பக்கம்:அகமும் புறமும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 237


இவ்வாறு நாம் பொருள் கொள்வது சரியானதுதான் என்பதனை,

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,
கங்கை வாரிதியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்
அரியவும், பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகு

(பட்டினப்பாலை 185–193)

என்னும் தொடர்கள் விளக்குகின்றன.

(கடல் வழியாக–பாய்மரக்கப்பலில் கொண்டுவரப் பெற்ற நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளும் மேலைக் கடற்புறத்திலிருந்து கொணரப்பெற்ற கரிய மிளகுப் பொதிகளும், பொதிய மலையில் கிடைக்கும் சந்தன, அகிற்கட்டைகளும் கொற்கைத் துறையிலிருந்து வந்த முத்தும் கீழைக் கடல் பவழமும், கங்கையாற்றங்கரை வளமும் (யானை, மாணிக்கம், பொன்) கடாரத்திலிருந்து பெறப்பட்ட நுகர் பொருள்களும் சீனத்திலிருந்து தருவிக்கப் பெற்ற கருப்பூரம், பனிநீர், குங்குமம் முதலவாய பல பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி இடப்பட்டிருந்தன)

இவற்றுள் புரவி முதலியன கடல்வழி (கலத்தில்) வந்தவை. மணி, பொன் முதலியன நிலத்து வழி (காலின்) வந்தவை, என்று அறிகிறோம்.

குணகடல் துகிர் என்னும் பொழுது இன்றைய ஆஸ்திரேலியப் பகுதியின் பவழத்தைக் குறிக்கின்றது என்று கொள்வதில் பிழையில்லை.