பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அசோகனுடைய சாஸனங்கள்

விரோதமென்று கருதப்பட்டதால் வித்வான்கள் இதன் ஆராய்ச்சியைப் பல நூற்றாண்டுகளாக அசட்டைசெய்தனர். ஆயினும் சிலவருஷங்களுக்குமுன் தஞ்சாவூர் ஜில்லாவிலிருந்து இப்புஸ்தகத்தின் பிரதி கிடைத்திருக்கின்றது. இப்பிரதி கிடைத்தது முதல் இந்த அர்த்தசாஸ்திரத்தின் ஆசிரியன், காலம், இதன் முதல் நூல்கள், இதிலுள்ள விஷயங்கள் முதலியன பலவித ஆராய்ச்சிகளுக்குக் காரணமாயிருக்கின்றன. கௌடல்யனுடைய அர்த்தசாஸ்திரத்திலிருந்து தெரியவரும் விவரங்களை ஏறக்குறைய சந்திரகுப்தனுடைய ஏகாதிபத்தியத்தின் தன்மையாகக் கொள்ளலாமென்று அறிஞர் ஒப்புக்கொள்ளுகின்றனர்.

மெகாஸ்தனிஸ் எழுதியுள்ள புஸ்தகத்தின் பாகங்களையும் கௌடல்யனுடைய் அர்த்தசாஸ்திரத்தையும் இசைத்து நோக்குமிடத்து மோரிய அரசாட்சி, தொடக்கத்தில் எவ்விதம் நடைபெற்றது என்பது விளங்குகின்றது. பூர்வ இந்திய சரித்திரத்தில் வேறு எக்காலத்திற்கும் இத்தகைய நுட்பமான விவரணம் கிடைப்பதில்லை. அது மட்டுமல்ல, இதற்கு ஒப்பான விவரணத்தைக் காண்பதற்கு நாம் கி. பி. பதினாறாம் நூற்றாண்டுவரையும் பிரயாணஞ் செய்யவேண்டும். அக்பர் காலத்ததான ‘ஆயின்-இ-அக்பரீ’, என்ற துரைத்தனவிளக்கத்தில் மட்டுமே நாம் இத்தகைய விவரங்களைக் காணலாம்.

ஆயினும் சந்திரகுப்தனுடைய துரைத்தனத்தை விவரிப்பது இவ்வியாசத்திற்குப் புறம்பானது. அசோகனுடைய புதிதான ராஜீய நோக்கங்களை விளக்குவதற்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவே இவற்றைப்பற்றி இங்குக் கூறுவது சாத்தியம். அசோகனுடைய காலத்தில் ஏகாதிபத்தியத்தின் பெருமை ஒருவிதத்திலும் குன்ற