நீதிக் களஞ்சியம்/வாக்குண்டாம்

விக்கிமூலம் இலிருந்து


வாக்குண்டாம்
(ஔவையார்)

கடவுள் வாழ்த்து

வாக்கு உண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மா மலராள்
நோக்கு உண்டாம்; மேனி நுடங்காது;—பூக் கொண்டு
துப்பு ஆர் திரு மேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார்தமக்கு.


நூல்

நன்றி ஒருவற்குச் செய்தக்கால், 'அந் நன்றி
என்று தருங்கொல்!' என வேண்டா—நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே; அல்லாத
ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.2

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்;
இன்னா அளவில், இனியவும் இன்னாத;
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே,
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.3

அட்டாலும் பால் சுவையின் குன்றாது; அளவளாய்
நட்டாலும், நண்பு அல்லார் நண்பு அல்லர்;
கெட்டாலும், மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும், வெண்மை தரும்.4

அடுத்து முயன்றாலும், ஆகும் நாள் அன்றி,
எடுத்த கருமங்கள் ஆகா:—தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.5

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?—கல் தூண்
பிளந்து இறுவது அல்லால், பெரும் பாரம் தாங்கின்,
தளர்ந்து வளையுமோ தான்?6

நீர் அளவே ஆகுமாம்.நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம், நுண் அறிவு: மேலைத்
தவத்து அளவே ஆகுமாம், தான் பெற்ற செல்வம்;
குலத்து அளவே ஆகும், குணம்.7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே; நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.8

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே; தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.9

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்;—தொல் உலகில்
தல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு,
எல்லார்க்கும் பெய்யும், மழை.10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்,
விண்டு உமி போனால், முளையாதாம்;—கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது, அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.11

மடல் பெரிது, தாழை; மகிழ் இனிது கந்தம்;
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா;—கடல் பெரிது:
மண் நீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண் நீரும் ஆகிவிடும்.12

கவை ஆகி, கொம்பு ஆகி, காட்டகத்தே நிற்கும்
அவை அல்ல, நல்ல மரங்கள்; சவை நடுவே
நீட்டு ஓலை வாசியாநின்றான், குறிப்பு அறிய
மாட்டாதவன், நல் மரம்.13

கான மயில் ஆட, கண்டு இருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்து, தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே,
கல்லாதான் கற்ற கவி.14

வேங்கை வரிப் புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற்போல், பாங்கு அறியாப்
புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.15

'அடக்கம் உடையார் அறிவு இலர்' என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா;—மடைத் தலையில்
ஓடு மீன் ஓட உறு மீன் வரும் அளவும்,
வாடி இருக்குமாம், கொக்கு.16

அற்ற குளத்தின் அறு நீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக் குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார். உறவு.17

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என் ஆகும்?—சீரிய
பொன்னின் குடம் உடைந்தால், பொன் ஆகும்; என் ஆகும்,
மண்ணின் குடம் உடைந்தக்கால்?18

ஆழ அமுக்கி முகக்கினும், ஆழ் கடல் நீர்
நாழி முகவாது. நால் நாழி;—தோழி!—
நிதியும் கணவனும் நேர்படினும், தம்தம்
விதியின் பயனே பயன்.19

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா;
உடன் பிறந்தே சொல்லும் வியாதி; உடன் பிறவா
மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்;
அம் மருந்து போல்வாரும் உண்டு.20

இல்லாள் அகத்து இருக்க, இல்லாதது ஒன்று இல்லை;
இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின், இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ் இல்
புலி கிடந்த தூறு ஆய்விடும்.21

எழுதியவாறே காண்—இரங்கும் மட நெஞ்சே!—
கருதியவாறு ஆமோ,கருமம்? கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்.
முற்பவத்தில் செய்த வினை.22

கற் பிளவோடு ஒப்பர், கயவர்; கடுஞ் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வரே: வில் பிடித்து.
நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே,
சீர் ஒழுகு சான்றோர் சினம்.23

நல் தாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்,
கற்றாறைக் கற்றாரே காமுறுவர்; கற்பு இலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்: முதுகாட்டில்
காக்கை உகக்கும், பிணம்.24

நஞ்சு உடைமை தான் அறிந்து. நாகம் கரந்து உறையும்;
அஞ்சாப் புறம் கிடக்கும், நீர்ப் பாம்பு:—நெஞ்சில்
கரவு உடையார் தம்மைக் கரப்பர்; கரவார்,
கரவு இலா நெஞ்சத்தவர்.25

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்தூக்கின்,
மன்னனின் கற்றோன் சிறப்பு உடையன்; மன்னற்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை; கற்றோற்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.26

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்:
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்; மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்; கூற்றமே.
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.27

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்,
கந்தம் குறைபடாது ஆதலால், தம் தம்
தனம் சிறியர் ஆயினும், தார் வேந்தர் கெட்டால்,
மனம் சிறியர் ஆவரோ மற்று?28

மருவ இனிய சுற்றமும், வான் பொருளும், நல்ல
உருவும், உயர்குலமும், எல்லாம், திரு மடந்தை
ஆம் போது, அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது, அவளோடும் போம்.29

சாம்தனையும், தீயனவே செய்திடினும், தாம் அவரை
ஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர்;—மாந்தர்
குறைக்கும் தனையும், குளிர் நிழலைத் தந்து,
மறைக்கும் ஆம் கண்டீர் மரம்.30