நேரு தந்த பொம்மை/இங்கிலாந்தில் கல்வி

விக்கிமூலம் இலிருந்து

இங்கிலாந்தில் கல்வி

ஆற யிரம்மைல் தூரத்தில்
ஆங்கில மாணவர் தம்முடனே,
நேராய்ப் பழகிப் படித்திடவே
நேருவை அனுப்பிட வேண்டுமென.

தந்தை திட்டம் போட்டனரே.
தக்கதோர் நாளும் குறித்தனரே!
அந்தச் சமயம் ஜவஹருக்கே
ஆனது வயது பதினேந்தே!

அப்பா, அம்மா தங்கையுடன்
அருமை நேரு புறப்பட்டுக்
கப்பல் ஏறிச் சென்றனரே
களிப்புடன் லண்டன் சேர்ந்தனரே.

ஹாரோ பள்ளியில் இடம் பிடித்துக்
கல்வியைத் தொடர்ந்து கற்றனரே.
பேரார் வத்துடன் படித்தனரே.
பெற்றவர் நாடு திரும்பினரே.

வெள்ளை மாணவர் பலருக்கும்
விளையாட் டில்தான் கவனமெலாம்.
நல்லவை எல்லாம் அறிவதிலே
நாட்டம் கொண்டார் நம்ஜவஹர்.

செய்தித் தாள்கள் படித்திடுவார்;
தினமும் உலக நிலை அறிவார்:
ஐயம் ஏதும் அவர்க்கிருந்தால்
அடுத்த வரிடத்தில் கேட்டறிவார்.

அந்நியர் ஆட்சியை அகற்றிடவும்
அடக்கு முறைகளை எதிர்த்திடவும்,
இந்திய மக்கள் திரண்டெழுந்தார்
என்பதை அறிந்து மனமகிழ்ந்தார்.

பள்ளியில் ஒழுங்காய்ப் படித்ததனால்
பரிசாய்க் கிடைத்ததோர் புத்தகமே
உள்ளே திறந்து படித்ததுமே
ஊக்கமும் உணர்ச்சியும் பெற்றனரே.



அடிமை நாடாய் இத்தாலி
அல்லற் பட்ட நேரத்தில்
விடுதலை பெறவே உழைத்தவராம்
வீரத் தலைவன் கரிபால்டி

அவரது வாழ்க்கை வரலாறே
அந்தப் பரிசுப் புத்தகமாம்.
சுவைமிகும் அந்த நூல்படித்தே
சுதந்தர உணர்ச்சி பெற்றனராம்.