பக்கம்:அடி மனம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அடிமனம்

வெறும் பரிகாசம் செய்வதோடு நின்று விடாமல் தங்கள் ஆட்சேபங்களைத் தெளிவாக வறையறுத்துக் கூறமுயன்றார்கள். பிராய்டை ஆமோதித்துப் பின்பற்றியவர்களில் ஆட்லர், யுங் (Jung) ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரையும் பிராய்டின் மாணவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் ஆட்லர் அதை ஒப்புக் கொள்வதில்லை. அவர் பிராய்டின் கருத்துக்களை ஆரம்பத்தில் ஆமோதித்துச் சுமார் பனிரண்டு ஆண்டுகள் அவரோடு உழைத்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை. பிராய்டு தமது தொழிலை நடத்திய வியன்னாவில் குறிப்பிடத்தக்க சிலர் அவரைப் பின்பற்றிச் சேர்ந்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் தான் ஆட்லர்.

ஆனால் பிற்காலத்தில் ஆட்லர் பிராய்டுடன் கருத்து வேறுபாடு கொள்ளலானார். வாழ்க்கைப் போக்கில் பாலுணர்ச்சிக்குப் பிரதான இடம் அளிப்பதை அவரால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலுணர்ச்சியானது வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது என்பதை அவர் அநேகமாக ஏற்றுக் கொண்டாலும் அதுவே வாழ்க்கையின் போக்கை அமைக்கிறது என்பதை அவர் சரியென்று கருதவில்லை. வாழ்க்கையின் போக்குக்கு அடிப்படையான வேகம் கொடுத்து அதை அமைப்பது ‘உயர்வுந்தல்’ என்பதே என்று அவர் கருதினார்.

ஒவ்வொருவனும் தான் ஏதாவது ஒரு வகையில் உயர்வடைய வேண்டும் என்ற ஒரு வேகத்தைக் கொண்டிருக்கிறான். தாழ்மை உணர்ச்சிக்கு எதிராக இந்த வேகம் தோன்றுகிறது. இதற்கு ‘உயர்வுந்தல்’ என்று பெயர். இதுவே வாழ்க்கையின் போக்கை அமைப்பதில் தலைமை இடம் வகிக்கிறது என்று கூறி ஆட்லர் ஒரு புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/37&oldid=1004427" இலிருந்து மீள்விக்கப்பட்டது