உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/241

விக்கிமூலம் இலிருந்து

241. எல்லை போகிய பொழுது!

பாடியவர் : மதுரைப் பெருமருதனார்.
திணை : பாலை.
துறை : தலைமகள் வன்பொறை எதிரழிந்தது.

[(து.வி.) தலைமகனின் பிரிவினாலே துயரமுற்று வருந்தி நலனழிந்தாள் தலைவி. அவளைத் தேற்றக் கருதிய தோழி, 'நீ வலிதிற் பொறுத்திருப்பாய்; அவர் விரைய வருவார்' எனக் கூறுகின்றாள். அவளுக்குத் தலைமகள் தன் நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


உள்ளார் கொல்லோ தோழி கொடுஞ்சிறை
புள்ளடி பொறித்த வரியுடைத் தலைய
நீரழி மருங்கின் ஈரயிர் தோன்ற
வளரா வாடை உளர்புநனி தீண்டலின்
வேழ வெண்பூ விரிவன பலவுடன் 5
வேந்துவீசு கவரியின் பூம்புதல் அணிய
மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்திமைப் பதுபோல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல்லுறப்
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப் 10
பல்லிதழ் உண்கண் கலுழ
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே.

தெளிவுரை : தோழி! நீர் வற்றிய இடங்கள்தோறும், வளைந்த சிறையையுடையவான பறவைகளின் உள்ளங்காற் சுவடுகள் படிந்து வரிகளை மேலே கொண்டுள்ள இடங்களாகத் தோன்றும். அத்தடங்களின் மேலாகக் குளிர்ந்த நுண்மணல் படிந்து தோன்றுமாறு மெல்லென வாடைக்காற்று வீசியபடி இருக்கும். அதுதான் மிகுதியாகத் தீண்டுதலினாலே வேழக்கரும்பினது வெளிய பூக்கள் பலவும் ஒரு சேர இதழ்விரிந்து, வேந்தருக்கு வீசப்படுகின்ற கவரியைப் போலத் தோன்றியபடி, அழகிய புதல்தோறும் அழகு செய்த படி இருக்கும். மேகங்கள் கலைந்து போகின்றதான வானத்திடத்தே ஞாயிறானது மறைந்தும் வெளிப்பட்டும் மாறி மாறிக் காணப்பட்டு விழித்தும் மூடியும் இமைப்பதுபோல விளங்கும். இத்தகைய பகற்காலமானதும் கழிந்ததாய் இரவுப்பொழுதும் வந்து சேர்ந்தது. "இதன்கண், பனி பெய்தலைத் தொடங்கிய வருத்தம் மிகுகின்ற நடுயாமப் பொழுதிலே பல இதழ்களையுடைய பூவைப்போலும் மையுண்ட எம் கண்கள் நீரினைச் சொரியும். நிலைபேறில்லாத பொருள் மேற்கொண்ட உள்ளப் பிணிப்பினாலே நம்மைப் பிரிந்து சென்றோர் நம் காதலர். அவர்தாம் நம்மைப்பற்றி நினைக்கவே மாட்டாரோ?

சொற்பொருள் : கொடுஞ் சிறை – வளைந்த தன்மையுடைய சிறை; சிறை–இறக்கை. 'அளிய தாமே கொடுஞ் சிறைப் பறவை' என்பது குறுந்தொகை (92). வரி–வரிகள்; 'புள்ளடி பொறித்த வரி' என்றது, நீர் வற்றியபோது, மீன் பற்றுதற் பொருட்டுக் குருகுகள் நடந்து சென்ற சுவடு பதிந்த சேரானது, காய்ந்ததும் கோடு கோடாய்க் கோலமிட்டாற்போலத் தோன்றும் என்றதாம். தலை–இடம். ஈரயிர்–குளிர்ந்த நுண்மணல். உளர்பு–வீசியபடி. வேழம்–வேழக் கரும்பு. மழை–மேகம். பையுள்–வருத்தம். 'பொருட் பிணி' பொருள் மேற்கொண்ட உள்ளப் பிணிப்பு; பொருட் காதலாகிய நோய் எனினும் ஆம்.

விளக்கம் : உடனுறைந்து இன்புறுதற்குத் தலைவனும் தலைவியுமாகிய இருவரும் பெரிது விருப்புறுங்காலம் நடுக்கந்தரும் வாடைக்காலம். ஆதலினால், அதனைச் சிறப்பாக எடுத்துக் கூறினாள். 'வேழம்' கொறுக்கச்சி எனவும் வேழக்கரும்பு எனவும் சொல்லப்படும். நிலையில்லாத பொருளின் மேற்கொண்ட பிணிப்பாலே, நிலைபேறான இன்பத்தைக் கைவிட்டாராய் அகன்று போயினவர் அவர். இதனாலே அவர் அறநெறிப்பட ஒழுகலை மறந்தார்; நமக்கும் இனி அருள்வாரல்லர் என்று கூறி வாடி வருந்துகின்றாள் தலைவி.

மேகத்திரள்களுக்கு இடையே தோன்றியும் மறைந்தும் காணப்படுகின்ற ஞாயிற்றைப்போல, அவரும் நமக்கு அணி செய்தும் பிரிந்து நலியச்செய்தும் வருத்துகின்றவரேயல்லாமல், நிலையான இன்பத்திற்கு உரியவராக விளங்குவாரல்லர் எனக் கூறி நொந்ததாம்.

இதனைக் கேட்கின்றவன், மேலும் காலம் தாழ்க்காதானாய், அவளை மணந்து கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/241&oldid=1698406" இலிருந்து மீள்விக்கப்பட்டது