உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/287

விக்கிமூலம் இலிருந்து

287. கொடுங்கழிப் பாசடை நெய்தல் !

பரடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : காப்பு மிகுதிக்கண் ஆற்குளாகிய தலைமகள் சொல்லியது.

[(து.வி.) தலைவியின் களவு உறவை ஐயுற்றதனால் அவளை இல்லிற் சிறையிட்டுக் காத்து வந்தனர். அவள் நெஞ்சம் அதனாற் பெரிதும் நோகின்றது. அதனைத் தன் தோழிக்குக் கூறுவது போல அமைந்த செய்யுள் இது.]


விசும்புறழ் புரிசை வெம்ப முற்றிப்
பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்த
நல்லெயில் உடையோர் உடையம் என்னும்
பெருந்தகை மறவன் போலக் கொடுங்கழிப்
பாசடை நெய்தல் பனிநீர்ச் சேர்ப்பன் 5
நாம முதலை நடுங்குபகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை
அருகா தாகி யவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குற் புள்ளொலி கேட்டொறும்
தேர்மணித் தெள்ளிசை கொல்லென 10
ஊர்மடி கங்குலும் துயில்மறந் ததுவே!

தெளிவுரை : வானத்தைச் சென்று தடவுமாறுபோல உயரமாக அமைந்த கோட்டைப் புறமதிலை வெம்மையாக முற்றுகை இட்டனன். பசிய கண்களைக் கொண்ட யானைப் படையை உடைய பகைவேந்தனும் மதிற்புறத்தேயே தங்கினன். அதுகாலையும், 'வலியமைந்த எயிலைப் பகைவர் கைப்பற்றாதபடி காத்துநிற்கும் நல்ல மதில்காவல் உடையாரான வீரரை யாம் பெற்றிருக்கின்றேம்' என்று செறுக்கிக் கூறுவான், பெரிய தகைமையாளனாகிய மறவர் குடித்தலைவன். அவனைப் போலவே யானும் துணிவோடிருந்தேன்.

வளைந்த கழியிடத்துப் பசிய இலைகளையுடைய நெய்தல்கள் மிகுந்திருக்கும், குளிர்ந்த கடற்கரைப் பகுதியாளனாகியவன் நம் தலைவன். அவன், அச்சத்தைச் செய்கின்ற முதலைகளாகிய நடுக்கந்தரும் பகையினுக்கும் அஞ்சமாட்டான். நம்பாலுள்ள காதலின் மிகுதியாலே நம்மைத் தேடியும் வந்தான். அப்படி அவன் வந்தபொழுது, கெடாத வன்கண்மை உடையதான என் நெஞ்சமும் கலங்கிற்று. நள்ளென்னும் இரவுப்போதிலே துயில் கலைந்து ஆரவாரிக்கும் புள்ளொலியைக் கேட்கும் போதெல்லாம், அதுதான் தலைவனின் தேரிற் கட்டியுள்ள மணிகளின் தெளிந்த ஓசை போலும் என மயங்கிற்று. ஊராரெல்லாம் உறங்கியிருக்கும் இந்த இரவுப்போதிலும் என் கண்கள் துயில்கொள்ளலை மறந்துவிட்டன, காண்பாயாக!

கருத்து : 'இற்சிறை பெறினும் அவன்தான் விரைந்து வந்து நம்மை மணந்து காப்பான் என்றிருந்தேன்; அதுவும் இதுபோது இல்லாதாயிற்று' என்பதாம்.

சொற்பொருள் : புரிசை–கோட்டைப் புறமதில். வெம்ப முற்றி – வெம்மை தோன்ற முற்றி; இது முற்றியதன் கடுமையை உள்ளிருப்பார் உணரும் வகையில் முற்றியதாம். எயில் உடையோர் – எயில் காத்தலில் வன்மையுடையோரான படை மறவர். பெருந்தகை மறவன் – பெருந்தகையாளனாகிய மறவன்; பெருந்தகை இங்குப் பேராண்மை சுட்டியது. நாமம் – அச்சம். பெருமை – மிகுதி. அருகுதல் – கெடுதல்.

விளக்கம் : தான் காவலுட் பட்டமையை முற்றுகைப் பட்டிருந்த ஒரு கோட்டைக்கு உள்ளிருக்கும் தலைவனின் நிலையோடு உவமித்தாள். அவன்போல யானும் தலைவனின் ஆண்மையை நம்பினேன்; அவனோ விரைந்து வாராதானாய் நம்மை மறந்தனன்; நாம் புள்ளொலி கேட்கும்போதெல்லாம் அவன் தேர்மணி ஒலிபோலும் என்று மயங்கிமயங்கி இரவுத்துயிலும் இல்லாதேம் ஆயினேம் என்பதாம். புறத்தே பகைப்படை முற்றியிருப்பவும், அகமதிலோன் 'யான் எயிலுடையோரை உடையேன்' எனக் கவலையின்றித் திரிவதுபோல, தலைவி இற்செறிக்கப்பட்டுக் கடுங்காவலுட்பட்டிருக்கவும், நெறியின்கண் முதலைகள் இருப்பவும், தலைவன் தான் தலைவியின் கற்புமாண்பையும் காதலீடுபாட்டையும் கருதிய செருக்கினால், இரவுக்குறீயின்கண் வந்து ஒழுகுதலையே மேற்கொள்ளும் தன்மையனயினான் என்று நொந்ததும் ஆம். இதனைக் கேட்கும் தோழி தலைவியது நிலையைத் தலைவனுக்கு உணர்த்த, அவனும் தெளிவுபெற்று வரைந்துகொள்ளலிலே விரைவான் என்பது இதன் பயனாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/287&oldid=1698503" இலிருந்து மீள்விக்கப்பட்டது