பக்கம்:அஞ்சலி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 249

“டாக்டர், என் நோய் உங்கள் சிகிச்சைக்கு மீறினது—”

“அட, உங்கள் சமையல் அவ்வளவு மோசமா என்ன? நான் உங்களுக்கு மாமியாரில்லை. நான் ஒப்ப மாட்டேன். அன்னி ஒருநாள் தித்திப்புச் சேவை தந்தீங்களே, நினைச்சா இன்னும் நாக்கிலே தண்ணி ஊறுது.”

“டாக்டர், முதலில் உங்களை சொஸ்தப்படுத்திக் கொள்ளுங்கள்.”

“ஏது, மாமிகிட்ட விஷயம் ரொம்ப இருக்கும்போல இருக்குதே!—நாக்கை நீட்டுங்க—”

“டாக்டர், உங்கள் மனைவி நிரபராதி!”

டாக்டர் உடல் குலுங்கிற்று. விழி தெறித்துவிடும் போல் பிதுங்கிற்று. -

“டாக்டர். நான் சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் மனைவி நிரபராதி. அவளை அழைத்துவந்து குடித்தனம் நடத்துங்கள். அவள் வெள்ளை.”

“நான்—நான—”

“நீங்கள் சொல்ல வருவது எனக்குத் தெரியும். யாருக்குமே தெரியாது. நீங்கள் பூட்டி வைத்திருந்த உங்கள் பத்துவருஷ ரகஸ்யம் எனக்கு எப்படித் தெரிந்தது? டாக்டர், நான் பந்தமறுந்த அந்தரத்தில் தொங்குகிறேன். பூமியின் வளைவு மட்டுமல்ல, கோளம் அந்தரத்தில், அதன் அச்சில் திரும்புவதே எனக்குத் தெரிகிறது. காலமெனும் உரை என்னின்று கழன்று விழுந்தது. உங்களுக்குத்தான் வருடம், வயது, முன், பின், இரண்டின் நிழல் தட்டிய இப்போ எல்லாம், எதுவும் எனக்கு நிமிஷம் என்ற நியமனத்தின் உப்பல்தான். ‘புஸ்’ஸென்று ஊதின பலூன் —டப்! உங்கள் நெஞ்சின் ஏடுகள் என் கண்ணெதிரே புரள்கின்றன. ஆகையால் டாக்டர், முதலில் உங்களை சொஸ்தப்படுத்திக் கொள்ளுங்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/259&oldid=1033536" இலிருந்து மீள்விக்கப்பட்டது