நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீ D. V. கிருஷ்ணமாச்சார்லு

விக்கிமூலம் இலிருந்து

ஸ்ரீ D. V. கிருஷ்ணமாச்சார்லு

இவர் முழுப்பெயர் ஆந்திர நாடக பிதா மகன் தருமவரம் வெங்கட கிருஷ்ணமாச்சார்லு. இவர் பல்லாரியை சார்ந்தவர். இவருக்கு ஆந்திர தேசத்தார் ஆந்திர நாடக பிதா மகன் என்று பட்டப் பெயர் கொடுத்தது மிகவும் பொருத்தமானது. இவரால் தான் அதற்கு முன்பாக சென்சு நாடகம் வீதி நாட்கங்களாய் இருந்த தெலுங்கு நாடகமானது ஒழுங்கு செய்யப்பட்டு மேடை மீதில் தக்க திரைகளுடனும் நடிகர்கள் ஏற்ற உடையுடனும் ஒழுங்காக ஆக்கப்பட்டு முன்னேற்றமடைந்தது. இவர் பல்லாரியில் வக்கீலாக வேலைபார்த்து பொருள் சம்பாதித்தார். அதைக் கொண்டு பல்லாரி சரச வினோதினி சபா என்னும் ஓர் நாடக சபையை ஸ்தாபித்தார். அதில் அங்கத்தினராக சேர்ந்தவர்களெல்லாம் நல்ல கல்விமான்கள் ஊதியத்திற்காக நாடகமாடாது வினோதத்திற்காகவும் பாஷையை அபிவிருத்தி செய்வதற்காகவும் உழைத்தவர்கள். இவர் தெலுங்கில் மிகவும் பெயர் பெற்ற கல்விமான்; அன்றியும் சங்கீதமும் கற்றவர். இவர். தான் ஏற்படுத்திய சபைக்காக சுமார் 18 மேற்பட்ட தெலுங்கு நாடகங்களை எழுதி அச்சிட்டுள்ளார். அவைகளில் முக்கியமானவை சாவித்திரி சத்தியவான், சாரங்கதரா, சிரகாரி, பாதுகா பட்டாபிஷேகம், பிரஹல்லாதா, பாஞ்சாலி சுயம்வரம், பிரமேளா முதலியனவாம். இந்நூல்களையெல்லாம் தெலுங்கு பண்டிதர்கள் மிகவும் பாராட்டியிருக்கின்றனர். ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் தானே முக்கிய பாத்திரமாக நடித்துள்ளார். அந் நாடகங்களுக்கு பாட்டுக்கள், பத்யங்கள், தண்டகங்கள் முதலியவைகளை தானே எழுதியுள்ளார். அன்றியும் நாடகப் பாத்திரங்களை தக்கபடி நடிக்கும்படி, தானே கற்பிப்பார்.

இவரை நான் முதல் முதல் சந்தித்தது ஒரு வேடிக்கையான சந்தர்ப்பமாகும், சென்னையில் நாங்கள் ஆச்சாரப்பன் வீதி 54-வது நெம்பர் வீட்டில் வசித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் என் தகப்பருடைய சிநேகிதர் வேதாந்த முதலியார் என்பவர் ஒரு கிழவனாருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். அந்த கிழவனாருக்கு அப்போது ஐம்பது வயதிற்கு மேலிருக்கும். முகம் திரைத்து நரைத்திருந்தது. கன்னங்கள் குவிந்திருந்தன, கிழவர் சரிகை அங்கவஸ்திரங்களையும் சொக்காயையும் அணிந்திருந்தார். நரைத்த மயிரையுடைய தலைக்கு ஒரு விலையுயர்ந்த வெள்ளி சரிகை குல்லாயை அணிந்திருந்தார். வேதாந்த முதலியார் கேட்ட கேள்விக்கு தகப்பனார் மேல் மாடியிலிருக்கிறார் போங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டு இதென்ன வேஷக்காரன் போலிருக்கிறாரே! என்று கொஞ்சம் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்திற் கெல்லாம் என்னையும் என் தமையனாராகிய ஆறுமுக முதலியாரையும் மேல் மாடிக்கு அழைத்து “இவர் இன்று விக்டோரியா பப்ளிக் ஹாலில் தெலுங்கு நாடகம் ஒன்று நடத்த போகிறாராம் வருகிறீர்களா. என்னுடன்" என்று என் தகப்பனார் கேட்க, நாங்கள் இருவரும் குதூகலத்துடன் ஒப்புக் கொண்டோம். அன்றிரவு ஜனங்கள் நிறைந்திருந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு புறம் கண்கொட்டாது நடந்த நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன் நாடகம் மிகவும் நன்றாயிருந்தது. என் மனதில் ஒரு பெரும் கிளர்ச்சியையுண்டு பண்ணியது. இனி இதைப்பற்றிய மற்ற விஷயங்களை அறிய விரும்புவோர் தயவு செய்து எனது நாடக மேடை நினைவுகள் என்னும் நூலின் முதல் பாகத்தில் நான் விவரமாய் எழுதியிருப்பதைப் படித்துக் கொள்வார்களாக.

அன்றிரவே பல்லாரி சபையைப் போல் ஓர் நாடக சடையை தமிழில் ஏற்படுத்தி அதில் நான் நடிக்க வேண்டுமென்று பேரவாக் கொண்டேன். இது தான் எங்கள் சுகுண விலாச சபை ஏற்படுத்தப் பட்டதற்கு முக்கிய காரணம்.

இதன் பிறகு இரண்டு மூன்று வருடங்களுக்கொரு முறை கிருஷ்ணமாச்சார்லு அவர்கள் தான் ஏற்படுத்திய சபையை சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்து அநேக நாடகங்களை நடத்தியுள்ளார்.

இவர் வயோதிகராயிருந்தபோதிலும் குரல் மாத்திரம் கொஞ்சமும் தளர்ச்சியடையவில்லை. வசனங்களை மிகவும் கம்பீரமாய் பேசுவார். பாட்டுக்களை ஒரு கஷ்டமும் இல்லாதது போல் மிகவும் தெளிவாக சுலபமாகப் பாடுவார். அது முதல் நான் அவருக்குத் தெரிந்தவனாகி அவர் சென்னைக்கு வந்த போதெல்லாம் அவருடன் நாடக சம்பந்தமான அநேக விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறேன். அவர் சாரங்கதரா நாடகத்தைத் தெலுங்கில் எழுதியது போல் நானும் அக் கதையை தமிழில் எழுதி நடித்திருக்கிறேன் என்பதை அறிந்தவராய் நான் நடித்தபோது ஒருமுறை அதை பார்க்க வந்தார், "கதையை சம்பந்த முதலியார் கொஞ்சம் மாற்றியிருக்கிறார், அதை நான் ஒப்பவில்லை. ஆயினும் அவர் தான் மாற்றியபடி நடித்தது நன்றாயிருந்தது. சில பாகங்கள் முக்கியமாக புறா விடும் காட்சி நான் எழுதியதைவிட மிகவும் நன்றாயிருந்தது" என்று மறு நாள் எங்கள் இருவருக்கும் தெரிந்த ஒரு கோமுட்டி செட்டியாரிடம் கூறியதை அவர் எனக்குத் தெரிவித்தார்.

பிறகு நாங்களிருவரும் அன்யோன்ய சிநேகிதர்களான பிறகு ஒருமுறை என்னிடம் அவர் கூறியதை இங்கு எழுதுகிறேன், “மிஸ்டர் சம்பந்தம், நீங்கள் வக்கீலாக பேரெடுக்க வேண்டுமென்றிருந்தால் நாடகமாடுவதை விட்டு விட வேண்டும்" என்றார். ஆயினும் அவர் எனக்குக் கூறிய புத்தி மதியை என் மனதில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதோ வக்கீலாகவும் ஜட்ஜாகவும் பெயர் பெற்றேன். நாடகமாடுவதிலும் கொஞ்சம் பெயர் பெற்றேன் என்றே கூறவேண்டும்.