பக்கம்:அகமும் புறமும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 181

களும் பேசப்படுவதனாலும் நெய்தல் என்ற பெயர் வருதலும் உண்டு.

தலைவியின் உயர்ந்த பண்பாட்டை விளக்குவது இப்பாடல்;

புன்னை மரத் தங்கை

இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்தே இதில் காணப்பெறும் பொருள்கள் காண்பார்க்குப் புதுமையை நல்கின. புல் பூண்டில் தொடங்கி, மனிதனில் முடிவு பெறும் பல்வேறு உயிர்த் தொகுதிகள் இவ்வுலகில் உள்ளன. சிலவற்றை உயிருடைய பொருள்கள் என்று கண்டு கொள்ளக்கூட மேல்நாடுகட்குப் பத்தொன்பது நூற்றாண்டுகள் ஆயின. ‘செடி கொடிகட்கும் உயிர் உண்டு. அவைகளுக்கு உணர்ச்சி கூட உண்டு,’ என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டக்கூட இந்நாட்டு அறிவியல்துறை வல்லுனரான ஸர். ஜே.ஸி.போஸ் அவர்களாலேதான் இயன்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போஸ் அவர்கள் இவ்வுண்மையைப் புற உலகிற்கு இயந்திர சாதனத்தின் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார் என்பது போற்றத்தக்கது. ஆனால், இந்நாட்டிற்கூட அப்பொழுதுதான் இவ்வுண்மை காணப்பட்டது போலும் என்று நினைந்துவிட வேண்டா. வேத காலத்திற்கூட வடநாட்டாரும், தென்திசையில் வாழும் தமிழரும் இவ்வுண்மையை அறிந்திருந்தனர். தாவரங்கட்கும் உயிர் உண்டு என்ற உண்மையை அறிந்ததோடு நிறுத்தி விட்டனர் இற்றை நாள் அறிவியல் நூலார். ஆனால், பழங்காலத்தில் நம் நாட்டில் வாழ்ந்த பெரியோர் இவ்வுண்மையை அறிந்ததோடு நில்லாமல், இன்னும் ஒரு படி மேலே சென்று, இத்தாவர உயிர்கட்கும் நமக்கும் உள்ள தொடர்பைக்கூட அறிந்தனர்; தாவர உயிர்களுடன் உறவு கொண்டாடவும் தொடங்கினர்.