“எது?”
“இப்படி நான் உன்னை விட்டுப் போவது.”
மறுபடியும் மெளனம்,
“கீச்கீச்”
வெளியே ஆகாயத்தில் ஒரு குருட்டுப் பறவை.
“தரங்கிணி!”
“ம்...ம்!”
அவன் தன் உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டே “நீ சந்தோஷமாயிருக்கிறாயா!”
“இல்லாமலென்ன?”
“இல்லை. நீ இல்லை.”
“இருக்குன்னா இல்லை என்போம். இல்லேன்னா இருக்கு என்போம். இப்படித்தான்—”
அவன் வெகு பொறுமையுடன், சற்றுப் பணிவுடன் கூட, “இல்லை, அப்படியில்லை. இப்படித்தான் இருந்தோமா, இதற்கு முன்னால்?”
“இப்போ எப்படியிருக்கோம்?”
“எப்படியிருக்கோமா?”—சிரித்தான். “இதுமாதிரி தான். நான் வருகிறேன். வந்த இடத்தில் என்னையறியாமலே உட்கார இடம் தேடுகிறேன். நான் வந்தால் நீ சர்வமரியாதையுடன் எழுந்து நிற்கிறாய். ஏதோ பேசுகிறோம் பேசிக்கொண்டிருக்கையில் முன் வார்த்தை மறந்துவிடுகிறது பின் வார்த்தை மறந்துவிடுகிறது. வாய் வார்த்தை அப்படியே வாயில் உறைந்துபோய்க் கல்லாய்த் தொங்குகிறது. பேச்சு சிக்குகிறது. இப்படித்தான் நாமிருந்தோமா? இத்தனை வருடங்கள் கழித்து இந்தச் சொற்ப காலத்துள் நம்மிடையில் ஏன் இப்படியெல்லாம் நேர்ந்துவிட்டது? கைகாட்டி மரங்கள் கூட நம்மைவிடக் கல