12. தமிழாலும் இயலும்
தமிழ் மொழியைப் பயிற்சி மொழியாக்கும் பணியில், வளர்ச்சி அடைந்து வரும் கட்டமாக இன்று ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பயிற்று மொழித் தொடக்க விழா தொடங்குகிறது. என்னுடைய நண்பரும், கல்லூரி முதல்வருமான பெருமாள் அவர்களுக்கு இந்த விழாவில், தமிழ்ப் பெரும் புலவர் என்று பட்டம் வழங்கியது பாராட்டுக்குரியதாகும்.
நாம் எல்லாம் தமிழ் ஆர்வத்தைப் பெறத் தக்க விதத்தில், என்னுடைய நண்பர்கள் இருவரும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். நாம் எண்ணியதைச் செயல்படுத்த, முதலில் ஆர்வம் வேண்டும். ஆர்வம் இருந்தால்தான், நம்பிக்கை பிறக்கும். பிறகு, அதற்கான வழி வகைகளை ஆராய வேண்டும். அதைச் செயற்படுத்த ஆற்றல் வேண்டும். நாம் மட்டும் ஆற்றல் பெற்றால் போதாது. அந்த ஆற்றல், மற்றவர்களுக்கும் வரும்படிச் செய்ய வேண்டும். இத்தனக்கும் பிறகுதான், நாம் எண்ணியதைச் செயல்படுத்த முடியும்.
தமிழில் பாட மொழி இருக்க வேண்டும் என்பது-என்று சொல்வது இந்த நாட்டில்தான் தேவைப் படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலந்தான் பாட மொழி என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. எந்த நாட்டிலும் இல்லாத விந்தை இங்கேதான் இருக்கிறது.