பக்கம்:அகமும் புறமும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 • அகமும் புறமும்

பெற்றுப் பல நாட்களாகிவிட்டன. உடல் இளைப்பைக் கண்ட அவளுடைய தாய், மகளைத் தெய்வம் தீண்டி விட்டதாகவே முடிவு செய்துவிட்டாள். தெய்வக் குற்றத்தைப் போக்கும் முறையில் வேலனை வைத்து வெறியாட முடிவு செய்துவிட்டாள்.

தலைவியின் பாடு மிகவும் இடைஞ்சலாகிவிட்டது. வேலன் வெறியாடிய பிறகும் அவளுக்கு உடல் தேறவில்லை என்றால், தாய் முதலானவர்கள் அவள்மேல் ஐயங்கொள்ளத் தலைபட்டுவிடுவார்கள். எனவே தீவிரமாக இதுபற்றி ஆய்ந்து இறுதியாகத் தோழியிடம் கூற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். இந்நிலையில் தோழியே ஐயப்பட்ட நிலையிலிருந்து உறுதிப்பாட்டுக்கு வந்து விட்டாள். தான் உறுதியாக நம்புகிற ஒன்றை எவ்வாறு தலைவியிடம் எடுத்துக் கூறுவது என்பதுதான் அவளுடைய தொல்லை. வேறு வழி இல்லாமல் குறிப்பாக ஒரு நாள் பேச்சைத் தொடங்கினாள்.இத்தகைய ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்த தலைவிக்கு இது மிகவும் பொருத்தமாகஅமைந்துவிட்டது. எனவே, தோழியிடம் தன் தலைவனைப் பற்றிக் கூறிவிட்டாள். மேலும், அவனை விரைவில் அடையாவிடில், தன்பாடு மிகவும் திண்டாட்டமாகிவிடும் என்பதையும் அறிவித்தாள். தோழி அவளை அஞ்சவேண்டா என்றும், விரைவில் அத்தலைவனையே மணந்து கொள்ளுமாறு செய்வதாகவும் உறுதிமொழி கூறினாள்.

இவ்வாறு தோழிக்கும் தலைவிக்கும் உரையாடல் நடைபெற்ற இரண்டொரு நாட்கள் கழிந்தபின் ஒரு நாள் தோழி தலைவனைக் கண்டாள். இவள்தான் தன் தலைவியின் உற்ற தோழி என்பதை அறிந்த தலைவன், தோழியிடம் பேச்சைத் தொடங்கினான். ஆனால், தோழி சிறிதும் விட்டுக் கொடாமற் பேசினாள்;தலைவி படும் வருத்தத்தைச் சிறிதும் வெளிக்காட்டாமலும், பிடி-