பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வஞ்ச மகள் செயல்

99


அவன் சிரித்துக் கொண்டான். “முடியுடை மூவேந்தர்களில் ஒருவராகிய சேர அரசரையா சந்திக்க விரும்புகிறாய்? போர் மூண்டிருக்கிற இந்தச் சமயத்தில் எங்கள் பாசறையில் புகுந்ததோடு, அரசரையே பார்க்கவேண்டும் என்று சொல்கிறாயே: உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ?”

“அரசரிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. அதை அவர் தெரிந்துகொண்டால் எனக்கு எது வேண்டுமானாலும் தருவார்.”

“ஓகோ அரசரிடம் பரிசு பெற வந்திருக்கிறாயா? அதை என்னிடம் கேள்; நானே தருகிறேன்.”

வந்த பெண் சற்றே சினம் கொண்டாள். “உங்களைப் பார்த்தால் பொறுப்புள்ள பதவி தாங்குகிறவர்கள் போலத் தெரிகிறது. ஆனால் உங்கள் பேச்சு அதற்கு ஏற்றபடி இல்லையே! நான் வலிய வந்து உங்களிடம் உங்கள் நன்மையைக் கருதி ஒன்று சொல்லக் கருதினால் இப்படி இகழ்ந்தா பேசுவது? இது ஆண்மையும் அன்று; அரசியல் தந்திரமும் அன்று.”

அந்தப் பேச்சைக் கேட்டதும் பிட்டங் கொற்றன் அயர்ந்து போனான். அவளை அழைத்துக் கொண்டு காரியிருந்த கூடாரத்துக்குச் சென்றான். “இந்தப் பெண் நம் அரசரைப் பார்க்கவேண்டுமாம்; ஏதோ ஓர் இரகசியமான செய்தியைக் கூற வேண்டுமாம்” என்றான்.

காரி அவள் முகத்தைப் பார்த்தான். உடம் பைத்தான் அவள் மூடிக் கொண்டிருந்தாளே! “உன்னை யார் அனுப்பினார்கள்?” என்று கேட்டான்.

“யாரும் அனுப்பவில்லை; நானேதான் வந்திருக்கிறேன்.”

“நீ எங்கே இருக்கிறவள்? உனக்குச் சுற்றத்தார் யார்?”