நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/4. என்.எஸ்.கிருஷ்ணனின் சபதம்

விக்கிமூலம் இலிருந்து

4. என்.எஸ்.கிருஷ்ணனின் சபதம்


கே.பி.கேசவன், காளி என். ரத்தினம் கூட ஜகந்நாதய்யர் கம்பெனியில்தான் இருந்தார்களா ?”

“இல்லை, அவங்க இருந்தது ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலே. அதிலேதான் பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ராமச்சந்திரன் கூட இருந்தாங்க. நானும் ஒரு சமயம் அங்கே இருந்தேன். அந்தக் கதையை அப்புறம் சொல்றேன்.”

“ஜகந்நாதய்யர் கம்பெனிக்கும் ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’ என்ற பெயர் உண்டா ?”

“கிடையாது; ஜகந்நாதய்யர் கம்பெனியின் முழுப் பெயர் ‘மதுரை ஶ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபா’ என்பது. ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் முழுப்பெயர் ‘மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி’ என்பது.”

“என்.எஸ்.கிருஷ்ணன் எந்தக் கம்பெனியிலே இருந்தார் ?”

“அவர் எங்க கம்பெனியிலிருந்து கொல்லத்திலிருந்த டி.கே.எஸ். கம்பெனிக்குச் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டார். போலீசார் கையில் விலங்கிட்டு அவரை அழைச்சிக்கிட்டு வந்தாங்க!”

“கையில் விலங்கா, எதற்கு ?" 'எல்லாம் எங்க அய்யர் செஞ்ச வேலைதான். யாராயிருந்தாலும் சொல்லிக் கொள்ளாமல் கம்பெனியை விட்டுப் போனா அவருக்குப் பிடிக்காது. உடனே ‘கம்பெனி நகையைத் திருடிக்கிட்டுப் போயிட்டான்’னு போலீசிலே புகார் எழுதிக் கொடுத்துடுவார். அதை வைச்சி அவங்க அந்த ஆசாமியைப் பிடிச்சிக் கையிலே விலங்கு போட்டு இழுத்துக்கிட்டு வந்துடுவாங்க.”

“பாவம், என்.எஸ்.கே.!”

“பாவமாவது ? அந்த விஷயத்தை அவர் அவ்வளவு சீரியஸா எடுத்துக்கல்லே; அதையும் காமெடியாவே எடுத்துக்கிட்டார். அந்த நாளிலே எடுத்ததுக்கெல்லாம் வண்டி ஏது, வசதி ஏது ? கொல்லத்திலிருந்து மதுரைக்கு அவரைக் கால் நடையாவே அழைச்சிக்கிட்டு வந்திருக்காங்க. அவரும் சளைக்காம அவுட்போஸ்ட்டுக்கு அவுட்போஸ்ட் கையில் விலங்கோடு நின்று, மலையாளத்திலும் தமிழிலுமா மாறி மாறித் தத்துவப் பாடல் பாடிக்கிட்டே வந்திருக்கார்!”

“முதலில் அவர் டி.கே.எஸ்.கம்பெனியில் இருந்ததாகவல்லவா கேள்வி ?”

“அது எங்கே இருந்தாரோ அது எனக்குத் தெரியாது; அவர் எங்க கம்பெனியிலேயிருந்து அங்கே போனது தான் எனக்குத் தெரியும்.”

“அய்யர் கம்பெனி நல்ல கம்பெனி என்கிறீர்களே, அதிலிருந்து அவர் ஏன் போக வேண்டும்?”

“வாழ்க்கையிலே வெறும் வசதி மட்டும் கெடைச்சாப் போதாது, பேரும் புகழும் கூடவே கெடைக்கணும்னு நினைப்பவர் அவர். அந்தப் பேரும் புகழும் எங்க கம்பெனியிலே அவருக்குக் கிடைக்க அப்போ வழியில்லே...”

“ஏன்?" "சாரங்கபாணி அண்ணனும் சம்பந்தம் அண்ணனும் அப்போ எங்க கம்பெனியிலே இருந்தாங்க. காமெடியிலே அந்த நாளிலே அவங்களை மிஞ்ச என்.எஸ்.கே.யால் மட்டுமில்லே, வேறே யாராலும் முடியல்லே. அதாலே டி.கே.எஸ். கம்பெனிக்கு அவர் போனார்.”

“சரி, அப்புறம் ?” “போலீசார் என்.எஸ்.கிருஷ்ணன்மேல் திருட்டுவழக்குப் போட்டாங்க. வேறே வழியில்லாம எல்லாரும் செய்யறாப்போல என்.எஸ்.கே.யும் அய்யர் கிட்டே சமாதானம் பேச வந்தார். ‘வந்தியா வழிக்கு ?ன்னு அய்யரும் வழக்கை வாபஸ் வாங்கிக்கிட்டு அவரை மறுபடியும் தன் கம்பெனியிலே சேர்த்துக்கிட்டார்.”

“கொஞ்சம் வசதியுள்ளவர்கள் நினைத்தால் சட்டம்கூட எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் என்பது வெள்ளைக்காரன் காலத்திலேயே இங்கு முடிவான விஷயம் போலிருக்கிறது ?”

“இங்கே மட்டும் இல்லே; உலகம் முழுதுமே அப்படித்தான். ஜனங்கவெறும் சீட்டுக் கட்டுத்தானே ? யார் எப்படி வேண்டுமானாலும் கலைத்துப் போட்டு ஆடலாம்”

“பிறகு?”.

“எங்க நட்பு எப்போதும்போல இருந்தது. ஓய்ந்த நேரத்திலே அவர் என்கிட்டே கார் ஓட்டக் கத்துக்குவார்; மெக்கானிசம் கத்துக்குவார். எலெக்ட்ரிஷன் வேலையையும் அவர் விடறதில்ல, அதையும் கத்துக்குவார். அந்தச் சமயத்திலேதான் அவர் என்கிட்டே ஒரு சபதம் போட்டார்...”

“அது என்ன சபதம் ?”

“அப்போ கன்னையா கம்பெனியிலே இருந்த கிட்டப்பா, தாமிரபரணி ஆத்துக்குக் குளிக்க வரப்போல்லாம் கார் எடுத்துக்கிட்டு வருவார்; நானும் கார் எடுத்துக்கிட்டு போவேன். என்னோடு என்.எஸ்.கே.யும் வருவார். அது ‘தள்ளு மாடல் வண்டி அடிக்கடி ‘என்னை ஏன் தள்ளலே ? தள்ளினாத்தான் ஆச்சு ன்னு கோவிச்சுக்கிட்டு நின்னுடும். நான் ஸ்டியரிங்கைப் பிடிச்சுக்குவேன்; என்.எஸ்.கே.தான் இறங்கி இறங்கி மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கத் ‘தள்ளுத் தள்ளு'ன்னு தள்ளுவார். வண்டி ஸ்டார்ட் ஆனதும் ஏறி உட்கார்ந்துக்கிட்டு, ‘டேய், ராதா! இன்னிக்கு நீ உன் வண்டியை என்னைத் தள்ள வைக்கிறே இல்லே? என்னிக்காவது ஒரு நாள் உன்னை நான் என் வண்டியைத் தள்ள வைக்கிறேன்,பார்ன்னு சொல்லுவார். இதை அவர் கடைசி வரையிலே மறக்கல்லே; அப்படியே ஞாபகம், வைச்சுக்கிட்டிருந்தார். ஒரு காருக்கு நாலு காரோடு வாழற காலம் வந்தது. அந்தக் காலத்திலே என்னைப் பார்க்கும் போதெல்லாம், ‘ஏண்டா ராதா, என் காரிலே ஒரு நாள் வாயேண்டா ‘ம்பார். ‘ஏன், வண்டி தள்ள வைக்கவா?ன்னு நான் மெல்ல நழுவிவிடுவேன். பாவம், கடைசி வரையிலே சபதம் நிறைவேறாமலேயே அவர் கண்ணை மூடிவிட்டார்.”

“அவ்வளவு சீக்கிரம் அவர் கண்ணை மூடிவிட்டதற்கு அளவுக்கு மீறி மது அருந்தியதும் ஒரு காரணம் என்று சிலர் சொல்கிறார்களே ?”

“இருக்கலாம்; எத்தனையோ காரணங்களில் அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்.”

“அதனால் தான் நீங்களும் இப்போது மது, மாமிசம், சிகரெட் ஆக மூன்றையுமே விட்டுத் தொலைத்துவிட்டீர்கள் போலிருக்கிறது ?”

“நான் விட்டதற்குக் காரணம் வேறே

“அது என்ன காரணம் ?”

“நான் ஒரு பெண்ணுக்குக் கொடுத்த வாக்குத்தான் அதற்குக் காரணம்.”

“யார் அந்தப் பெண் ?" "பிறந்தது மதுரை என்றாலும் சிலோனில் வளர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் கீதா. பி.ஏ. வரை படிச்சவ. பி.எல். படிக்கச் சென்னை வந்தப்போ நானும் அவளும் சந்திச்சோம்; ஒருவரையொருவர் விரும்பிப் பதிவுத் திருமணம் செஞ்சிக்கிட்டோம்...”.

“ஏற்கெனவே உங்கள் வாழ்க்கையில் பங்கு கொண்டுள்ள தனம் அதற்குச் சம்மதித்திருக்க வேண்டுமே ?”

“அந்த விஷயத்திலே அவ அந்த நாள் நளாயினி மாதிரி; ‘உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்’னு சொல்லிட்டா... நானும் கீதாவும் ஒரு சமயம் சிதம்பரத்திலே நடந்த திராவிடக் கழக மாநாட்டுக்குப் போயிருந்தப்போ, டிராவலர்ஸ் பங்களாவில் தங்கியிருந்தோம். ஒரு நாள் சாயந்திரம், ‘நான் கோயிலுக்குப் போய் நடராஜரைத் தரிசனம் செஞ்சிட்டு வரேன்'னா கீதா...”

‘பெரியார் கொள்கைக்கு....”

“அவருடைய கொள்கைப்படி பார்த்தா, ‘எனக்கு வேண்டியது அறிவாளிங்க இல்லே, முட்டாளுங்க தான்னு அவரே சொல்வாரு என்னைப் பொறுத்தவரையிலே, அதை நான் ஏத்துக்கிட்டிருக்கேன். எனக்காக என் வீட்டிலே உள்ளவங்களும் அதை ஏத்துக்கணுங்கிறது என்ன நியாயம் ?.. அது எனக்குப் பிடிக்கிறதுமில்லே, அவங்க அப்படி இருக்கணும்னு நான் எதிர்ப்பார்க்கிறதுமில்லே. அதாலே ‘போயிட்டு வா'ன்னு கீதாவை அனுப்பி வைச்சிட்டு, அவளுக்குத் தெரியாம அது வரையிலே மறைச்சி வைச்சிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்துத் திறந்து, கொஞ்சம் கொஞ்சமா சோடாவிலே கலந்து குடிச்சிக்கிட்டிருந்தேன். ‘ஆஷ் ட்ரே'யிலே புகைஞ்சிக்கிட்டிருந்த சிகரெட்டை எடுத்து ஓர் இழுப்பு இழுத்தேன். நல்ல கிக் அந்தக் கிக்கிலே சிகரெட் சாம்பலை ட்ரேயிலே தட்டி விடறதுக்குப் பதிலா விஸ்கி பாட்டில்லே தடடிவிட்டுக்கிட்டிருந்திருக்கேன் போலிருக்குது அந்தச் சமயம் பார்த்து கோயில்லேருந்து வந்த கீதா அதை பார்த்துட்டு, ‘மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா ? சாம்பலை எங்கே தட்டறதுன்னு கூடத் தெரியாம விஸ்கி பாட்டில்லே தட்டிக்கிட்டிருக்கீங்களே, அதையே உங்க சட்டை வேட்டியில் தட்டிக்கிட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்?... வேண்டாங்க, இந்த விபரீதம் ‘உன் மேல் ஆணையா இனிமே நான் இந்த மதுவைத் தொடற தில்லே'ன்னு எனக்கு நீங்க வாக்குக் கொடுக்கணும். இல்லேன்னா, நீங்க என்ன சேஞ்சாலும் சரி, எந்த வகையிலும் நான் உங்களோடு இனிமே ஒத்துழைக்க மாட்டேன்னு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை அப்படியே ‘பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டா. அதுக்கு மேலே நான் என்ன செய்ய முடியும்?... வெள்ளைக்காரன் காந்திகிட்டே சரண்டர் ஆன மாதிரி நானும் கீதாகிட்ட சரண்டர் ஆயிட்டேன். அதுதான் சமயம்னு அவ மிச்சம் மீதியிருந்த விஸ்கியை எடுத்து ஆஷ்ட்ரேயில் கொட்டிக் கலந்து அங்கிருந்த வாஷ் பேஸின்'லே ஊத்திட்டா. அதோடு நானும் அதுக்குக் ‘குட்பை போட்டுட்டேன். அன்னியிலேருந்து வெறும் தண்ணியைத் தவிர வேறே தண்ணியை நான் கண்ணாலும் பார்க்கிறதில்லே.”

“அட, பாவமே எல்லாரும் மதுவுக்கு வெல்கம் கொடுத்துக்கிட்டிருக்கிறப்போ, நீங்க ‘சென்ட் ஆப் கொடுத்துட்டீங்களே ?”

“யார் ‘வெல்கம் கொடுக்கிறாங்க ? இதுவரையிலே திருட்டுத்தனமா குடிச்சிக்கிட்டிருந்தவங்க இனிமே பகிரங்கமா குடிக்கலாமேங்கிறதுக்காக வெல்கம் கொடுக்கிறாங்க. எனக்குத்தான் அந்தக் கவலையே இல்லையே, நான் அதுக்கு சந்தோஷமா ‘சென்ட் ஆப் கொடுத்துட்டேன்!”

“அப்புறம் உங்க கம்பெனியிலே இருந்த என்.எஸ்.கே.என்னதான் ஆனார் ?" "சிலோன் டூருக்குப் போற வரையிலே பொறுமையாயிருந்தார். அங்கே போனதும் நாலு பேரைக் கூட சேர்த்துக்கிட்டு ஸ்டிரைக், அது இதுன்னு ஆரம்பிச்சி, கடைசியிலே கம்பெனியை விட்டே விலகிவிட்டார்!”

“அய்யர் அவரைச் சும்மா விட்டாரா ?”

“அது சிலோன் ஆச்சே, அங்கே அவரால் என்.எஸ்.கே. யை என்ன செய்ய முடியும்?”

“அடிப்பியா, உங்கப்பன் மவனே, சிங்கண்டான்னு மீசையை முறுக்கிக் காட்டிவிட்டார் போலிருக்கிறது!"