182 • அகமும் புறமும்
–––––––––––––––––––––––––––––––––––––
மிகப் பழைய நூலாகிய ‘தொல்காப்பியம்’ தமிழ் மொழியினுடைய இலக்கணத்தை அறிவிக்கும் நூல். அது மொழி இலக்கணத்தை மட்டும் அறிவிப்பதுடன் நின்று விடாமல், அம்மொழி பேசும் தமிழர்களுடைய வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தது. இப்பெருமை—உலகப் பல்வேறு மொழி இலக்கணங்களுள்ளும் தமிழ் மொழி இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் தாவரங் கட்கும் உயிர் உண்டு என்ற உண்மை பேசப்படுவது—வியப்பே அல்லவா! ‘ஒன்றறிவதுவே உற்றறிவதுவே’ என்பது சூத்திரம். இது நன்கு விளங்குதற்பொருட்டு ஓரறிவு உடைய பொருள்கள்யாவை எனக் கூறத் தொடங்கி,
“புல்லும் மரனும் ஓர்அறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”
என்றும் பேசுகிறது தொல்காப்பியப் பொருளதிகாரம், மரபியல் சூத்திரங்களில். இதன் பொருள் ‘புல்லும் மரமும் ஓர் அறிவுடைய பிறவும் அக்கிளையும் பிறப்பும் உள்ளன.’ என்பதாம். புல்லுடனும் மரத்துடனும் கிளையாக உள்ள பிற உயிர்கள் புதர், கொடி என்பன. அதைவிடச் சிறப்பான உண்மை இரண்டாம் அடியிற் பேசப்படுகிறது. மக்களானும், விலங்கானும் பெறப்பட்ட குழந்தைகளும் தொடக்கத்தில் ஓர் அறிவினவாகவே உள்ளன என்கிறார் தொல்காப்பியனார். இவற்றால் தாவரங்களை உயிர்ப் பொருள்களாகவும் மக்களுடன் தொடர்புடையனவாகவும் கொள்கிறார் என்பதும் நன்கு விளங்கும். இக்கருத்தை மேலும் வலியுறுத்தவே போலும் இத்தாவரங்களின் இளங்கன்றுகட்குத் தொல்காப்பியனார் பெயரிடு முறை அமைந்துள்ளது!