உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யம் திருத்தி அமைக்கக் கூடிய, திருத்தி அமைத்தால், பண்பும் பயனும் தரக்கூடிய நிலையில் தான் இருக்கிறது.

சுக்கு நூறாகி விட்ட கலம், கடலடி சென்று, ஆண்டு பல ஆன பிறகும், விஞ்ஞானக் கருவிகள் மூலம் கடலடி சென்று, கலத்தின் பகுதிகளையும், அதிலிருந்த பொருள்களையும் எடுத்து வரும் பெரு முயற்சியில், மேலை நாட்டவர் வெற்றிகரமாக ஈடு படுகிறார்கள் என்றால், ஒரு காலத்தில் உன்னதமான நிலைமையில் வாழ்ந்து, உலகிலே உயரிடம் பெற்றுத் திகழ்ந்து, இடைக் காலத்திலே எத்தரின் பிடியிலே சிக்கியதால் சீரழிந்த நாட்டையும், சமுதாயத்தையும் புதுப்பிப்பது ஏன் சாத்யமாகாது? இந்தத் தளராத நம்பிக்கைத்தான், மறுமலர்ச்சி இயக்கத்திலே பணி புரிபவர்களுக்கு உள்ள பெரியதோர் துணை.

கடந்த பத்தாண்டுகளிலே, நாடகத்துறையிலே ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால் மறுமலர்ச்சி இயக்கத்தின் வேகமும், வெற்றியும் விளக்கமாகத் தெரியும்.

நாடகம் :— இன்று நள்ளிரவுச் சத்தமல்ல—நடையாலும் உடையாலும் விழியாலும் மொழியாலும், அரைத் தூக்கத்திலிருப்பவர்களுக்கு ஆனந்தம் தர முயற்சிக்கும், வெறும் ஆடல் பாடல் அல்ல! நாடகம், இன்று நாட்டுக்கு ஒரு நல்லாசனாக முன் வந்திருக்கிறது—துணிவுடன்!

‘ரிஸ்ட்வாச்’ கட்டிய கரத்துடன், அசோக வனத்திலே அழுது கொண்டிருக்கும் சீதையை, போலோ காலர் ஷர்ட்டும் பொன் முலாம் பூசிய பல்லும், பாலிஷ் போட்ட ஸ்லிப்பரும், தங்க நிற பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியும் தரித்துக் கொண்டு வரும் கோவலனையும், ஓரடி பாடிடும் அனுமானையும் இன்று நாடக மேடைகளிலே அநேகமாகப் பார்க்க முடியாது—ஏராளமான பொருட்செலவில் ஓருவரிருவர், இந்தப் பழங்காலச் சின்னங்களைப் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள்—பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்த இந்த நாடகக் காட்சிகளை இன்று பார்க்க முடிவதில்லை. இன்று நாடக மேடையிலே, மனிதனைக் காண முடிகிறது, பல கோணங்களில் பல நிலைமைகளில்! இந்த மகத்தான மாறுதல், நாடக உலகிலே மட்டுமல்ல, அதன் மூலம் நாட்டு மக்களிடையே, பெரியதோர், மன மாறுதலை உண்டாக்கிவிட்டது.

இயல், இசை, நாடகம், மக்கட்கு அறிவு வளர, ஆர்வமூட்ட, அகமகிழ்ச்சி பிறக்க, நன்னெறியைக் காட்டப் பயன்பட வேண்டும்.

அதிலும், நாடக மூலம், இந்தப் பலன்களை, எளிதில் அடைய முடியும்—இயலிலும் இசையிலும், கருத்துரைகளைக் கேட்க மட்-