நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/G. C. V. ஸ்ரீனிவாசாச்சாரியார்

விக்கிமூலம் இலிருந்து

G. C. V. ஸ்ரீனிவாசாச்சாரியார்

இவர் 1891-வது ஆண்டுக்கு முன்பு சென்னையில் வெள்ளைக்காரர்கள் மெட்ராஸ் டிரமாடிக் சொசைடியை ஏற்படுத்தியதுபோல் இந்தியர்கள் ஒன்று ஏற்படுத்தவேண்டு மென்று மெட்ராஸ் ஓரியண்டல் டிராமடிக் சொசைடி ஒன்று ஏற்படுத்தினார். அதில் ஆதியில் சாகுந்தலம் முதலிய சம்ஸ்கிருத நாடகங்களையே நடத்தி வந்தார். அக் காலத்தில் வேறெங்கும் நாடகரங்கம் இல்லாதபடியால் சென்னை கோட்டைக்குள் ஆங்கிலேயர்கள் கட்டிய 'Bijou' என்னும் அரங்கத்தில் நடத்தினார். அரிச்சந்திரன் நாடகத்தையும் எழுதி அங்கு நடத்தினார். இவைகளை மிகவும் ஒழுங்காய் நடத்தியபடியால் பல ஆங்கிலேயர்கள் வந்து பார்ப்பதுண்டாம். 1891-வது வருஷத்திற்குப் பின் சுகுண விலாச சபை தமிழ் நாடகங்களை நடத்தியதைப் பார்த்து இவர் தன்னுடைய சபையில் தமிழ் நாடகம் ஒன்றை நடத்தத் தீர்மானித்து 'சந்திர ஹாசன்' என்னும் கதையை நாடகமாக எழுதச் சொல்லி அதை ஒரு முறை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடத்தினார். இந் நாடகங்களில் எல்லாம் தானே முக்கிய பாத்திரமாக நடித்து வந்தார். இவர் நடித்ததை சில முறைகள் நான் பார்த்திருக்கிறேன். ஆயினும் இவர் நடிப்பு எனக்கு அவ்வளவு திருப்திகர மாயில்லை, நான் பார்த்த சமயத்தில் இவருக்கு 55 வயதிற்கு மேல் ஆகவே முகத்தில் நரை திரை அதிகமாயிருந்தது. ஆயினும் மற்றவர்களுக்கு நடிப்புக் கலையை கற்பிப்பதில் இவர் கெட்டிக்காரர் நான் இவர் கடைசி முறை நடித்ததைப் பார்த்திருக்கிறேன். உத்தர ராம சரித்திரத்தில் ஸ்ரீ ராமராக நடித்தபோது, தலையில் கிரீடம் இல்லாமல் நடித்த சமயம் என்னுடன் பக்கத்தில் உட்கார்ந்து நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் ஆப்த நண்பர் வி, வி. ஸ்ரீனிவாச அய்யங்கார் “தலை மொட்டை ராமனாம் தள்ளாத கிழவனாம்” என்னும் முதல் அடியை எடுத்துக் கொடுத்து மற்ற மூன்று அடிகளையும் பூர்த்தி செய்யும்படி என்னைக் கேட்டார். நானும் அப்படியே செய்தேன். ஆயினும் அவ்விருத்தத்தை இங்கு எழுதுவதற்கில்லை. இவர் அதற்கப்புறம் பல வருடங்கள் உயிர் வாழ்ந்தார். இவரை எங்கள் சபையில் ஒரு கௌரவ அங்கத்தினராக இவர் நாடக கலைக்கு செய்த தொண்டின் பொருட்டு நியமித்து கௌரவப் படுத்தினோம்.