பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


இரும்புத் தாதை எடுத்து விறகைப்போட்டு வெப்பம் ஏற்றியிருக்கிறார்கள். இப்போது நெய்வேலி நிலக்கரியை வைத்து உருக்காலை ஏற்படுத்தலாம் என்றால் “ஏ! அப்பா; எவ்வளவு தூரத்துக்கு எவ்வளவுதூரம் " என்கிறார்கள். ஆனால், இவர்களே அமைத்திருக்கும் உருக்காலைக்கு வெகுதூரம் சென்று தான் நிலக்கரி கொண்டு வருகிறார்கள்.

நெய்வேலி -- சேலம் இரண்டையும் வைத்து நல்ல தரமான இரும்பை உருவாக்கலாம் என்றால். யோசிப்போம் என்கிறார்கள். ஜம்ஷட்பூரில் உள்ள இரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி அதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய வேண்டுமென்றார்கள் -- தமிழக மக்களும் காத்திருந்தார்கள். இது நல்ல தரமானது என்றும்-அதில் நல்ல இலாபம் கிடைக்குமென்றும் ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள்.

இந்த ஆராய்ச்சி போதாது என்று நார்வேயிலுள்ள ஆராய்ச்சிச்சாலைக்கு அனுப்பி இரும்பையும் நிலக்கரியையும் ஆராயவேண்டுமென்றார்கள். அனுப்பப்பட்டது. தமிழகத்து மக்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். இது உலகத்தில் இருக்கின்ற எல்லா நல்ல இரும்புகளையும் போலவே இலாபம் தரக்கூடியது என்றார்கள்.

அதற்குப் பிறகும் மௌனமாக இருந்தார்கள். "ஏன் இல்லை?" என்று தமிழக மக்கள் கேட்டபோது "ஜெர்மனிக்கு அனுப்பவேண்டும்!; என்றார்கள். அவர்களும் இதே பதிலைத்தான் சொன்னார்கள்.

தமிழகத்து மக்கள் மறுபடியும் காத்திருந்தார்கள்.

இதுமேற்கு ஜெர்மனியில் ஆராய்ச்சி செய்தது போதாது; கிழக்கு ஜெர்மனிக்கு அனுப்ப வேண்டும் என்றார்கள்.