நல்ல தோழிதான்/கொடுத்து வைக்காதவர்

விக்கிமூலம் இலிருந்து

கொடுத்து வைக்காதவர்



சிலரைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, 'அவனுக்கென்ன கொடுத்து வைத்தவன்!' என்று சொல்லுவார்கள், திருவாளர் நமசிவாயம் அவர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டிய அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் அல்லர்.

"பாவம், கொடுத்து வைக்காதவர்!" என்றுதான் அவரை அறிந்தவர்கள் கூறுவார்கள்.

திருவாளர் நமசிவாயம் தமாஷாகச் சொல்லுவார்...

‘நம்ம ஜாதக விசேஷம் அப்படி. ஐயாவாள் ஒரு திமிஷம் முந்திப் பிறந்திருந்தால் பெரிய சீமான் பேரனாக விளங்கியிருப்பேன். சொத்தும் சுகமும் சகல பாக்கியங்களும் பிறக்கும் போதே எனக்குக் கிடைத்திருக்கும். ஆனால் எங்க ஊரிலேயே அப்படிப்பட்டவன்.கொடுத்து வைத்தவன் ஒருவன் இருக்கிறான். நான் பிறந்த அதே நாளில், ஆனால் நான் பிறந்த நேரத்துக்கு இரண்டு நிமிஷம் முன்னாலே பிறந்தவன் அவன். அதுதான் தொலையட்டும். நான் இரண்டு நிமிடம் தாமதித்துப் பிறந்திருக்கக் கூடாதோ? அப்படிப் பிறந்திருந்தால், நான் ஒரு சினிமா நட்சத்திரம் ஆகியிருப்பேன். புகழும், பணமும், பகட்டான வாழ்வும், எனக்கு வந்து சேர்ந்திருக்கும். அதுக்கும் நான் கொடுத்து வைத்திருக்கவில்லை!"

இதைக் கூறிவிட்டு அவர் அவுட்டுச் சிரிப்பு உதிர்ப்பார். அது விரக்தியும் வேதனையும் கலந்த சிரிப்பா? வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையையும், மனித நாடகங்களையும், மனித நாடகங்களையும் வேடிக்கையாகக் கண்டு ரசிக்கக் கற்றுக் கொண்டவனின் நையாண்டிச் சிரிப்பா? அளவிட்டுச் சொல்ல முடியாதுதான்.

திருவாளர் நமசிவாயம் பிறப்பில்தான் கொடுத்து வைக்காதவர் ஆகிவிட்டார் என்றால், வளர்ப்பு நிலையிலும் அவர் பிரமாத வாய்ப்புகளைப் பெற்றுவிட வாழ்க்கை உதவவில்லை.

அவர் பிறந்த சில மாதங்களிலேயே அவருடைய தாய் மண்டையைப் போட்டுவிட்டாள். அவள் விதி அப்படி. அதற்கு நமசிவாயம் என்ன செய்ய முடியும்? ஆனால், உறவினரும் ஊராரும் குழந்தையைத்தான் பழித்தார்கள். ‘ஆக்கங்கெட்டது! பிறந்ததுமே பெத்தவளைத் தூக்கித் தின்னுட்டு நிக்குது’ என்றார்கள்.

அவர் தந்தை சுமாரான வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருந்தார். அவருடைய கஷ்டகாலமும், அவர் செய்த செலவுகளும், வாங்கிய கடன்களும் சேர்ந்து, அவருக்கு இருந்த சொத்துகளை இழக்கச் செய்தன. அதற்கும் பையனின் துரதிர்ஷ்டம்தான் காரணம் என்று பலரும் பேசினார்கள்.

இந்த விதமாக, பல சந்தர்ப்பங்களிலும், பலரும் சொல்லிச் சொல்லி, நமசிவாயத்துக்கே அவருடைய ‘அதிர்ஷ்டம் கெட்ட தனத்தில்’ ஒரு நம்பிக்கை படிந்து விட்டது. அவர் வாழ்வில் அவ்வப்போது குறுக்கிட்ட நிகழ்ச்சிகளும் அவருடைய எண்ணத்துக்கு வலு வேற்றின.

‘பணம் கட்டிப் பரீட்சை’ என்றும், ‘சர்க்கார் பரீட்சை’ என்றும் முன்னோர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டு வந்த எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சையில் நிச்சயம் பாஸ் செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை நமசிவாயத்துக்கு இருந்தது. எல்லாப் பாடங்களையும் 'ஒரு கை பார்த்து', கேள்விகளுக்கு உரிய பதில்களை 'வெளுத்துக் கட்டி ஜமாய்த்திருந்தார்' அவர். ஆனாலும் பரீட்சையில் தேறியவர்கள் பட்டியலில் அவர் எண் இல்லாமல் போய்விட்டது.

அதற்காக நமசிவாயம் சிறிதும் வருத்தப்படவில்லை, 'கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!' என்று ஒதுக்கிவிட்டார். இதிலும் தமாஷ் செய்வதில் உற்சாகம் கண்டார்.

'பரீட்சைகள் மூலம் யாருடைய திறமையையும் எடை போட்டுவிட முடியாது. பரீட்சையில் தேறியவர்கள் எல்லாரும் அற்புதமான புத்திசாலிகள் என்றும், பெயில் ஆகிறவர்கள் சுத்த மண்டுகங்கள் என்றும் எண்ணினால் அது அறியாமைதான். பரீட்சை விடைத் தாள்களைத் திருத்துகிற அண்ணாத்தைகள் எல்லாரும் சரியானபடி எல்லாப் பேப்பர்களையும் வாசித்து, நியாயமான மார்க்குகளைத் தருவதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை.

எட்டாவது வகுப்பு படித்த போது எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. ஒரு பரீட்சையில் நான் மிகச் சரியான விடைகள் எழுதியிருந்தேன். எப்பவும் நான் பிரைட் ஸ்டூடன்ட்தான். ஆனால் எனக்கு இருபத்து மூன்று மார்க்தான் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழில் மண்டுவான ஒரு பையன், தப்பும் தவறுமான விடைகள் எழுதியிருந்தவன், எழுபது மார்க் வாங்கியிருந்தான். பல மாணவர்களுக்கும் இது அதிசயமாகவே பட்டது. அதனால் சார்வாளிடமே இரண்டு பேப்பர்களையும் காட்டி, இது எப்படி, ஏன் என்று கேட்டார்கள். அவர் என் தாளிலுள்ள பதில்களைப் படித்தார். அடடே, ரொம்பவும் சரியாக இருக்குதே என்றார், பிறகு மறுபடி கவனித்து மார்க் கொடுத்தார். எனக்கு எண்பத்தைந்து மார்க் வந்தது இன்னொரு பையனுக்கு பதினெட்டு மார்க்தான் கிடைத்தது. அந்த சார் தனது பாலிசியைப் பெருமையாக விவரித்தார். நான் பேப்பர் திருத்துகிற விதமே தனி, விடைத்தாள்களின் கட்டை எடுப்பேன். முதலில் இருக்கிற தாளுக்கு பாஸ் மார்க் கொடுப்பேன். அடுத்தடுத்து பெயில் மார்க்தான். இப்படி மாறி மாறிக் கொடுப்பேன். நமசிவாயம் பேப்பர் பெயரில் மார்க் பெற வேண்டிய இடத்தில் இருந்திருக்குது. அதுதான் விஷயம் என்றார். இந்த லட்சணத்திலேதான் இருக்கும் பலபேருடைய பாலிசி!' என்று நமசிவாயம் கூறினார்.

"பார்க்கப் போனால் கடவுள் கூட அந்த வாத்தியார் மாதிரிதான் நடந்து வருகிறார். நல்லவங்க, திறமை சாலிகள், தகுதி உடையவங்க கஷ்டப்படுகிறார்கள். வாழ்க்கை வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதேயில்லை. ஆனால் ஏமாற்றுகிறவர்கள், அயோக்கியர்கள், மனசாட்சி இல்லாது செயல் புரிகிறவர்கள் சகல வசதிகளையும் பெற முடிகிறது. இதெல்லாம் கடவுள் சித்தம் என்றால், கடவுளும் கண்மூடித்தனமாக மக்களின் வாழ்க்கையை மதிப்பிட்டு மார்க் கொடுக்கிறார் என்று தானே சொல்ல வேண்டும்?" இப்படியும் பேசுவார் நமசிவாயம்.

பொதுவாக மனிதரின், உயிர்க்குல்த்தின், உலகத்தின் வளர்ச்சி வீழ்ச்சிகளையெல்லாம் பாதிக்கிற காலத்தை, கண்காணிக்கும் உபாத்தியாயர் என்று உருவகப்படுத்தினால், அந்த வாத்தியார் திருவாளர் நமசிவாயம் அவர்களின் வாழ்க்கைத் தாளில் தாறுமாறான மதிப்பெண்களையே சிதறி வைத்தார் என்றே சொல்ல வேண்டும்.

நமசிவாயத்துக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு முன்னரே அவருடைய தந்தை 'கண்ணை மூடிவிட்டார். நமசிவாயம் பிழைப்புக்காக என்னவோ வேலைகள் பார்த்து, எங்கெங்கோ திரிந்து, எப்படியோ ஒரு தினுசாக நசளோட்டி வந்தார். அவருடைய ஊர்ப் பெரியவர் ஒருவர், நமசிவாயம் பேரில் அனுதாபம் கொண்டோ, அல்லது பெண்ணைப் பெற்று வளர்த்து அவள் பெரியவளாகி நின்றதும் அவளை எவன் கையிலாவது பிடித்துக் கொடுத்துவிட்டுத் தங்கள் பொறுப்பைக் கழிக்கப் பெரிதும் முயன்றும் வெற்றி பெறாது தவித்த பெற்றோர் தந்த கமிஷன் தொகையைப் பெற்றுக் கொண்டதாலா, ல ட் சு மி என்கிற கன்னிகையை நமசிவாயத்துக்கு வாழ்க்கைத் துணைவியாக்கி உதவி புரிந்தார்.

இல்லற வாழ்வின் இனிமைகளைப் பூரணமாக அனுபவிக்கவும் நமசிவாயத்துக்குக் கொடுத்து வைக்கவில்லை. லட்சுமி கொடிய நோயினால் பீடிக்கப்பட்பட்டிருத்தாள். அந்த எலும்புருக்கி நோய்க்கே அவள் சீக்கிரம் பலியாகிப் போனாள்.

அதன் பிறகு நமசிவாயம் கல்யாணத்தை நாடவில்லை. குடும். வாழ்வுக்கு ஆசைப்படவுமில்லை. சமூக சேவை, பொதுநலப் பணி, கடும் உழைப்பு என்று பல வழிகளிலும் தன் கவனத்தையும் காலத்தையும் செலவிடலானார். அதில் அவருக்குப் பணம் கிடைக்கவில்லை. ஓரளவு பெயர் கிடைத்தது. அவருக்கு நிறைய அன்பர்களும் வியப்பர்களும் வந்து சேர்ந்தார்கள்.

"நமசிவாயம் அவர்களின் அன்பு உள்ளத்தை, ஆற்றலை, உழைப்பை, தன்னலமற்ற சேவையை, பொதுவாக அவரது பெருமையையும் மதிப்பையும் நம்மவர்கள் நன்றாக உணரவில்லை. ஊம். அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை! பாவம் அவர் மட்டும் அமெரிக்காவில் அல்லது ஐரோப்பிய நாடு எதிலாவது பிறந்திருந்தால் மிகவும் ஏற்றம் பெற்றிருப்பார்; மிகுந்த கெளரவ நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பார்" பார் என்று அவர்கள் சொல்வது வழக்கம். பிறப்பு, வாழ்வு இவற்றில் அவருக்கு சீரும் சிறப்பும் கொடுக்காத காலம் மரணத்திலாவது:அரிகாரம் செய்ததா? அதுவும் இல்லை.

முக்கியமான சமூகத் திருப்பணி ஒன்றின் காரணமாக திருவாளர் நமசிவாயம் தமது மாவட்டத்தை விடுத்து, பட்டணம் போகத் திட்டமிட்டார். இன்று போகலாம் நாளை போகலாம் என்று காலத்தை ஏலத்தில் விட்டு நாளோட்டிய பிறகு ஒருநாள் துணிந்து ரயிலேறினார்.

அங்கும் காலம் சதி செய்து விட்டது. நேற்றே கிளம்பியிருக்கணும். போக முடியல்லே. நாளைக்கு என்று இன்னும் ஒத்திப்போடுவது சரியல்ல, இன்றே போய்விட வேண்டியதுதான் என்று சொல்லி யாத்திரை கிளம்பினார் நமசிவாயம். அவர் தமாஸ் செய்து களித்த 'ஜாதக விசேஷம்' இப்பொழுது விஷ்டித்தனமாக விளையாடியது.

ஒருநாள் முன்னாலோ, ஒருநாள் தாமதித்தோ நேராது, இன்றைய தினம் பார்த்து கோர விபத்து ரயில் பாலத்தில் விளையாடி ரயில் செண்டிகளைக் கவிழ்த்து, பலரைச் சாகடித்தது. செத்தவர்களில் நமசிவாயமும் ஒருவர்.

அவர் உடல் நசுங்கிச் சிதைந்து, ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிப் போயிருந்தது.

"பாவம், நல்ல மனிதருக்கு நல்ல சாவு கொடுத்து வைக்கலியே" என்று அவரை அறிந்த அனைவரும் அனுதாபப்பட்டார்கள்.

திருவாளர் நமசிவாயம் வளர்ந்து, வாழ்த்து பணிபல புரிந்துவந்த நகரில் அவருக்காக அவர் நினைவை கெளரவிப்பதற்காக- அவருடைய நண்பர்கள் இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அநேக பிரசங்கிகள் பங்கு கொள்வதாக இருந்தது. அதற்கான விளம்பரங்கள் முன்னேற்பாடுகள் எல்லாம் ஆர்வத் தோடு செய்யப்பட்டன.

அன்று மாலைதான் இரங்கல் கூட்டம். அதற்கு முன்னதாக மெளன ஊர்வலம்.

அது பற்றியும், பேச்சாளர்கள் நிகழ்த்தக்கூடிய நமசிவாயப் புகழுரைகள் பற்றியும், அவரது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும் பத்திரிகைகளில் வெளியிடுவதற்கு சிலர் தீவிர முயற்சிகள் செய்தார்கள்.

மனிதர்கள் தீவிரமாகத் திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால், காலம் குறும்புத்தனமாக, அல்லது குரூரமாக, அதைச் சிதைத்து விடுகிறது.

நமசிவாயம் விஷயத்திலும் அப்படித்தான் ஆயிற்று.

அன்று காலையில், யாருமே எதிர்பார்த்திராத விதத்தில் பெரும் சோகம் உலகத்தைக் கவிந்து கொண்டது. உலகப் புகழ்பெற்ற, நாட்டின் பெருந்தலைவர் ஒருவர் திடீரென்று மரணம் அடைந்தார்.

அதனால் எல்லா நிகழ்ச்சிகளும் தேக்கமுற்றன. பெருந்தலைவர் இறந்த துக்கத்தைக் கொண்டாடும் முறையில், முன்னறிவிப்பு, இல்லாமலே, பல துறைகளிலும், சகலவிதமான ஏற்பாடுகளும் ரத்து செய்யப் பட்டன. பிறகு மூன்று நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துவிட்டது.

திருவாளர் நமசிவாயம் அவர்களின் நினைவுக்காகத் திட்டமிடப் பெற்ற நிகழ்ச்சி மட்டும் விதிவிலக்கு ஆகி விட இயலுமா என்ன? உலகப் பெரும் நிகழ்ச்சியின் அருகே அது எந்த மூலைக்கு?

"பாவம நமசிவாயம்! அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை!" என்றுதான் இரக்கப்பட மு டி ந் த து அவருடைய நண்பர்களால்.