பக்கம்:அகமும் புறமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 • அகமும் புறமும்


முற்றா இளம்புல் என்பதனால் அதற்குரிய பக்குவம் கூறப்படுகின்றது. அதனை உண்ணாமல் தைவரல் என்பது காதல் என்பது உடலுறு புணர்ச்சியைக் காட்டிலும் உள்ளப் புணர்ச்சியையே குறிக்கின்றமை தெளிவு.

உண்மையான காதலில் அன்றாடம் புதுமை தோன்றும் என்பதனை ‘விருந்தே காமம்’ என்பதன் மூலம் பெற வைக்கின்றார்.

கபிலன், மிளைப் பெருங்கந்தன் ஆகியோர் பாடல்களில் சொல்லப் பெற்ற கருத்துகள் ஏறத்தாழ 28 அடிகளில் பேசப்பட்டுள்ளன.

கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டவல்ல வள்ளுவப் பேராசான் தன் ஒரு குறட்பாவில் இத்துணைக் கருத்துக்களையும் பெய்து காட்டுகிறார்.


மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

(குறள்–1289)

இக்குறட்பா ஆழமான பொருட் செறிவு உடையது.

மலர் என்ற சொல்லால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதற்கு அமைந்து உள்ள பெயரைக் குறிப்பிடுகிறார்.

அரும்பு, முகை, போது என்பன இதற்கு முன்நிலையைச் சுட்டுவன. வீ, செம்மல் என்பன பின்நிலையைக் காட்டுவன.

எனவே மலர் என்பதால் காதற்குரிய பக்குவத்தை அறிய வேண்டும் என்று நினைவூட்டுகிறார். மேலும் மெல்லிது என்று குறிப்பிடுவதன் வாயிலாய் இம்மன நிலையைத் தெரிந்துகொள்ளா விட்டால் காதல் சாதலாகி விடும் என்பதனையும் பெற வைக்கிறார்.

இரண்டாம் அடியில் செவ்வி (பக்குவம்) என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் இது மனநிலையையே குறிப்பிடும் என்று வலியுறுத்துகின்றார்.