உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/286

விக்கிமூலம் இலிருந்து

286. அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி !

பாடியவர் : துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளை தோழி வற்புறுத்தது.
[(து.வி.) அவன் ஒரு வணிகர் பெருமகன். அவன் பொருள் தேடுதல் குறித்துப் பிரிந்தான். பிரிவுப் பெருநோயால் அவன் மனைவி வாடித் தன் நலனழிந்தாள். அது கண்டு, அவளுடைய தோழி அவளைத் தேற்றுவாளாகக் கூறுவது இச்செய்யுள்.]


ஊசல் ஒண்குழை உடைவியத் தன்ன
அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி
கல்லென வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர் மன்ற செலீஇயரென் உயிரெனப்
புனையிழை நெநிழ விம்மி நொந்துநொந் 5
தினைதல் ஆன்றிசின் ஆயிழை நினையின்
நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய
நின்தோள் அணிபெற வரற்கும்
அன்றோ தோழியவர் சென்ற திறமே!

தெளிவுரை : ஆய்ந்து புனைந்த அணிகளை உடையாய்! தோழீ! "மலையிடத்தேயுள்ள குமிழமரத்தின் அழகிய இதழையுடைய மலரானது ஊசலைப்போல் அசைந்தாடும் மகளிரது ஒள்ளிய குண்டலம் போலத் தோன்றும். காற்று வீசும்போது, கல்லென்னும் ஒலியோடு அவை உதிர்ந்து உடைமரங்கள் மிக்க நெறியிடத்துக் கோலமுஞ் செய்யும். அத்தகைய பொலிவிழந்த குன்றத்திடத்தேயும் நம் காதலர் சென்றனர். ஆதலினாலே, என் உயிரும் இனிப் போய் ஒழிவதாக' என்று மிகக் கூறுகின்றனை. நீதான், நின்னைப் புனைந்திருக்கும் அணிகள் கழன்று வீழும்படியாக விம்மி அழுதலையும் செய்கின்றனை. மிகவும் மனம் நொந்தனையாய் வருந்துதலையும் செய்கின்றனை. சிறிது பொறுத்திருப்பாயாக. நினைந்து பார்ப்போமாயின், 'தம்மை நட்புக்கொண்டாரது ஆக்கத்தினை விரும்பியும், தம்மைச் சேர்ந்த நின் தோள்கள் அழகுபெறுமாறு கலன்களைக் கொணர்ந்து தருதற்குமாக அன்றோ, அவர் தான் நின்னைப் பிரிந்து சென்றதன் தன்மை உளதாகும்!"

சொற்பொருள் : ஒண் குழை – ஒளியுள்ள குண்டலம்; இதுதான் அசைந்தாடும் இயல்பினது ஆதலின், 'ஊசல் ஒண் குழை' என்றனர். உடை – உடைமரம் வியம் – வழி. குமிழ மலர் அசைந்தாடும் காதணிபோல விளங்கும் என்பது காணக் கூடியது. கல்லென – ஆரவாரத்தோடு. வரித்தல் – கோலஞ் செய்தல்; இது கற்பாறையிடத்தே மலர்கள் உதிர்தலால் உண்டாகும் தோற்றம். இனைதல் – ஏங்கிப் புலம் புதல். நட்டோர் – நட்புச்செய்த காதலர். ஆக்கம் – மேம்பாடு – வளம்; இது இல்லறம் செழுமையாக நடக்க வேண்டுவதற்குப் பொருளின்மிகுதி இன்றியமையாமை சுட்டியது. 'ஒட்டிய தோள்' என்றது, தழுவிப் பிரியாதிருக்கும் தோள் என, அவர்கள் காதலன்பை வியந்ததாம்.

விளக்கம் : காதில் அணிந்துள்ள குழையின் அசைவை ஊசலின் அசைவுக்குப் பிறரும் ஒப்பிட்டுள்ளனர். 'பூங்குழை யூசற் பொறைசால் காதின்' என்பது பொருநராற்றுப்படை (30). 'இழைமகள் பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம் குமிழ்' என்று நற்றிணை 274ஆவது செய்யுளுள்ளும் கூறப்படும். இதனைக் கருதி 'ஊசல் ஒண்குழைக் காசு வாய்த்தன்ன' எனப் பாடங் கொள்வாரும் உளர்.

மேற்கோள் : 'நட்டோராக்கம் வேண்டியும் ஒட்டிய நின் தோள் அணிபெறவாதற்கும் அன்றோ தோழி அவர் சென்றதிறமே' என்பதனை, 'மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய' என்னும் சூத்திர உரையிற் காட்டி, 'அணியென்பது பூணினை' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 28 உரை).

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/286&oldid=1698501" இலிருந்து மீள்விக்கப்பட்டது