை விட வேண்டும்.

பின், மீண்டும் மூச்சை இழுத்துக் கொண்டு, இடது கையால் வலது கால் கட்டை விரலைத் தொடவேண்டும்.

இவ்வாறு மாறி மாறிச் செய்ய வேண்டும்.

குறிப்பு : இடுப்புப் பகுதிகளும், வயிற்றுப் பகுதியும் நன்றாக மடித்து கொள்வது போல வளைந்து பயிற்சியை செய்ய வேண்டும். (20 தடவை) 3. படுத்துச் செய்யும் பயிற்சிகள்

1. மல்லாந்து படுத்துக் கொள்ளவும்

கைகளை மடித்துத் தலையணை போல், தலைக்குப் பின்னால் வைத்துக் கொள்ளவும். (படத்தில் உள்ளபடி கைகளைத் தலைக்குப் பின் பக்கத்தில் நீட்டியிருக்கலாம். அல்லது உடலின் பக்கவாட்டில் வைத்திருக்கலாம்; அல்லது முன்னே சொல்லியிருப்பது போலும் வைத்துக் கொள்ளவும்.)

இப்பொழுது நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ள வேண்டும்.

கால்களை மட்டும் தூக்கித் தரையிலிருந்து உயர்த்தி 45° கோண அளவில் மேலே நிறுத்த வேண்டும்.

அங்கிருந்து கால்களை செங்குத்தாக உயர்த்தி நிறுத்த வேண்டும்.

மீண்டும் 45° கோண அளவில் இறக்கி, பிறகு தரையருகே கால்களைக் கொண்டு சென்று, தரையில் படாதவாறு சிறிது நேரம் வைத்திருக்க, மீண்டும் 45°, 90°என்று கால்களைச் சாய்வாகவும் செங்குத்தாகவும் நிறுத்தி கடைசியில் தரையில் கால்களை வைக்க வேண்டும்.

குறிப்பு: ஒரே மூச்சில் எத்தனை முறை ஏற்றி இறக்குகிறோம் என்பதில்தான் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி நிறைந்த பயனைத் தருகிறது.

எக்காரணத்தை முன்னிட்டும் தலையைத் துக்கவே கூடாது. வயிற்றுப் பகுதியில் அதிக அழுத்தம் இருக்கும். ஆனால் இடுப்புக்குக் கீழ் உள்ள தொடை, முழங்கால் கெண்டைக்கால் பகுதிகள் தான் அசைவு பெற வேண்டும்.

தேவையானால் ஒரு முறை ஏற்றி இறக்கி கீழே கால்களைக் கொண்டு வந்த பிறகு, மூச்சினை விட்டு விட்டு பிறகு மூச்சை இழுத்துக் கொள்ளலாம். (15 தடவை)

(12) மல்லாந்து படுத்துக் கொண்டு தலைக்கடியில் கைகளை மடித்து வைத்துக் கொள்ளவும். கால்களை விறைப்பாக நீட்டியிருக்க வேண்டும்.

நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ள வேண்டும்.

இடது காலை மட்டும் மேலே முடிந்தவரை தூக்கவும்; செங்குத்தாகத் தூக்க முடிந்தால் தூக்கலாம். இல்லையேல் முடிந்தவரை போதும்.

அதே சமயத்தில், வலது காலை தரையில் படாதவாறு சிறிது உயரே தூக்கியவாறு வைத்திருக்க வேண்டும்.

அடுத்து, வலது காலை செங்குத்தாக மேலே உயர்ததும்பொழுது, மேலே இருக்கும் இடது காலானது தரையை நோக்கித் தாழ வேண்டும். ஆனால் தரையினைத் தொடவே கூடாது.

இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி ஏற்றி இறக்க வேண்டும். தேவையானால் மூச்சினை விட்டு விட்டு இழுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரே மூச்சில் பல முறை இந்தப் பயிற்சியைச் செய்வது தான் நல்லதாகும். (20 தடவை)

(13) மல்லாந்து படுத்துக் கொண்டு கைகளைப் பக்கவாட்டில் (சிலுவை போல), விரித்து வைத்திருக்க வேண்டும். நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது, வலது காலைத் தூக்கிக் கொண்டு இடது கை விரல் பகுதியை நோக்கிச் சென்று தொட வேண்டும்.

பிறகு, முன்படுத்திருந்த நிலைக்கு வந்தவுடன் தான் மூச்சை வெளியே விட வேண்டும்.

அதன் பின்னர் மூச்சை இழுத்துக் கொண்டு, இடது காலால் வலது கைப் பகுதியைத் தொட வேண்டும். குறிப்பு: காலை மடக்காமல் விறைப்பாகவே நீட்டிக்கொண்டு கையைத் தொட வேண்டும். முடியவில்லை என்பதற்காக காலை நோக்கிக் கையை நகர்த்திக் கொண்டு வரக்கூடாது. இடுப்பை நன்றாக வளைத்துத் தான் காலை தூக்கித் தொட வேண்டும்.

இடுப்பின் பகுதிகள் வளை வேண்டும். தசைகள் அழுந்த வேண்டும் என்பது தான் பயிற்சியின் நோக்கம். ஆகவே கையைத் தொட முடியாவிட்டாலும் பரவாயில்லை. இடுப்பை வளைக்கவும் முடிந்தவரை முயற்சி செய்யவும். தொடர்ந்து செய்தால், பயிற்சி எளிதாக வந்து விடும் (20 தடவை)

(14) மல்லாந்து படுத்திருக்கவும்.

கைகளிரண்டையும் காதோடு சேர்ந்திருப்பது போல பின்புறமாக நீட்டியிருக்க வேண்டும்.

நன்றாக மூச்சை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது, படுத்திருந்த நிலையிலிருந்து வயிற்றை அழுத்தியவாறு, தம் பிடித்து எழுந்து நீட்டியுள்ள கைகளைக் கொண்டு வந்து முன்புறமாகக் குனிந்து, நீட்டியிருக்கும் கால்களின் கட்டை விரல்களைத் தொட வேண்டும்.

தொட்ட பிறகு அப்படியே பின்புறமாகச் சாய்ந்து மெதுவாக மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத்த பிறகு தான் அந்த மூச்சை வெளியே விட வேண்டும்.

குறிப்பு: எழுந்திருக்க முயலும் பொழுது, கால்களைத் தரைக்கு மேலே தூக்கக்கூடாது. கைகளைப் பின்புறமாக ஊன்றிக் கொள்ளக் கூடாது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எழுந்திருக்க முயலவும்.

முதன் முதலில் செய்யும் பொழுது கால்களைத் தூக்காமல் எழுந்திருக்க முடியாது. ஆகவே உதவிக்கு யாராவது ஒரு வரை வைத்து, கால்களை அழுத்திப் பிடித்துக் கொள்ளச் செய்து எழுந்திருக்க வேண்டும்.

அதேபோல, கட்டை விரல்களையும் அவ்வளவு எளிதாகத் தொட முடியாது. முழங்கால் தூரம் கூட கைகள் போகமாட்டா.

ஆகவே, முதலில் எழுந்திருக்கப் பழக வேண்டும்.

பயிற்சியில் பழக்கம் அதிகமாக ஆக, இந்தப் பயிற்சியை மிக எளிதாகச் செய்து முடிக்கலாம். (15 தடவை)

(15) கைகள் இரண்டும் உடலுக்குப் பக்கவாட்டில் இருப்பது போல வைத்துக் கொண்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.

கால்களை விறைப்பாக நீட்டியிருக்க வேண்டும்.

நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது, கால்களை அப்படியே மேலே தூக்கி, தலைக்குப் பின்புறமாகக் கொண்டு சென்று, தலைக்கு அப்பாலுள்ள தரைப் பகுதியைத் தொட வேண்டும்.

தொட்டு விட்டு, மீண்டும் மல்லாந்து படுத்த நிலைக்கு வந்த பின்னரே மூச்சினை விட வேண்டும்.

குறிப்பு: மிகவும் சிரமமான பயிற்சி இது. பல நாட்கள் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால்தான் வரும்.

அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ செய்தால், கழுத்து பாகம் சுளுக்கிக் கொள்ளும். முதுகுப்புறம் வலிக்கும். வேதனை அதிகரிக்கும். ஆகவே, பக்கத்தில் உதவிக்கு யாரையாவது வைத்துக் கொண்டு, மெதுவாக செய்து பழகவும்.

மேலே கூறியிருக்கும் பதினைந்து பயிற்சிகளையும் ஒழுங்கா உறுதியாகத் தொடர்ந்து, நம்பிக்கையுடன் நிதானமாக செய்பவர்களுக்கு, நிச்சயம் நல்ல எதிர்பார்த்த பலனையே கொடுக்கும்.

தொந்தி குறையுமா என்ற சந்தேகத்திற்கு இடமேயில்லாமல் தொந்தி குறையும், கரையும்.

இன்னும் பல பயிற்சிகள் இருந்தாலும் அவைகள் சிரமமானவை என்பதால் விட்டிருக்கிறோம்.

மேலே கூறிய பயிற்சிகள் அனைத்தும் எளிய பயிற்சிகள். செய்வதற்கு எளிமையானவைதான் என்றாலும், பயன் தருவதில் பேராற்றல் மிக்கவைகளாகும். மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிதில்லையா.

பயிற்சி செய்து கொண்டு வரும்பொழுது பலனை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அதற்கு சில வழகள் இதோ இருக்கின்றன. கவனமாகக் கண்டு கொள்ளவும்.

முதலில் தொந்தியின் சுற்றளவை அளந்து வைத்துக் கொள்ளுங்கள். பருத்த தொந்தியானது பல பாகங்களிலும் படைத்தும், பெருத்தும், தடித்தும் காணப்படுகிறதல்லவா?

பயிற்சி தொடர்ந்த, சில வாரங்களில் வயிற்றுப் பக்கங்களில் இருபுறமும் சிறு பள்ளம் விழுந்தாற்போல காணப்படும். அதுவே முதல் அறிகுறியாகும்.

பள்ளம் பெரிதாக ஆக, நடு வயிற்றின் பெரிய பரப்பில் வரிவரியாக மூன்று மடிப்புக்கள் தெரியவரும்.

அடுத்து மூன்றாவது நிலையாக அடிவயிற்றின் அளவு குறையத் தொடங்கி போட்டிருக்கும் கால் சட்டை இடுப்பில் பொருந்தாமல் கீழே சரியும்.

அப்புறம் வயிற்றின் சுற்றளவை அளந்து பாருங்கள். கரைந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியுமே!

மேற்கூறியவாறு தொந்தி கரைய குறையவேண்டு மானால், உணவு, உறக்கம், பழக்கம் முதலியவற்றினை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். பயிற்சிகளைத் தினம் குறைந்தது 10 நிமிடமாவது செய்து கொண்டு வர வேண்டும்.

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் தொந்தி அருகம். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் பெருகும். இன்பம் நிறையும்.

வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.


டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா 1937 - 2001

ஒரு பார்வை

  • “பல்கலைப் பேரறிஞர் - என்று படித்தவர்களால் பாராட்டப்பட்ட டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா M.A. M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI அவர்கள், உடலியல், விளையாட்டு, கதை, கவிதை, நாடகம் இலக்கிய ஆய்வுகள், ஆங்கிலம் - தமிழ் அகராதி, கலைச்சொல் அகராதி, இன்னும் பல்வேறு தலைப்புக்களில் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
  • இவர் எழுதிய சிறந்த நூல்களுக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். தமிழக அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.
  • உடல் காக்கும் கலையை உலக மக்களுக்கு உணர்த்தி உற்சாகம் ஊட்டுவதற்காக "விளையாட்டுக் களஞ்சியம்" என்னும் மாத இதழைத் தொடர்ந்து 25 ஆண்டுகளாக நடத்தினார்.
  • விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் - தமிழ் அகராதி விளையாட்டுத் துறையில் கலைச்சொல் அகராதி, போன்ற நூல்கள் இவரது விளையாட்டு இலக்கியப் பணிக்கு நல்

முத்திரைகளா விளையாட்டு ஆத்திச்சூடி சிந்தனைப் பந்தாட்டம் முதலிய நூல்கள் இவரது கவித்திறனை விளக்கும் நூல்கள்.

  • இசை, நடனம், மற்றும் இசைக்கருவிகளில் பயிற்சி தருவதற்காக "சஞ்சு கல்சுரல் அகாடமி" என்ற நிறுவனத்தை அமைத்து, அதன் தலைவராக இருந்து செயல்பட்டார்.
  • ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரியில் ஆய்வுத்துறைத் தலைவராகவும் , பேராசிரியராகவும் பணியாற்றிய அனுபவமானது. "திருக்குறள் புதிய உரை" எனும் நூலின் முழுமைக்கு, மேலும் செழுமை ஊட்டி இருக்கிறது.
  • திருமூலர் திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்குப் பிறகு, தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே, மகிமையை வளர்க்கும் பணியைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செய்து வந்தார். * எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையில் நம்பிக்கையுடைய இவர், எங்கும் முதல், எதிலும் முதல் என்பது போல பல அரிய காரியங்களை நிறைவேற்றினார்.
  • கல்லூரி மாணவராகத் திகழ்ந்தபோது சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்றவை நடத்திய ஒடுகளப் போட்டிகளில் வெற்றி வீரராகத் திகழ்ந்திருக்கிறார்.
  • தான் பெற்ற வெற்றியும், புகழும் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக"விளையாட்டுக் இலக்கியத் துறை" என்ற புதிய துறையை உருவாக்கினார்.
  • முதன் முதலாக விளையாட்டுத் துறை இலக்கிய நூலை 1964ம் ஆண்டில் எழுதி முடித்த இவர், சிலநூறு நூல்களைப் படைத்திருக்கிறார்.
  • விளையாட்டு இலக்கியத்திற்காக தான் வகித்து வந்த எல்லாப் பதவிகளையும் விட்டு விட்டு, முழுநேர எழுத்தாளராக வாழ்ந்து சாதித்துக்காட்டினார்.
  • முதன் முதலாக 1987 - ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்வதற்கென்று "விளையாட்டு இசைப்பாடல்கள்" என்ற ஒலி நாடாவை தயாரித்து வெளியிட்டார்.
  • முதன் முதலாக சென்னைத் தொலைக்காட்சியில் ஆரம்ப காலந்தொட்டும் மேலும் சன்டிவி, ராஜ்டிவி, விஜய் டிவி, முதலிய பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளையாட்டு மற்றும் உடல் நலத்தின் மேன்மையை, கடந்த நாற்பது ஆண்டுகளாக உலகுக்கு உணர்த்தினார்.
  • அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளாக, தேக நலத்தின் தேவைகளை நாடகம், கவிதை சொல்லோவியம் என பல்வேறு வகையில் தெளிவுபடுத்தினார்.
  • விளையாட்டுத் துறை பற்றிய கருத்துக்களை நாற்பது ஆண்டுகளாக, நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில், கட்டுரை, கவிதைகளாக படைத்து மகிழ்ந்தார்.
  • முதன்முதலாக "உடற்கல்வி மாமன்றம்" என்ற அமைப்பை 1996ம் ஆண்டு தொடங்கி, மாணவர்களுக்கு தேக நலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்ற தேர்வுப் போட்டிகளை நடத்தி, பல ஆயிரம் ரூபாயைப் பரிசாக வழங்கி பணியாற்றினார்.
  • தமிழக உடற்கல்வி ஆசிரியர்களைப் பாராட்டி விருதும் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.
  • வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள், வள்ளுவர் வணங்கிய கடவுள் முதலிய நூல்கள் இவரது தமிழ் இலக்கிய ஆய்வு உணர்வினை புலபபடுத்தும் நூல்கள்.
  • வள்ளுவர் தமது திருக்குறளில் உடல் ஒழுக்கம், உடல் நலம் - ஆன்மபலம் முதலியவற்றை வளர்க்கும் விதத்தை வலியுறுத்தி விளக்கியிருக்கிறார் என்பதை. திருக்குறள் புதிய உரை என்ற ஆய்வு நூலை முதன் முதலாக எழுதி தமிழ் நெஞ்சங்களை மகிழச் செய்தார்.

ஆர். ஆடம் சாக்ரட்டீஸ்

பதிப்பாளர்

(Upload an image to replace this placeholder.)