பக்கம்:அஞ்சலி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 131

அன்னி ராவுலே அவன் கனவுலே வந்தான். நான் காவா மேட்டுலே மரத்தடிலே நிக்கற மாதிரியிருக்குது. அவன் எதிர்க் கரையிலே நிக்கறான், பால் மறக்கடிச்ச குழந்தையாட்டம் மொவத்துலே சொல்ல முடியாத வெசனம் தேங்கி நிக்குது.

“பூரணி”—தண்ணி ரொப்பி வெச்சத் தவலையைத் தட்டினாற்போல அவன் குரல் அழுகையோடு என்மேலே பாஞ்சுது.

“பூரணி, ஏன் எச்சில் என்கிறே? நீ சோறு துண்ணச்சே உன் கொழந்தைங்க ஆடி அசைஞ்சு நடந்து வந்து கைய நீட்டினால், நீ உன் கலத்துலேருந்து உண்டை சோறு உருட்டி அவங்க கையிலே சிரிச்சுட்டே கொடுக்கல்லே? நான் உன் எச்சிலைத் தின்னா அது ஒரு அடையாளமாத்துன்னேன். அன்னிக்கு உன்னை நான் கண்டபோது இன்னிக்குத்தான் உன்னைக் கண்டாலும் மூவாயிரம் வருசங்களாகத் தெரியும் ஒண்னு நெஞ்சிலே உறைச்சுப் போச்சு. பூரணி, உன் எச்சிலை நான் தின்னல்லே. இந்த மூவாயிரம் வருசமா உனக்கும் எனக்குமா விதவிதமா வந்த உறவைத்தான் ருசி பார்த்தேன். இத்தனை வருசங்களிலே இந்தப் பூமியிலே எத்தனை பிறப்பு நீயும் நானும் எடுத்திருப்போம்? ஒண்ணுலே நீ எனக்குத் தாயாயிருந்திருப்பே. உனக்கு நான் புள்ளையாய்ப் பொறந்து உன் மடிலே கொஞ்சியிருப்பேன். இன்னொண்ணுலே உடன்பிறப்பாயிருந்திருப்போம். என் தங்கையாயிருந்தா உன்னை நான் தோளிலே தூக்கி வெச்சிட்டு ஊரெல்லாம் சுத்தியிருப்பேன். எனக்கு அக்காவா இன்னொனுலே நீ வாச்சிருந்தா என்னைத் தூக்கிட்டு நீ சுத்தியிருப்பே. எனக்குப் பாட்டியாயிருந்திருப்பே. உனக்கு நான் பேரனாயிருந்திருப்பேன். ஒரு புறம் புலே சும்மா வேண்டியவங்களா யிருந்திருப்போம். இன்னொன்னுலே வேண்டாதவங்களாவே யிருந்திருப்போம். நடுவுலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/141&oldid=1025685" இலிருந்து மீள்விக்கப்பட்டது