பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

“பாமா மிகப்பொல்லாதவள்! படித்த பெண்! ஆகவே, அம்மா எதைச் சொன்னாலும் குற்றங் கண்டுபிடிக்கிறாள்” என்று அந்த ஊர் குளத்தங்கரையில் குப்பம்மாள் கூறினாள்.

“ஆனால், பாமா, நல்ல அழகு! தங்கப் பதுமை போன்றவள்! தாய்க்கு ஒரே மகள்! தகப்பனுமில்லை பாபம்! அவர்கள் சொத்தைப் பார்த்துக்கொள்ள, பாமாவிற்குப் புருஷன் எந்தச் சீமையிலிருந்து வருவானோ தெரியவில்லை” என்றாள் அன்னம்மாள்.

“பாமாவின் கண்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, சினிமாவிலே, யாரது, அந்த தேவிகா ராணியோ என்னமோ பேர் சொல்கிறார்களே, அதே கவனம் வருகிறதடி” என்றாள் குப்பம்மாள்,

‘’என்றைக்காவது பாமா, குளத்துக்கு வந்தால், எனக்கு, ஒரு பாட்டு கவனத்துக்கு வருவதுண்டு” என்றாள் சொர்ணம்.

“அது என்ன பாட்டுடியம்மா, கொஞ்சம் சொல்லேன்” என்று எல்லோருமாகக் கேட்டனர்.

சொர்ணம் “தாமரை பூத்த குளத்தினிலே முகத் தாமரை தோன்றிட வந்தனளே!” என்று பாட ஆரம்பித்தாள்.