தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/பெயரியல்

விக்கிமூலம் இலிருந்து


எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. 1

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்


சொல்லின் ஆகும் என்மனார் புலவர். 2


தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்

இரு பாற்று என்ப பொருண்மை நிலையே. 3


சொல் எனப்படுப பெயரே வினை என்று

ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே. 4


இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்

அவற்று வழி மருங்கின் தோன்றும் என்ப. 5


அவற்றுள்,

பெயர் எனப்படுபவை தெரியும் காலை

உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்

ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்

அம் மூ உருபின தோன்றல் ஆறே. 6


இரு திணைப் பிரிந்த ஐம் பால் கிளவிக்கும்

உரியவை உரிய பெயர்வயினான. 7


அவ்வழி,

அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும்

அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்

அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்

யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்

யாவன் யாவள் யாவர் என்னும்

ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்

பால் அறி வந்த உயர்திணைப் பெயரே. 8


ஆண்மை அடுத்த மகன் என் கிளவியும்

பெண்மை அடுத்த மகள் என் கிளவியும்

பெண்மை அடுத்த இகர இறுதியும்

நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்

முறைமை சுட்டா மகனும் மகளும்

மாந்தர் மக்கள் என்னும் பெயரும்

ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும்

சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும்

அவை முதல் ஆகிய பெண்டு என் கிளவியும்

ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ

அப் பதினைந்தும் அவற்று ஓரன்ன. 9


எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்

எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்

பெண்மை அடுத்த மகன் என் கிளவியும்

அன்ன இயல என்மனார் புலவர். 10


நிலப் பெயர் குடிப் பெயர் குழுவின் பெயரே

வினைப் பெயர் உடைப் பெயர் பண்பு கொள் பெயரே

பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயரே

பல்லோர்க் குறித்த சினை நிலைப் பெயரே

பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயரே

கூடி வரு வழக்கின் ஆடு இயற் பெயரே

இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரொடு

அன்றி அனைத்தும் அவற்று இயல்பினவே. 11


அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

என்ன பெயரும் அத் திணையவ்வே. 12


அது இது உது என வரூஉம் பெயரும்

அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும்

அவை இவை உவை என வரூஉம் பெயரும்

அவை முதல் ஆகிய வகரப் பெயரும்

யாது யா யாவை என்னும் பெயரும்

ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்

பால் அறி வந்த அஃறிணைப் பெயரே. 13


பல்ல பல சில என்னும் பெயரும்

உள்ள இல்ல என்னும் பெயரும்

வினைப் பெயர்க் கிளவியும் பண்பு கொள் பெயரும்

இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்

ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட

அப் பால் ஒன்பதும் அவற்று ஓரன்ன. 14


கள்ளொடு சிவணும் அவ் இயற்பெயரே

கொள் வழி உடைய பல அறி சொற்கே. 15


அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

என்ன பெயரும் அத் திணையவ்வே. 16


தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்

ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. 17


இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்

திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்

நினையும் காலை தம்தம் மரபின்

வினையொடு அல்லது பால் தெரிபு இலவே. 18


நிக ழூஉ நின்ற பலர் வரை கிளவியின்

உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே

அன்ன மரபின் வினைவயினான. 19


இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயரே

முறைப்பெயர்க் கிளவி தாமே தானே

எல்லாம் நீயிர் நீ எனக் கிளந்து

சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு

அன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே. 20


அவற்றுள்,

நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்

நான்கு என மொழிமனார் சினைமுதற்பெயரே

முறைப்பெயர்க் கிளவி இரண்டு ஆகும்மே

ஏனைப் பெயரே தம்தம் மரபின. 21


அவைதாம்,

பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்

பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று

அந் நான்கு என்ப இயற்பெயர் நிலையே. 22


பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்

பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர் என்று

அந் நான்கு என்ப சினைப்பெயர் நிலையே. 23


பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே

ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரே

பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே

ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர் என்று

அந் நான்கு என்ப சினைமுதற்பெயரே. 24


பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று

ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே. 25


பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. 26


ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. 27


பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றே பலவே ஒருவர் என்னும்

என்று இப் பாற்கும் ஓரன்னவ்வே. 28


ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே. 29


தாம் என் கிளவி பன்மைக்கு உரித்தே. 30


தான் என் கிளவி ஒருமைக்கு உரித்தே. 31


எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி

பல்வழி நுதலிய நிலைத்து ஆகும்மே 32


தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது

உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை. 33


நீயிர் நீ என வரூஉம் கிளவி

பால் தெரிபு இலவே உடன் மொழிப் பொருள. 34


அவற்றுள்,

நீ என் கிளவி ஒருமைக்கு உரித்தே. 35


ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே. 36


ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி

இரு பாற்கும் உரித்தே தெரியும் காலை. 37


தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும். 38


இன்ன பெயரே இவை எனல் வேண்டின்

முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல். 39


மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி

மகடூஉ இயற்கை தொழில்வயினான. 40


ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே

ஆயிடன் அறிதல் செய்யுளுள்ளே. 41


இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்

இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா

நிலத்துவழி மருங்கின் தோன்றலான. 42


திணையொடு பழகிய பெயர் அலங்கடையே. 43