நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/தெய்வ பக்தி

விக்கிமூலம் இலிருந்து

10. தெய்வ பக்தி

அவருடைய தெய்வ பக்திக்கு ஒன்றென்ன, இரண்டு சான்றுகள். ஒரு தரம், அவருடைய பகைவர்கள் அவரை நெருங்கி விட்டார்கள். ஹஜ்ரத் அபூபக்கர் உடன் இருந்தார்கள். பகைவர்கள் அவர்களைத் தேடி அழிக்க 70 பேர் வந்தார்கள். 'ஏதோ இன்று நடக்கும்' என்று நாயகம் அவர்களும், அபூபக்கரும ஒரு குகைக்குள் இருந்தார்கள். பவருடைய காலடிச் சத்தம் மிக நெருக்கமாகக் கேட்கிறது. அப்பொழுது ஹஜ்ரத் அபூபக்கர், நாயகம் அவர்களை நோக்கி. "ஹஜ்ரத், 70 பேர் வருகிறார்களே! நாம் இரண்டு பேர்தானே இருக்கிறோம்?" என்றார். நீங்களானால் என்ன சொல்வீர்கள்? இரண்டு பேர் என்றுதானே? நாம்தான் என்ன சொல்லுவோம்? நாம் சொல்லாததை அவர்கள் சொன்னார்கள். உடனே அவர்கள் "நாம் இருவர் அல்லர், மூவர்" என்றார்கள். ஹஜ்ரத் அபூபக்கர் யாரோ கூட இருக்கிறார்கள் என்று குகையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அதைக் கண்டு நாயகம் அவர்கள். "ஆண்டவன் ஒருவன் நம்மோடு இருக்கிறான். அவனையும் சேர்த்து நாம் மூவர்" என்றார்கள். இது அவர்களின் தெய்வ பக்திக்கு ஒரு சான்று. இறுதியில் அவர்கள் கூறியவாறே நடந்தது. பகைவர்கள் வந்து குகையின் வாயிலைப் பார்த்தபோது, வாயில் முழுவதும் சிலந்தியின் நூல் வலையைப் போலக் காணப்பட்டது, அவர்கள் அதில் ஆட்கள் நுழையவில்லை என எண்ணித் திரும்பி விட்டார்கள்.

இரண்டாவது நிகழ்ச்சி இன்னும் கொஞ்சம் கடுமையானது. யூதன் ஒருவன் தன் வாளை எடுத்துக் கொண்டு இவர்களை வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக வெட்ட நெடுநாளாகக் காத்திருந்தான். அவனுக்கு வாய்ப்பு வரவில்லை. பல நாள் தேடிக் கொண்டிருந்தான். அப்போதும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. பலர் கூட இருப்பதால் தனித்துச் சந்திக்க முடியவில்லை. ஒரு நாள் அவன் சாலையில் வரும் பொழுது, நாயகம் அவர்கள் ஒரு மரத்தடியில் களைப்பைத் தீர்த்துக் கொள்ளப் படுத்திருந்தார்கள். அப்படியே கண்ணயர்ந்து விட்டார்கள். இதைக் கண்டுவிட்டான் யூதன். எடுத்தான் வாளை, நீட்டினான் கழுத்தண்டை. யாரும் அங்கு தடுப்பாரும் இல்லை. அவரும் அங்கு விழிப்போடு இல்லை. நல்ல உறக்கம். வாளை ஓங்கி விட்டான், வெட்டிக்கொல்வதற்கு! ஒரே வினாடிதான். உள்ளத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு, "ஓய் முகமதுவே! உன்னை யார் இப்போது காப்பாற்றப் போகிறார்கள்?" என்று உரக்கக் கூறி வாளை ஓங்கினான். உடனே நாயகம் அவர்கள் விழித்ததும், அவனையும் அவனது வாளையும் கண்டு ஆச்சரியப்பட்டு, "அல்லாஹ்!" என்று கையை நீட்டிக் தேக்கினார்கள். அவன் குழம்பி "உன்னை யார் காப்பாற்றப் போகிறார்கள்?" என்று கேட்ட கேள்விக்கு, "அல்லாஹ் காப்பாற்றப் போகிறார்" என்ற விடை வந்ததாக எண்ணினான். கை நழுவி, வாள் கீழே விழுந்து விட்டது. நாயகம் அவர்கள் அந்த வாளைக் கையில் எடுத்து கொண்டு, "இப்பொழுது உன்னை யார் காப்பாற்றப் போகிறார்கள்?" என்றார். அதற்கு அவன் "ஹஜ்ரத்! நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்" என்றான். அதற்கு நாயகம் அவர்கள், "அல்ல; உன்னையும் என்னையும் காப்பாற்றியவன் ஆண்டவனே!" எனக் கூறிச் சென்று விட்டார். இது அவர்களது தெய்வ பக்திக்கு மற்றொரு சான்று. தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் என்பது ஒரு நீதி. தன்னைக் கொல்ல வந்த மனிதனையும், கொல்லாமல் விட்டது நாயகம் அவர்களின் நீதி. என்னே, நாயகம் அவர்களின் நீதியும், தெய்வ பக்தியும்!